தினமணி 24.08.2010
மாநகராட்சியுடன் இணைந்த ஊராட்சிகளில் மகப்பேறு மையங்கள்
தூத்துக்குடி, ஆக. 23: தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள 10 ஊராட்சிகளிலும மகப்பேறு மையங்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
நகராட்சியாக இருந்த தூத்துக்குடி நகரம் கடந்த 5.8.2008 அன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை முதல்வர் மு. கருணாநிதி தொடங்கி வைத்தார். இதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு|ரூ| 5 கோடியில் புதிய கட்டடம் கட்ட முதல்வர் அடிக்கல் நாட்டினார். கட்டடப் பணிகள் முடிந்த நிலையில் புதிய மாநகராட்சி அலுவலகத்தை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் 5.8.2010-ல் திறந்து வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக புதிய கட்டட வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் முதலாவது மாமன்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மேயர் இரா. கஸ்தூரி தங்கம் தலைமை தாங்கினார்.
துணை மேயர் ஜே. தொம்மை ஜேசுவடியான், பொறியாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் பெ. கீதா ஜீவன் பேசியதாவது:
தூத்துக்குடி நகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என்று உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்தோம். அதன்படி தூத்துக்குடியை மாநகராட்சியாக முதல்வர் கருணாநிதி தரம் உயர்த்தினார்.
பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்த பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன.
இதற்காக |ரூ| 10 கோடி நிதி கோரியுள்ளோம். தமிழக முதல்வரும், துணை முதல்வரும் அந்த நிதியை ஒதுக்கீடு செய்வார்கள் என நம்புகிறோம். மேலும், 1-ம் கேட், 2-ம் கேட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சுரங்கப்பாதை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 10 ஊராட்சிகளுக்கு தற்போது தாற்காலிகமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
விரைவில் நிரந்தர குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், இந்த ஊராட்சிகளில் வரிவசூல் மையம், மகப்பேறு மையங்கள் அமைக்கப்படும். மேலும், மாநகராட்சி சார்பில் மண்டல அலுவலகங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த ஆண்டும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு |ரூ| 1.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளேன் என்றார் அவர். தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர் என். பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.