Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

கோவை ரத்தினபுரியில் ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன

Print PDF

தினத்தந்தி          31.10.2013

கோவை ரத்தினபுரியில் ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன

கோவை ரத்தினபுரியில் ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு

கோவை மாநகராட்சி 49–வது வார்டுக்கு உட்பட்ட ரத்தினபுரியில் சுப்பாத்தாள் லே–அவுட் உள்ளது. இங்கு மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், தனது வீட்டின் கழிப்பிட கட்டிடம், மற்றும் சுற்றுச்சுவரை வீட்டு முன்புறத்தில் உள்ள சுமார் 1½ சென்ட் நிலத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டி இருப்பது தெரியந்தது. இதன் மூலம் சாக்கடை கால்வாய் அடைக்கப்பட்டு இருந்தது.

இடித்து அகற்றம்

இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள், அந்த ஆக்கிரமிப்பை அகற்றும்படி கூறியும் சம்பந்தப்பட்ட நபர் ஆக்கிரமிப்பை அகற்ற வில்லை. இந்த நிலையில் நேற்று மாநகராட்சி உதவி கமிஷனர் ரவி, நகரமைப்பு அலுவலர் வரதராஜன், உதவி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் அந்த இடத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து அகற்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

 

புதிய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினகரன்           29.10.2013

புதிய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சேலம், :சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் நேற்று அதிரடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி பழக்கடை, செருப்பு கடை, பூக்கடை போன்றவை 50க்கும் அதிகமாக ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அசோகனுக்கு புகார்கள் சென்றது. அதன்பேரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

ஆனாலும் நேற்று முன்தினம் மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் வந்தன. அதில் ஒரு செருப்பு கடைக்காரர் நேற்று காலை ஐடிஐ மாணவரை தாக்கினார். இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் சென்றதும், நேற்று மதியம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

உதவி கமிஷனர்கள் ராஜா, ரமேஷ்பாபு தலைமையில் உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி வருவாய் அலுவலர் கணேசன் மற்றும் 25 ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வாகனங்களில் ஏற்றினர். இதில், பிளாட்பாரத்தில் இருந்த செருப்பு கடை, பழக்கடை, கரும்பு ஜூஸ் கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் அகற்றப்பட்டன. மாநகராட்சி சார்பில் பாதுகாப்பிற்காக போலீசாரை அழைத்திருந்தும், ஒரு போலீசார் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் சேலம் புதிய பஸ்நிலையத்தில் 38 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி            28.10.2013

பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் சேலம் புதிய பஸ்நிலையத்தில் 38 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

சேலம் புதிய பஸ் நிலையத்திற்குள் போக்குவரத்திற்கும், பயணிகளுக்கும் இடையூராக இருந்த 38 நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அப்புறப்படுத்தி அகற்றினர்.

பயணிகளுக்கு இடையூறு

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு தினமும் 200–க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் புதிய பஸ்நிலையத்தில் காலை, மற்றும் இரவு நேரங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனிடையே, சேலம் புதிய பஸ் நிலையத்திற்குள் மாநகராட்சி அனுமதியில்லாமல் நடைபாதை ஓரத்தில் செயல்படும் பழக்கடைகள், செருப்பு கடைகள், வளையல் கடைகள், செல்போன் ரீ சார்ஜ் கூப்பன் கடைகளால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக சிலர் கடைகளை வைத்திருப்பதாகவும் மாநகராட்சி ஆணையாளர் அசோகனுக்கு புகார்கள் சென்றது.

நடைபாதை கடைகள் அகற்றம்

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சூரமங்கலம் மண்டல உதவி ஆணையர் ரமேஷ் பாபு மேற்பார்வையில் உதவி ஆணையர் (வருவாய்) ராஜா, நகர்நல அலுவலர் டாக்டர் அர்ஜூன்குமார், உதவி செயற்பொறியாளர் மோகன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நேற்று மதியம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து அங்கிருந்த நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றினர். போக்குவரத்திற்கும், பயணிகளுக்கும் இடையூராக வைக்கப்பட்டிருந்த பழக்கடை, கூல்டிரிங்ஸ் கடை, பூக்கடை, செருப்பு கடை என மொத்தம் 38 நடைபாதை கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டது. அதேசமயம் பஸ் நிலையத்திற்குள் அனுமதி பெற்று நடத்திவரும் சில கடைகளில் முன்புறம் ஆக்கிரமித்து வைத்திருந்த பொருட்களையும் துப்புரவு பணியாளர்கள் எடுக்கும்படி கூறி அகற்றினர்.

நடவடிக்கை பாயும்

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சேலம் புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சி அனுமதியின்றி கடைகளை வைத்து நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம் போக்குவரத்திற்கும், பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வந்த புகாரை தொடர்ந்து தற்போது நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினோம், என்றனர்.

 


Page 6 of 204