Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 3 மாதங்களில் நிறைவடையும்

Print PDF
தினமணி         26.03.2013

பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 3 மாதங்களில் நிறைவடையும்


கடலூரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 3 மாதங்களில் முடிவுறும் என மாவட்டக் கண்காணிப்பு அதிகாரியிடம் குடிநீர் வாரிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டப் பணிகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனை, தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், சில்வர் பீச்சில் உள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்கா, படகு குழாம்களைப் புதுப்பிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினத்தில் கட்டப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்ட பணிக்கான சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டு, அங்கிருந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அதிகாரிகள் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரை கெடிலம் ஆற்றில் கலக்க மூன்றரை கி.மீ. தூரத்துக்கு குழாய் பதிக்கப்பட வேண்டியுள்ளது.

இதற்கான குழாய்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குழாய்கள் வந்ததும், ஏப்ரல் மாதத்துக்குள் புதைக்கப்பட்டு விடும்.

இருப்பினும், பிரதான உந்து (பம்பிங்) நிலையத்தில் மூன்று கிணறுகளில் இரண்டு அமைக்கப்பட்டதாகவும், ஒரு கிணறு இறக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அதேப் போன்று வண்ணாரப்பாளையத்தில் மேன்ஹோல் அமைக்கும் பணியும், குழாய் புதைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்தப் பணிகள் வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்றனர்.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறிய காலக்கெடுவை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், இந்தப் பணியை அடுத்த மாதக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என்று அதிகாரிகளிடம் ககன்தீப்சிங்பேடி தெரிவித்தார்.

தொடர்ந்து, வண்ணாரப்பாளையத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணி, புதிதாக அமைக்கப்பட்ட ஜவான்ஸ் பவன் சாலை ஆகியவற்றை பார்வையிட்டார்.

தேவனாம்பட்டினம் உப்பனாற்றங்கரையில் கட்டப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டபோது, தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்புப் பகுதி மக்கள், ககன்தீப்சிங்பேடியின் காரை சூழ்ந்து கொண்டு, தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுவதாகக் கூறியதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி கூறினார்.
 

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க சிவகாசி மக்கள்... எதிர்பார்ப்பு தேவை நகராட்சி நிர்வாக நடவடிக்கை

Print PDF
தினமலர்          11.03.2013

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க சிவகாசி மக்கள்... எதிர்பார்ப்பு தேவை நகராட்சி நிர்வாக நடவடிக்கை


சிவகாசி: சிவகாசியில் "மினரல் வாட்டர் பிளான்ட்' அமைத்து, குறைந்த விலைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை, நகராட்சியால் ஏற்படுத்த,பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகாசி நகராட்சியில் வாரம் இருமுறை, பகுதிவாரியாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மானூர் கூட்டு குடிநீர்,வெம்பக்கோட்டை நீர் தேக்க திட்டங்கள் மூலம், தினம் 40 முதல் 50 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. நகராட்சியில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகித்தாலும், உடல் நலனின் அக்கரை கொண்ட 60 சதவீத மக்கள், சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிப்பதையே விரும்புகின்றனர். சிவகாசியில் தனியார் மினரல் வாட்டர் விற்பனையும் சூடு பிடிக்கிறது. தினம் 50க்கு மேற்பட்ட மினிடேங்கர் லாரிகள், டிராக்டர்கள் வீதி,வீதியாக வந்து, 18 லிட்டர் கொண்ட ஒரு குடம் நீரை 13க்கு விற்பனை செய்கின்றனர்.

பலர் கடைகளிலே பிளாஸ்டிக் டேங்க் வைத்து, லிட்டர் நீர் 70 காசுக்கு விற்கின்றனர். சுத்திரிகரித்து குடிநீர் விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்களிடம் 1000 லிட்டர் குடிநீரை 100க்கு வாங்கி, அதை வீதிவியாககொண்ட சென்று, 700 முதல் 800 ரூபாய் வரை விற்கின்றனர். முகூர்த்த நாட்களில் மண்டபங்களுக்கு சப்ளை செய்து கூடுதல் லாபம் பார்க்கின்றனர். இதில் ஈடுபடுவோர், வாகன பராமரிப்பு,டீசல் செலவு போக, தினம் 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.

தற்போது கோடை துவங்கியதால், குடிநீர் வியாபாரமும் களை கட்டி உள்ளது.இச் சூழலில் சிலர்,முறையாக சுத்திகரிக்கப்படாத குடிநீரை கூட விற்று, லாபம் பார்க்கின்றனர். இதனால் மக்கள், பணம் கொடுத்தும் சுகாதாரமற்ற குடிநீரை பருகும் நிலையும் உள்ளது. இதை கருத்தில் கொண்டு,நகராட்சி மூலம் சுத்திகிரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, முயற்சி மேற்கொள்ள வேண்டும். சிறிய ஊராட்சிகளில் கூட மினரல் வாட்டர் பிளாண்ட் அமைத்து, வீடுகளுக்கு குடிநீர் வழங்குகின்றனர். இதே திட்டத்தை நகராட்சியிலும் அமல்படுத்த வேண்டும். ஆர்.ஓ., சிஸ்டம் மூலம் ஒரு மணிநேரத்திற்கு, 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் சுத்திகரித்து தரும் மெகா பிளாண்ட்டுகள் உள்ளன. நகராட்சி வாட்டர் டேங்கில் சுத்திகரிக்கும் பிளாண்ட் அமைத்து, காயின் பாக்ஸ் மாடலில் ஒரு குடம் குடிநீரை 5 விற்பனை செய்யலாம்.

மக்களே நேரிடையாக வந்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பணம் கொடுத்து பெற்று செல்வார்கள். இத் திட்டத்தால் நகராட்சிக்கு தினம் பல ஆயிரம் வருமானமாக கிடைக்கும். மக்களுக்கும் முறையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும்,குறைந்த விலைக்கு கிடைக்கும்.இதை செயல்படுத்த நகராட்சி முயற்சி மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடக்கம்

Print PDF
தினமணி         05.03.2013

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடக்கம்


புதுச்சேரி உப்பளம் தொகுதியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இத்தொகுதியில் புதிய குடிநீர் சுத்ததிகரிப்பு நிலையம் அமைப்பதற்காக ரூ.24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சுத்திகரிப்பு நிலையத்தை அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

விழாவில் பொதுப்பணித்துறை சுகாதார கோட்ட செயற்பொறியாளர் ஜெ.ஜெயக்குமார், உதவிப் பொறியாளர் எஸ்.ரமணி, இளநிலைப் பொறியாளர் கே.ஜெயராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 


Page 5 of 28