Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆக்கிரமிப்பில் உள்ள திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை... கண்டுபிடி! கள ஆய்வுக்கு கிளம்புகின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்

Print PDF

தினமலர்          27.04.2017

ஆக்கிரமிப்பில் உள்ள திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை... கண்டுபிடி! கள ஆய்வுக்கு கிளம்புகின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்


சென்னை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில், பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பல திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்கள் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள இந்த நிலங்களை, கள ஆய்வு செய்து கண்டுபிடிக்க, மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை மாநகராட்சி, 2011ல், ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள், 25 ஊராட்சிகளை சேர்த்து, 426 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் மாநகராட்சி, 15

மண்டலங்களாக பிரிக்கப்பட்டது.

கபளீகரம்

விரிவாக்கப் பகுதிகளை மட்டும் உள்ளடக்கி, திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய எட்டு மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. மாநகராட்சியுடன் இந்த பகுதிகள் இணைக்கப்பட்ட போது, அடிப்படை பணியாளர்கள், அரசுக்கு சொந்தமான ஆவணங்கள், பிறப்பு, இறப்பு பதிவுகள் என, அனைத்து ஆவணங்களும், மாநகராட்சி வசம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டன.

ஆனால், முக்கிய ஆவணங்களில், பல வகைகள் இன்னும் மாநகராட்சி வசம், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஒப்படைக்காமல் உள்ளன. இவற்றில், அரசியல்வாதி களால் கபளீகரம் செய்யப்பட்டு வரும் திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களும் ஒன்று. விரிவாக்கப் பகுதிகளில், பல புதிய மனைப்பிரிவுகளுக்கான திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்கள், இன்னும் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படாமல் உள்ளன.

மெத்தனம்

பழைய மனைப்பிரிவுகளுக்கு கூட, திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களுக்கான உரிய ஆவணங்கள், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படவில்லை. பொதுநல சங்கங்களிடம் இருந்து, 'எங்கள் பகுதி திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலம், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது' என, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தற்போதைய மாநகராட்சி சிறப்பு அதிகாரியும், கமிஷனருமான கார்த்திகேயன், விரிவாக்கப் பகுதி திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை, கள ஆய்வு செய்து கண்டுபிடிக்க, மண்டல அளவில் ஊழியர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இம்மாத இறுதிக்குள், மண்டல வாரியாக, திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களின் பட்டியல், சி.எம்.டி.ஏ., அளித்த நிலம், மாநகராட்சியிடம் உள்ள நிலம், நிலத்தின் தற்போதைய நிலை ஆகிய விபரங்களை அளிக்க உத்தரவிட்டு உள்ளார்.மொத்தம், 388 திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்கள், இதுவரை அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், இதில் இரு மண்டலங்களில் இருந்து மட்டும், முழு தகவல்கள், மாநகராட்சி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மற்ற மண்டலங்களில், இது குறித்த விபரங்களை சேகரிப்பதில், ஊழியர்கள் மெத்தனம் காட்டி வருவதாக தெரிகிறது.

ஒத்துழைப்பு இல்லை

குறிப்பாக, பூங்கா துறை ஊழியர்கள், வார்டு பொறியாளர்களுடன் இணைந்து, திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை கள ஆய்வு செய்ய, கமிஷனர் அறிவுறுத்தினார். வார்டு பொறியாளர்கள் ஒத்துழைப்பு இல்லாததால், பூங்கா துறை ஊழியர்கள், நிலங்களை சென்று பார்க்க முடியாமல் தவிக்கின்றனர்.இந்நிலையில், முழுமையான பட்டியல் சேகரித்த பின், ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும், ஆக்கிரமிப்பு இல்லாத இடங்களை, சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்கவும், புதிய பூங்காக்கள் நிதி ஆதாரங்களை பொறுத்து அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆவணங்களை காக்க புதிய வியூகம்!

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களும், திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களும் சர்ச்சைக்குள்ளாவதற்கு காரணமே, அது குறித்த ஆவணங்களை பாதுகாக்காமல், மாநகராட்சி தொலைத்துவிடுவதே ஆகும். பழைய சொத்துகளுக்கான பல ஆவணங்கள், நிலம் மற்றும் உடமை துறையில் இல்லை.இதனால், தற்போது புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, புதிதாக பெறப்படும் திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களுக்கான ஆவணம், மண்டல அலுவலகம், நிலம் மற்றும் உடமை துறை, பூங்கா துறை உட்பட, நான்கு இடங்களில் பராமரிக்கப்படும்.

 

விதிமீறல் கட்டடத்துக்கு ‘சீல்’ வைக்காமல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்த சிஎம்டிஏ: உயர்நீதிமன்றம் கண்டனம்

Print PDF

 தினமணி         08.02.2017

விதிமீறல் கட்டடத்துக்கு ‘சீல்’ வைக்காமல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்த சிஎம்டிஏ: உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை எஸ்பிளனேடு பகுதியில் உள்ள அங்கப்பன் நாயக்கன் தெருவில் இருக்கும் விதிமீறல் கட்டடங்களுக்கு -சீல்- வைக்க முடியாமல், சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) நிர்வாகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஎம்டிஏ. உறுப்பினர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு விவரம்: விதிகளை மீறி, ஏ.ஆர்.சுபத் கான், எஸ்.கே.ஹதீஜா உம்மாள் ஆகியோர் கட்டடம் கட்டியிருந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வீட்டின் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

வீட்டுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்றும், விதி மீறல் பகுதியை மனுதாரர் சரி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் மீண்டும் அந்த வீட்டுக்கு ‘சீல்’ வைக்கலாம் என, கடந்த 2014-ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உரிமையாளர் வீட்டுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. பின்னர், சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் அந்த கட்டடத்தை மீண்டும் ஆய்வு செய்தபோது, விதிமீறல் பகுதி சரி செய்யப்படவில்லை. இருப்பினும்

போதிய கால அவகாசம், கட்டட உரிமையாளருக்கு வழங்கப்பட்டது. அதன்பின்னரும் விதிமீறல் பகுதியை சரி செய்யவில்லை.

பின்னர் காவல் துறை உதவியுடன், அந்த கட்டடத்துக்கு‘சீல்’ வைக்க சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி சென்றனர். ஆனால்,  கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்க விடாமல் உரிமையாளர்கள் தடுத்து விட்டனர்.

ஆகையால், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த விடாத சுபத்கான், ஹதீஜா உம்மாள் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு: விதிமீறல் கட்டடத்துக்கு ‘சீல்’ வைக்க முடியாத சிஎம்டிஏ. அதிகாரிகள், அந்த பணியை மேற்கொள்ள அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருப்பது வேதனைக்குரியது. 

இவற்றை பார்க்கும்போது, சட்ட ரீதியான பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் தான் அரசு எந்திரங்கள் உள்ளன என்பதே தெளிவாக காட்டுகிறது. ஆகையால், காவல் துறை உதவியுடன், அந்த வீட்டிற்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சென்று விரைவாக ‘சீல்’ வைக்க வேண்டும்.

அரசு அதிகாரிகள், தங்களது பணிகளை செய்வதற்கு இதுபோல வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் உதவியை நாடி, நீதிமன்ற நேரத்தையும் வீணடிக்கக் கூடாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

பூங்கா பராமரிப்புக்கு புது நிபந்தனை! பாழடைந்த பகுதிகள் புதுப்பொலிவு பெறுமா?

Print PDF

தினமலர்         05.01.2015

பூங்கா பராமரிப்புக்கு புது நிபந்தனை! பாழடைந்த பகுதிகள் புதுப்பொலிவு பெறுமா?

கோவை : கோவை மாநகராட்சியில், அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் உள்ள பூங்காக்களை, குடியிருப்பு சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பராமரிப்பதற்கு, புது நிபந்தனைகளை வகுத்துள்ளது மாநகராட்சி நிர்வாகம்.

கோவை மாநகராட்சியில், 100 வார்டுகளில், அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில், 450க்கும் மேற்பட்ட பூங்கா இடங்கள் இருப்பதை மாநகராட்சி நிர்வாகம் பட்டியலிட்டுள்ளது. அதில், 20 சதவீதம் பூங்காக்களில் மட்டுமே, மரம் வளர்த்து, நடைபாதை அமைத்து பராமரித்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் தனியார் நிறுவனங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்களிடம் பூங்கா பராமரிப்பு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளன. பூங்கா இடங்களை ஒப்படைத்தபோது, மின்விளக்கு மற்றும் தண்ணீர் வசதி மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

ஆனால், உறுதியளித்தபடி, பூங்காகளில் வசதிகளும் செய்யப்படவில்லை, மரங்களும் வளர்க்கப்படவில்லை. இதனால், பூங்கா அமைக்கும் திட்டம் கேள்விக்குறியானது. பராமரிப்பின்றியுள்ள பூங்காக்களையும், ரோட்டிலுள்ள மையத்திட்டுக்களையும் பராமரிக்க, குடியிருப்பு சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் மற்றும் பொது நிறுவனங்கள் கடிதம் சமர்ப்பித்துள்ளன. அதன்படி, கோவை மாநகர எல்லைக்குள் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் உள்ள பூங்காக்களை பராமரிக்க, மாநகராட்சி நிர்வாகம் புது நிபந்தனையை உருவாக்கியுள்ளது.

பூங்கா, ரோட்டின் மையத்தடுப்பு மற்றும் விளையாட்டு இடங்களை பராமரிக்க வகுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் வருமாறு
: அபிவிருத்தி பணிகளுக்கு, மாநகராட்சியில் ஒப்புதல் பெற வேண்டும். நடைபாதை, கான்கிரீட் நாற்காலிகள், குழந்தைகள் விளையாட்டு பொருட்களை பராமரிப்பு பொறுப்பாளர்கள் அமைக்க வேண்டும். வேறு கட்டுமானங்களோ, அறைகளோ கட்டக்கூடாது.பூங்கா, விளையாட்டு திடல் இடத்தின் உள்பகுதியில், மாநகராட்சி பரிந்துரைக்கும் மரங்கள் மற்றும் புல்தரைகள் அமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும். பராமரிப்பு பணிக்கு அனுமதி வழங்கப்பட்ட, 15 நாட்களுக்குள், ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டு மாநகராட்சியில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒப்புதல் வழங்கப்பட்ட நாளில் இருந்து, 60 நாட்களுக்குள் பணிகளை நிறைவு செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், பராமரிப்பு பணி மேற்கொள்ள விருப்பமில்லை எனக்கருதி, வேறு நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும்.குடியிருப்பு பகுதி மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலோ, பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளாவிட்டாலும், அனுமதியை ரத்து செய்து, வேறு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படும். இதனால், மாநகராட்சிக்கு ஏற்படும் செலவு தொகை, ஒப்பந்தம் செய்தவர்களிடம் இருந்து நஷ்ட ஈட்டுத் தொகையுடன் வசூலிக்கப்படும்.பூங்கா, விளையாட்டு திடலை யார் பராமரிக்கிறார்கள் என்ற விபரத்தை, 3 அடிக்கு, 2 அடி என்ற அளவில் தகவல் பலகையாக அமைக்க வேண்டும். அங்கு வேறு விளம்பரங்கள் அமைத்தால், முன்னறிவிப்பின்றி அப்புறப்படுத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதி பெற்று, மூன்றாண்டு காலம் முடிவடைந்ததும், புதுப்பித்தல் மனு, 30 நாட்களுக்கு முன்பாக கொடுக்க வேண்டும். இதற்காக வழங்கப்படும் உத்தரவை பயன்படுத்தி, பூங்கா மற்றும் விளையாட்டு திடல் இடத்திற்கு எவ்வித உரிமையும் கோரமுடியாது. பராமரிப்புக்கு தேவையான தண்ணீர், மின்வசதி மாநகராட்சியால் ஏற்படுத்தி கொடுக்கப்படும். மின்கட்டணத்தை பராமரிப்பாளரே செலுத்த வேண்டும்.அங்கு வரும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது. காலை, மாலை நேரத்தில் கால நிர்ணயம் செய்து, அதன்படி திறந்திருக்க வேண்டும். கால நிர்ணயம் குறித்து அறிவிப்பு இருக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்புடன் விளையாட மற்றும் பூங்கா பராமரிப்புக்கு பாதுகாவலர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கான, செலவு தொகை பராமரிப்பாளரை சேர்ந்தது.

மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டால், பராமரிப்பு உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்படும். எவ்வித பாகுபாடும் காட்டாமல், அனைத்து தரப்பினரையும் அனுமதிக்க வேண்டும். சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவோரை அனுமதிக்கக்கூடாது.மாநகராட்சிக்கு பூங்கா இடம் தேவைப்பட்டால், முன்னறிவிப்பின்றி எடுத்துக்கொள்ளப்படும். இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் அல்லது விதிகளுக்குமாறாக செயல்பட்டால்,பராமரிப்பு உத்தரவு ஒத்து செய்யப்படும்.இவ்வாறு, நிபந்தனைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மீட்பு எப்போது?
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட பொது ஒதுக்கீட்டு இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில், ஆக்கிரமிப்பிலுள்ள பூங்கா இடங்களை மீட்கவும், அனைத்து பொது ஒதுக்கீட்டு இடங்களையும் மாநகராட்சி கமிஷனர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.'பொது ஒதுக்கீட்டு இடங்கள் மீதுள்ள, வழக்கு விசாரணையை வேகப்படுத்தி, இடங்களை மீட்கவும், உரிய பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, பணிகள் தொடர்ந்து சீராய்வு செய்யப்படும். ஆக்கிரமிப்பு குறித்து, மாநகராட்சி கமிஷனருக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்' என்றனர்.

 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 204