Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

வீடு கட்ட வழங்கப்படும் கடனுதவியை முறையாக பயன்படுத்த ஆட்சியர் வேண்டுகோள்

Print PDF

தினமணி            18.11.2010

வீடு கட்ட வழங்கப்படும் கடனுதவியை முறையாக பயன்படுத்த ஆட்சியர் வேண்டுகோள்

உதகை, நவ. 17: நீலகிரி மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு வீடு கட்ட வழங்கப்படும் கடனுதவியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் பயனடையும் வகையில், அவர்கள் வீடு கட்டிக் கொள்ள வங்கிகள் மூலம் ரூ.1 லட்சமும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு

ரூ.1.6 லட்சம் வழங்கவும் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் பயன்களை விரிவாக எடுத்துக்கூற உதகையிலுள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து பேரூராட்சி மற்றும் நகராட்சிகளின் தலைவர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் குறித்து விரிவாக விளக்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி, மகளிர் திட்ட அலுவலர் ராமசாமி ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இத்திட்டம் குறித்து பொதுமக்களிடையே தேவையான அறிவிப்புகளை வழங்கி இத்திட்டத்தை சீரிய முறையில் செயலாக்க அனைத்து உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் அமைச்சர் நமச்சிவாயம் தகவல் கணக்கெடுப்புபணி விரைவில்துவக்கம்

Print PDF

தினகரன்                  16.11.2010

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் அமைச்சர் நமச்சிவாயம் தகவல் கணக்கெடுப்புபணி விரைவில்துவக்கம்

புதுச்சேரி, நவ. 16: பொன்விழா நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் உழவர்கரை நகராட்சி பகுதியைச்சேர்ந்த 79 சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் விழா, தையல், மளிகை, உணவகம் உள்ளிட்ட சுயவேலை வாய்ப்பை தொடங்க 40 பேருக்கு மானியத்துடன் வங்கிமூலம் கடனுதவி வழங்கும் விழா, புதுவை நகராட்சி பகுதியை சேர்ந்த 50 பெண்களுக்கு புத்தக பைண்டிங் உள்ளிட்ட தொழிற்கருவிகள், உதவித்தொகை வழங்கும் விழா புதுவை கம்பன்கலையரங்கில் நேற்று நடந்தது.

புதுவை நகராட்சி ஆணையர் அசோகன் வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் விசுவநாதன், அன்பழகன், நாரா.கலைநாதன், புதுவை நகராட்சி தலைவி ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், 79 சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.10,32,750ம், சுயவேலைவாய்ப்பை தொடங்க 40 பேருக்கு ரூ.1,63,500 மானியத்துடன் வங்கி மூலம் தனிநபர் கடனாக ரூ.6,19,000ம், 50 பெண்களுக்கு தையல், புத்தக பைண்டிங் தொழிற்பயிற்சி கருவிகள், கடனுதவிகளை அமைச்சர் நமச் சிவாயம் வழங்கி பேசிய தாவது:

புதுவை அரசு நகர, கிராம மக்களுக்காக தனித்தனியாக திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. நகர்ப்புறத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் பற்றிய கணக்கெடுப்பு பணி நடத்த குடிசை மாற்றுவாரியத்துக்கு ஒப்பாணை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த கணக்கெடுப்பு பணியை விரைவில் தொடங்குவர்.

சுயஉதவிகுழுக்களுக்கு சீருடை வழங்குவது குறித்து முதல்வருடன் பேசி, நிதி திரட்டி கண்டிப்பாக வழங்கப்படும். மக்கள் மன தறிந்து அரசு செயல்பட்டு வருகிறது.

33 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதன் மூலம் தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 33 சதவீத சீட் கிடைக்கும். பெண்களுக்காக காங்கிரஸ் அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

உள்ளாட்சித்துறை இயக்குனர் பாலசுப்பிரமணியன், உழவர்கரை நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம், புதுவை நகராட்சி திட்ட அதிகாரி பொன்.சகுந்தலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

‘நல்லது செய்தாலும் அரசை குறை கூறுவது வாடிக்கை‘

அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், ‘ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி, ரூ.1 கட்டணத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து, மகளிருக்காக குலவிளக்கு திட்டம், அரவணைப்பு திட்டம் என பல்வேறு திட்டங்களை புதுவை காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வருகிறது. இவையனைத்தையும் செய்து கொடுப்பது அதிமுகவோ அல்லது அன்பழகனோ அல்ல. காங்கிரஸ் கூட்டணி அரசுதான் இவற்றை செய்து கொடுக்கிறது. 2, 3வருடங்களாக கிடப்பில் கிடந்த திட்டங்களையும் நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறோம். எந்த திட்டமாக இருந்தாலும் சிவப்பு, மஞ்சள் ரேஷன் அட்டை என்று வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தி வருகிறோம். அரசு என்னதான் நல்லது செய்தாலும், அதில் குறை கூறுவதே அன்பழகனின் வாடிக்கைஎன்றார்.

 

நகர்ப்புற ஏழைகள் வீடுகட்ட வாங்க விண்ணப்பிக்கலாம்

Print PDF

தினமலர்                11.11.2010

நகர்ப்புற ஏழைகள் வீடுகட்ட வாங்க விண்ணப்பிக்கலாம்

மதுரை : நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகட்ட, வீடுவாங்க மானிய வட்டியில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் நலிவுற்ற பிரிவினரில் மாத வருமானம் 5 ஆயிரம் ரூபாய், குறைந்த வருவாய் பிரிவினரின் மாத வருமானம் 3001 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். நலிவுற்ற பிரிவினருக்கு ஒரு லட்சம் ரூபாய் குறைந்த வருமான பிரிவினருக்கு 1.6 லட்சம் ரூபாய் கடனாக வழங்கப்படும். இத்தொகையை 15 முதல் 20 ஆண்டுகால இடைவெளியில் திரும்ப செலுத்த வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுத் தரப்படும் கடன் தொகைக்கு உரிய வட்டித் தொகையில் 3 சதவீத மானியம் வழங்கப்படும். கூடுதலாக கடன் தேவைப்படுவோருக்கு கூடுதல் தொகைக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் வீடுகள் குறைந்தபட்சம் 25 சதுர மீட்டரும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு 40 சதுரமீட்டரிலும் வீடு இருக்க வேண்டும். சொந்த வீடு இல்லாதோர் மட்டும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

சொந்தமாக நிலம் வைத்திருப்போர் அதற்கான பட்டா உரிமை பெற்று இருக்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா பெற்றோரும் இதில் பயன்பெறலாம். இதுதொடர்பான விபரங்களுக்கு மதுரை எல்லீஸ்நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளரை அணுகி விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.


 


Page 5 of 34