தினமணி 16.08.2010
988 மகளிருக்கு மகப்பேறு நிதி உதவி
பவானி,ஆக. 15: பவானி நகராட்சிப் பகுதியில் வசிக்கும் மகளிர் 988 பேருக்கு ரூ42.86 லட்சம் மகப்பேறு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
பவானி நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா, ஆணையர் (பொ) பழனிச்சாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. நகர்மன்றத் தலைவர் எம்.ஆர்.துரை தேசியக் கொடியேற்றினார். பவானி கூடல் ரோட்டரி சங்க நிர்வாகி சரவணன், நுகர்வோர் சங்க நிர்வாகி வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர்.
சுகாதார ஆய்வாளர் கே.பேச்சிமுத்து வரவேற்றார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் நகராட்சிப் பகுதியைச் சேர்ந்த 20 மகளிருக்கு ரூ1.20 லட்சம் வழங்கப்பட்டது.
மேலும், கடந்த 4 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் பவானி நகராட்சியைச் சேர்ந்த 988 மகளிருக்கு ரூ6 ஆயிரம் வீதம் ரூ42.86 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது என விழாவில் தெரிவிக்கப்பட்டது.
நகர்மன்ற உறுப்பினர்கள் கு.செல்வராஜ், வரதராஜ், பாலமுருகன், அண்ணாமலை, கணேசன், நகராட்சிப் பள்ளித் தலைமையாசிரியை வைஜெயந்தி பங்கேற்றனர். மாணவ, மாணவியரின் சுதந்திர தின கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.