Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு இலவச தொழில் பயிற்சி

Print PDF

தினமணி               10.11.2010

வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு இலவச தொழில் பயிற்சி

மானாமதுரை, நவ. 9: சிவகங்கை மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இது குறித்து, பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநர் தெய்வநாயகம் தெரிவித்திருப்பதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 பேரூராட்சிகளில் 2010-2011-ம் ஆண்டுக்கான சொர்ணகாரி யோஜ்கார் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், 18 முதல் 35 வயதுக்குள்பட்ட வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தையல், செல்போன் பழுதுபார்த்தல், பிட்டர், மேசன், வயரிங், ரேடியோ மெக்கானிக், ஜே.சி.பி. மெக்கானிக், நர்ஸ், கம்ப்யூட்டர் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இத்திட்டத்தின் கீழ் 104 பேருக்கு பயிற்சி அளிக்க 8. 78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பேரூராட்சிப் பகுதிகளில் 2007-ம் ஆண்டு இறுதி செய்யப்பட்ட வறுமைகோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்களின் பட்டியலில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

தொழில் பயிற்சியில் நர்ஸ், கம்ப்யூட்டர் ஆகியவற்றுக்கு மட்டும் கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற பயிற்சிகளுக்கு கல்வித் தகுதி தேவையில்லை.

மாற்றுத் திறனாளிகளுக்கு குறியீட்டில் 3 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதி பேரூராட்சி அலுவலகங்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

 

வீட்டு வசதி வாரியம் மூலம் வீடு வாங்க மானிய வட்டியில் கடனுதவி

Print PDF

தினமணி               10.11.2010

வீட்டு வசதி வாரியம் மூலம் வீடு வாங்க மானிய வட்டியில் கடனுதவி

விருதுநகர், நவ 9: விருதுநகர் மாவட்டத்தில் நகர்புறத்தில் வசிக்கும் ஏழை, எளியவர்கள் வீடு வாங்க மற்றும் கட்ட மானிய வட்டியில் ரூ. 1 லட்சம் கடன் உதவி அளிக்கப்படுகிறது. அதற்கு ஏழை, எளியவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வே..சண்முகம் தெரிவித்துள்ளார்.

நகரத்தில் வசிக்கும் ஏழை, எளியவர்கள் வீடு கட்டவும், புதிய வீடுகள் வாங்கவும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மதுரை வீட்டு வசதிப் பிரிவு மூலம் மானிய வட்டியில் கடனுதவி அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் கடன் பெறுவதற்கு ஏழை, எளியவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் நகராட்சி, பேரூராட்சிப் பகுதியில் வசிக்கின்ற மாத வருமானம் ரூ. 5 ஆயிரத்திற்குள் உள்ள நலிவுற்ற பிரிவினருக்கும், மாத வருமானம் ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

இவர்களுக்கு ரூ. 1 லட்சம் முதல், ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் வரை கடன் அளிக்கப்படும். இத் தொகையை 15 முதல் 20 ஆண்டுகளில் திரும்பச் செலுத்த வேண்டும். இந்தக் கடன்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்படும். கடன் தொகைக்குரிய வட்டித் தொகையில் 5 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

கூடுதலாகக் கடன் தேவைப்படுகிறவர்களுக்கு கூடுதல் தொகைக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காகக் கட்டப்படும் வீடுகள் குறைந்தபட்சம் 250 சதுர அடியாக இருக்க வேண்டும். குறைந்த வருமானம் உள்ள பிரிவினருக்கு கட்டப்பட்டும் வீடுகள் 400 சதுர அடியாக இருக்க வேண்டும்.

சொந்த வீடுகள் இல்லாதோர் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும். சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் அதற்குரிய பட்டா வைத்திருக்க வேண்டும். அரசு திட்டத்தின் மூலம் இலவச வீட்டுமனை பெற்றவர்களும் இந்தத் திட்டத்தில் பயனடையலாம்.

இது தொடர்பாக மேலும் விவரம் அறிய மதுரை எல்லீஸ் நகரில் உள்ள வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரை அணுக வேண்டும். அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் வே..சண்முகம் தெரிவித்துள்ளார்.

 

நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு கட்ட மானிய வட்டியில் கடனுதவி விண்ணப்பங்கள் வரவேற்பு

Print PDF

தினகரன்              10.09.2010

நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு கட்ட மானிய வட்டியில் கடனுதவி விண்ணப்பங்கள் வரவேற்பு

சிவகங்கை, நவ. 10: நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு கட்ட, வீடு வாங்க மானிய வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கடன் பெற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற ஏழைகள் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் மாத வருமானம் ரூ.5 ஆயிரம் வரை, குறைந்த வருவாய் பிரிவினரின் மாத வருமானம் ரூ.5,001 முதல் ரூ.10ஆயிரம் வரை உள்ள இருபிரிவினர் கடன் பெறலாம்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு ரூ.1 லட்சம், குறைந்த வருமான பிரிவினருக்கு ரூ.1.60 லட்சம் கடனாக வழங்கப்படும். இந்த கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகால இடைவெளியில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

கடன் தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுத் தரப்படும். கடன் தொகைக்குரிய வட்டித்தொகையில் 5 சதவீதம் மானியம் வழங்கப்படும். கூடுதலாக கடன் தொகை தேவைப்படுவோருக்கு கூடுதல் தொகைக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும். பொருளாதரத்தில் நலிவுற்ற பிரிவினர் கட்டும் வீடுகள் குறைந்த பட்சம் 25 சதுர மீட்டர் பரப்பளவும், குறைந்த வருமானம் பிரிவினர் கட்டும் வீடுகள் 40 சதுர மீட்டர் பரப்பளவிலும் இருக்க வேண்டும். சொந்த வீடு இல்லாதவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். சொந்தமாக நிலம் வைத்திருப்போர் அதற்காக பட்டா உரிமை பெற்று இருக்க வேண்டும்.

இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்களும் கடன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு மதுரை எல்லீஸ் நகரில் உள்ள மதுரை வீட்டு வசதி பிரிவின் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரை அணுக வேண்டும். இந்த திட்டத்தில் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் உரிய நேரத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 6 of 34