Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் 90 மில்லியன் லிட்டர் தினமும் வினியோகம்

Print PDF

தினகரன் 23.09.2010

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் 90 மில்லியன் லிட்டர் தினமும் வினியோகம்

சென்னை, செப்.23: மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலைய செயல்பாடுகள் குறித்து, சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் சிவ்தாஸ் மீனா, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

வறட்சிக் காலங்களிலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டப் பணிகள் முடிந்து ஜூலை 31ம் தேதி, முதல்வர் கருணாநிதி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இங்கு, ஒரு நாளைக்கு 90 மில்லியன் லிட்டர் கடல் நீர் குடிநீராக்கப்படுகிறது. திருவொற்றியூர், கத்திவாக்கம் நகராட்சிகள் மற்றும் அப்பகுதி தொழிற்சாலைகளுக்கு பகிர்ந்தளிக்க, மணலி கீழ்நிலை தொட்டிக்கு 15 மில்லியன் லிட்டர் குடிநீர் தரப்படுகிறது.

பட்டேல் நகர் பகிர்மான நிலையம் மற்றும் அப்பகுதி தொழிற்சாலைகளுக்கு மாதவரத்தில் உள்ள கீழ்நிலை தொட்டிக்கு 35 மில்லியன் லிட்டர் குடிநீர் கொடுக்கப்படுகிறது. மீதியுள்ள குடிநீர் வட மற்றும் மத்திய சென்னையின் சில பகுதிகளின் பகிர்மானத்துக்காக புழல் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. இந்த திட்டம் எதிர்பார்த்த பலனை தந்துள்ளது.

வடசென்னையில் குடிநீர் இணைப்புகளில் கசிவு இருக்கும் 42 ஆயிரம் இடங்கள் கண்டறியப்பட்டது. இதை சரி செய்யும் பணி மழைக் காலம் தொடங்குவதால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

டிசம்பருக்கு பிறகு மீண்டும் தொடங்கும். பிளாஸ்டிக் பை, குப்பை, விலங்கு கழிவுகளால் கழிவு நீர் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து, 28ம் தேதி விழிப்புணர்வு பிரசாரத்தை மாநகராட்சியுடன் இணைந்து தொடங்குகிறோம் என்றார்.

 

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் 10 கோடி லிட்டர் சப்ளை!

Print PDF

தினமலர் 23.09.2010

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் 10 கோடி லிட்டர் சப்ளை!

சென்னை ""மீஞ்சூரிலிருந்து கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் மூலம் 10 கோடிலிட்டர் குடிநீர் சென்னைக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. நெமிலியில் நிறுவப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அடுத்த ஆண்டு டிசம்பரில் முடிவடையும்,'' என, சென்னைக் குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் சிவதாஸ் மீனா கூறினார்.சென்னை மக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு, மீஞ்சூரில் 600 கோடி ரூபாய் செலவில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடல்நீர் எதிர்மறை சவ்வூடு பரவல் முறையில், உப்பு முற்றிலும் அகற்றப்பட்டு, குடிநீராக மாற்றப்படுகிறது.தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கும் வகையில், செயல்விளக்கத்திற்கு, சென்னைக் குடிநீர் வாரியம் ஏற்பாடு செய்தது. நிறுவனத்தின் சுத்திகரிப்பு முறை குறித்து வாரிய அதிகாரிகள் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தனர்.பின், சென்னைக் குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் சிவதாஸ் மீனா கூறியதாவது:மீஞ்சூரில் துவக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தினமும் பத்து கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. இதில், 1.5 கோடி லிட்டர் மணலி நீரேற்று நிலைத்திற்கு அனுப்பப்பட்டு, திருவொற்றியூர், கத்திவாக்கம் நகராட்சி பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.மாதவரம் நீரேற்று நிலையத்திற்கு 3.5 கோடி லிட்டர் குடிநீர் அனுப்பப்பட்டு, மாதவரம் மற்றும் வடசென்னை பகுதிகளுக்கும், மீதமுள்ள ஐந்து கோடி லிட்டர் குடிநீர், செங்குன்றம் நீரேற்று நிலையம் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.செங்குன்றம் ஏரி மூலம் 26 கோடி லிட்டர், வீராணம் ஏரியிலிருந்து 18 கோடி லிட்டர், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 12 கோடி லிட்டர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் 10 கோடி என மொத்தம் 66 கோடி லிட்டர் குடிநீர் தினமும் சென்னைக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.நெமிலியில் 871 கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணிகள் 2011 டிசம்பர் மாதம் நிறைவடையும். அதன் மூலம் தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும் என்பதால் சென்னை மக்களின் குடிநீர் தேவை பெருமளவு நிறைவேறும்.வடசென்னையில் புளியந்தோப்பு, அயனாவரம் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் வருவதாக புகார்கள் வந்தன. அந்த பகுதிகளில் உடனடியாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. 42 ஆயிரம் இணைப்புகள் கண்டறியப்பட்டு, அவற்றை மாற்றியமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

சென்னை தவிர ஆவடி, அம்பத்தூர், உள்ளகரம், புழுதிவாக்கம், மதுரவாயல், ஆலந்தூர் நகராட்சி பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டமிடப்பட்டு, அதற்கான உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.இவ்வாறு சிவதாஸ் மீனா கூறினார்."மக்கள் ஒத்துழைக்க வேண்டும்'கழிவுநீர் பிரச்னை குறித்து சிவதாஸ் மீனா கூறியதாவது:பாதாள சாக்கடையில் அடைப்புகளை சரி செய்ய மனிதர்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக 17 "டிசில்ட்' இயந்திரங்களும், 28 "ஜெட்ராடிங்' இயந்திரங்களும் வாங்கப்பட உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேலான இயந்திரங்கள் வந்துள்ளன. கழிவுநீர் அடைப்புகள் சரி செய்யும் பணி முடுக்கி விடப்படும்.பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கழிவுநீர் அடைப்பு ஏற்படும் காரணங்கள், பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை குறித்து, செப்.,28 முதல் பகுதி வாரியாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.இவ்வாறு சிவதாஸ் மீனா கூறினார்.

 

பணி ஆணை வழங்கப்பட்டது அதங்கோடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் விரைவில் துவக்கம் 14 மாதங்களில் முடிக்க திட்டம்

Print PDF

தினகரன் 22.09.2010

பணி ஆணை வழங்கப்பட்டது அதங்கோடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் விரைவில் துவக்கம் 14 மாதங்களில் முடிக்க திட்டம்

நாகர்கோவில், செப்.22: அதங்கோட்டில் ரூ16.70 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. பணிகளை 14 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குமரி&கேரள எல்லையை ஒட்டியுள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. களியக்காவிளை பேரூராட்சி, மெதுகும்மல், வாவறை, மங்காடு, குளப்புறம், அடைக்காக்குழி ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் களியக்காவிளை & மெதுகும்மல் கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. இதுபோன்று கொல்லங்கோடு & ஏழுதேசம் பேரூராட்சிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதி ஊராட்சிகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கொல்லங்கோடு & ஏழுதேசம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டங்களுக்கு அதங்கோடு அருகே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு அதில் இருந்து நீர்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

களியக்காவிளை பேரூ ராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க களியக்காவிளை &மெதுகும்மல் கூட்டு குடிநீர் திட்டம், கொல்லங்கோடு & ஏழுதேசம் 27 வழியோர கிராமங்கள் மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 79 வழி யோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அதங்கோட்டில் நிலம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. கடந்த டிசம்பரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ16.70 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய நகர திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் கூறியிருப்பதாவது:

குமரி மாவட்டத்தில் பயன்பாட்டில் உள்ள களியக்காவிளை பேரூராட்சி, மெதுகும்மல் ஊராட்சி, 22 வழியோர குடியிருப்புகளுக் கான கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் கொல்லங்கோடு பேரூராட்சி, ஏழுதேசம் பேரூராட்சி, 27 வழியோர குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் செயல்படுத்தப்பட்டது. அத்துடன் மேல் புறம் ஒன்றியத்தில் உள்ள 79 குடியிருப்புகளுக்கான திட்டத்திற்கும் என்று மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 347 பேர் பயன்பெறும் வகையில் நகராட்சி நிர்வாகத்தால் அரசாணை வெளியிடப்பட்டது. ஒப்பந்த புள்ளிகள் முடிவு செய்யப்பட்ட நிலையில் மதுரை தென் மண்டல பொறியாளரால் பணி ஆணை 17.9.2010 அன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தொடங்கப்பட்டு வரும் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 


Page 9 of 28