Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

அனுமதியற்ற விளம்பரங்கள் அகற்ற தீவிரம்! இன்று முதல் சட்ட நடவடிக்கை பாயும்

Print PDF

 தினமலர்        28.11.2014

அனுமதியற்ற விளம்பரங்கள் அகற்ற தீவிரம்! இன்று முதல் சட்ட நடவடிக்கை பாயும்

கோவை : கோவை மாநகர எல்லைக்குள், அனுமதியின்றி தற்காலிமாகவும், நிரந்தரமாகவும் வைக்கப்பட்டிருக்கும், தனியார் வர்த்தக விளம்பரங்களை அகற்றும் பணியில், மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டுனர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும், கண்கவர் விளம்பரங்கள் வைக்க கோர்ட் தடை விதித்துள்ளது. அனுமதியின்றி விளம்பரங்கள் வைக்கப்படுவதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.கோர்ட் உத்தரவுப்படி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக, கோவை விமான நிலைய ரோடு, காந்திபுரம் நஞ்சப்பா ரோடு ஆகிய இடங்களில், தனியார் இடங்களில் அனுமதியின்றி, இரும்பு சட்டங்கள் அமைத்து, நிரந்தரமாக வைக்கப்பட்டிருந்த ஆறு விளம்பரங்களை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் அகற்றினர். அதன்பின், தற்காலிக மற்றும் நிரந்தர விளம்பரங்களை அகற்றுவதை மாநகராட்சி அதிகாரிகள் கைவிட்டனர்.

புதிய கமிஷனர் விஜய கார்த்திகேயன் பொறுப்பேற்ற பிறகு, அனுமதியற்ற விளம்பர பலகைகளை இரண்டு நாட்களுக்குள் அகற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. அந்த கெடு நேற்றுடன் (27 ம் தேதி) நிறைவடைந்தது. கெடு முடிந்த பிறகும், அகற்றப்படாத விளம்பரங்கள், மாநகராட்சி பணியாளர்களால் அப்புறப்படுத்தப்படுவதுடன், அதற்கான செலவு தொகையும் வசூலிக்கப்படும். மேலும், அபராதம் விதிப்பதுடன், சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.வர்த்தக நிறுவனங்களும், விளம்பரம் அமைக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும், விளம்பர நிறுவனங்களும், அனுமதியற்ற விளம்பரங்களை அகற்றிக்கொள்ள முன்வரவில்லை. அதனால், மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர்கள் தலைமையில், ஐந்து மண்டலத்திலும், பிளக்ஸ் விளம்பரங்கள், இரும்பு சட்டம் அமைத்து வைக்கப்பட்ட நிரந்தர விளம்பரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கிழக்கு மண்டலத்தில், ஒண்டிப்புதுார், ராமநாதபுரம், அவிநாசி ரோட்டில் விமான நிலைய சுற்றுப்பகுதிகள், வடக்கு மண்டலத்தில் சரவணம்பட்டி, கணபதி, அவிநாசி ரோடு பகுதிகளிலும், மேற்கு மண்டலத்தில் வடவள்ளி, ஆர்.எஸ்.புரம் பகுதிகளிலும், மத்திய மண்டலத்தில் அவிநாசி ரோடு மேம்பாலம், காந்திபுரம் பகுதிகளிலும், தெற்கு மண்டலத்தில் பாலக்காடு ரோடு, ஆத்துப்பாலம் பகுதிகளிலும் நேற்று விளம்பரங்களை அகற்றினர். நிரந்தர விளம்பரங்கள் வைக்கப்பட்டிருந்த இரும்பு சட்டங்களை 'காஸ் கட்டிங்' செய்து, அப்புறப்படுத்தினர். அப்போது, தனியார் விளம்பர நிறுவனத்தினர், மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். 'கமிஷனர் உத்தரவுப்படி, அனுமதியற்ற விளம்பரங்கள் அகற்றப்படுகிறது. மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று, கமிஷனரிடம் முறையிடுங்கள்; அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தால், போலீசில் புகார் செய்வோம்' என, உதவி நகரமைப்பு அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். அதன்பின், தனியார் விளம்பர நிறுவனத்தினர் சம்பவ இடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

ரயில்வே இடத்துக்கு விலக்கா?
மாநகரம் முழுவதும் விளம்பரம் அகற்றப்பட்டு, ரோடுகள் சுத்தம் செய்யப்பட்டாலும், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தினுள் நிரந்தரமாக அமைக்கப்பட்ட விளம்பரங்கள் ஒன்று கூட அகற்றப்படவில்லை. ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், அவிநாசி ரோடு மேம்பாலம், கூட்ஸ்செட் ரோடு, ஸ்டேட் பாங்க் ரோடு, வடகோவை மேம்பாலம் அருகில், ஏராளமான வர்த்தக விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி அனுமதி பெற்றே, ரயில்வே ஸ்டேஷன் இடத்தில் விளம்பரம் வைக்க வேண்டும் என, மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநகராட்சி அனுமதி பெறாமலே, ரயில்வே இடங்களில் விளம்பரங்கள் வைக்கப்படுகின்றன.

வரிவிதிப்பு மாறிவிடும்!
கமிஷனர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், ''கடந்த மூன்று நாட்களில், நகரமைப்பு பிரிவு மூலம், ஐந்து மண்டலத்திலும் சேர்த்து, தற்காலிக மற்றும் நிரந்தர விளம்பரங்கள், 356 அகற்றப்பட்டுள்ளன. மரங்களில் ஆணி அடித்து வைக்கப்பட்டிருந்த, 812 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. விளம்பரங்களை அகற்றிக்கொள்ள வழங்கப்பட்ட காலஅவகாசம் இன்று (நேற்று) நிறைவடைந்தது. நாளை (இன்று) 28ம் தேதி முதல், விளம்பரங்கள் அகற்றுவதற்கான செலவு வர்த்தக நிறுவனத்திடம் வசூலிக்கப்படும்; சட்டரீதியாக நடவடிக்கையும் எடுக்கப்படும். ஒரு வாரத்துக்குள் அனைத்து விளம்பரங்களும் அகற்றப்படும். கலெக்டர் அனுமதி பெற்று, குடியிருப்பு கட்டடங்கள் மீது நிரந்தர விளம்பரம் வைக்கப்பட்டிருந்தால், அந்த கட்டடத்துக்கு வர்த்தக அடிப்படையில் வரி விதிப்பு செய்யப்படும்,'' என்றார். 

 

பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்! நாமக்கல் நகராட்சி நிர்வாகம் அதிரடி "ஆக்க்ஷன்'

Print PDF
தினமணி      19.11.2014

பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்! நாமக்கல் நகராட்சி நிர்வாகம் அதிரடி "ஆக்க்ஷன்'

நாமக்கல் : பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ள சிறு கடை மற்றும் தள்ளுவண்டிகளை, நகராட்சி நிர்வாகத்தினர் அதிரடியாக அகற்றினர்.

நாமக்கல் பஸ் ஸ்டாண்ட், நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு மப்சல் மற்றும் டவுன் பஸ்கள் நுழைந்து செல்கின்றன. இப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான, 150 கடைகள் ஏலம் விடப்பட்டு, அவற்றின் மூலம் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது.அதன் மூலம் நகராட்சிக்கு கணிசமான வருவாய் வந்து கொண்டிருக்கிறது. கடை உரிமையாளர்கள், மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தங்களது கடையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பஸ் ஸ்டாண்டுக்குள் சென்னை, மதுரை, கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், நாகர்கோயில், திருச்செந்தூர், ஓசூர் உள்ளிட்ட மாவட்டங்கள், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் பஸ்கள் வந்தும், இங்கிருந்து சென்றும் வருகிறது.நகராட்சிக்கு சொந்தமான ஒரு சில கடைகள், தங்களது எல்லையை தாண்டி வரண்டாவை ஆக்கிரமிப்பு செய்து கடையை நடத்தி வருகின்றனர். அதேபோல், சிறு வியாபாரிகளும், நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து கடை விரித்துள்ளனர். மேலும், தள்ளுவண்டி கடைகள், ஆங்காங்கே நிறுத்தி பழ வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அங்குள்ள போர்டிக்கோவை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பயணிகள், பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில், கைக்குழந்தையுடன் பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என பலரும், வெயிலில் நிற்கும் அவலம் ஏற்படுகிறது.அவ்வப்போது நகராட்சி சார்பில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதை தொடர்ந்து, ஒரு சில நாட்கள் மட்டுமே எந்தவித தொந்தரவும் இல்லாமல் மக்கள் பயணம் செய்வர். மீண்டும் தங்களது பழைய நிலையை தள்ளுவண்டி, தட்டுக்கூடை வியாபாரிகள் துவங்கி பயணிகளுக்கு தொல்லை கொடுக்க துவங்கி விடுகின்றனர்.இது குறித்து பல்வேறு புகார்கள், நகராட்சி நிர்வாகத்துக்கு சென்றது. அதை தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமையில், சுகாதார அலுவலர் சண்முகவேல், ஆய்வாளர்கள் பேச்சுமுத்து, உதயகுமார் மற்றும் துப்புரவு பணியாளர்கள், நேற்று மாலை, பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அதிரடியாக அகற்றினர்.தள்ளுவண்டி, தட்டுக்கூடை, பழங்கள் உள்ளிட்டவற்றை நகராட்சி லாரியில் அள்ளி எடுத்துச் சென்றனர். பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதை தொடர்ந்து, ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இச்சம்பவம், நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

கோயம்பேடு மார்க்கெட்டில் 600 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: ரூ.50 ஆயிரம் வசூல்

Print PDF
தி இந்து       12.09.2014

கோயம்பேடு மார்க்கெட்டில் 600 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: ரூ.50 ஆயிரம் வசூல்

 கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வந்த 600 கடைகளை கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு வியாழக்கிழமை அகற்றியது. ஆக்கிரமிப்பு கடைக்காரர் களிடமிருந்து ரூ.50 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட்டது.

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பூ, காய், கனி மார்க்கெட்டுகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவ்வளாகத்தில் நுழைவு வாயில்கள், சர்வீஸ் சாலைகள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை பலர் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருவதால், மார்க்கெட்டுக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழுவின் முதன்மை நிர்வாக அலுவலர் பாஸ்கரனுக்கு புகார்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில், அவரது முன்னிலையில் மார்க்கெட் நிர்வாகக் குழு உதவி செயற்பொறியாளர் சிவலிங்கம் மற்றும் உதவிப் பொறியாளர் ராஜன்பாபு தலைமையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது நுழைவு வாயில் எண். 7 முதல் 14 வரையிலான பகுதிகள் மற்றும் சர்வீஸ் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கடைகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு கடைக்காரர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகளை நடத்த முற்பட்டால் காவல்துறை மூலம் குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என்று மார்க்கெட் நிர்வாகக் குழு சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

14-வது நுழைவு வாயிலை பூட்டிய ஆக்கிரமிப்பாளர்கள்

மார்க்கெட் நிர்வாகக் குழுவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மார்க்கெட்டின் 14-வது நுழைவு வாயிலை ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் பூட்டி, ஊழியர்களை உள்ளே வர விடாமல் தடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார் ஆக்கிரமிப்பு கடைக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வாயிலைத் திறந்தார். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

500 கிலோ தக்காளி பறிமுதல்

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கிடங்கு உள்ள பகுதியில் தக்காளியை ஏற்றி வரும் லாரிகள் தக்காளிகளை இறக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வந்த தக்காளி கடைகளும் அகற்றப்பட்டன. சுமார் 500 கிலோ தக்காளி பறிமுதல் செய்யப்பட்டது.
 


Page 2 of 204