Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

20 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பயணிகள் நிம்மதி

Print PDF

தினமணி             29.11.2013

20 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பயணிகள் நிம்மதி

பவானி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நாள் முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளும் தற்போது அகற்றப்பட்டுள்ளதால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பவானி பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் பெங்களூர், கோவை, சென்னை, வேளாங்கன்னி உள்பட பல்வேறு ஊர்களுக்கும் செல்ல 300-க்கும் அதிகமான பேருந்துகளும், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள், கூலித் தொழிலாளர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வந்து செல்வர்.

பேருந்து நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு முன்பாக அடுக்கி வைக்கப்பட்ட பொருள்களின் ஆக்கிரமிப்பால் பேருந்துக்கு வரும் பயணிகள் நடக்கக் கூட முடியாத நிலை இருந்தது. கடைக்காரர்களின் எல்லைமீறிய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில், கோபி சார் ஆட்சியர் சந்திரசேகர சாகமுரி, திடீரென ஆய்வு செய்தபோது பயணிகள் பல்வேறு புகார்களைத் தெரிவித்தனர். பல இடங்களில் அடிப்படைத் தேவைகள் குறித்து விசாரித்த சார் ஆட்சியர், உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

இதனால், அரசியல் தலையீடுகளைத் தாண்டி பவானி நகராட்சி அதிகாரிகள் களமிறங்கினர். பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டன. காலையில் வெளியூர் சென்றுவிட்டு மாலையில் பேருந்து நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு வேறெங்காவது வந்து இறங்கிவிட்டோமா என்று சந்தேகப்படும் அளவுக்கு அதிகாரிகளின் நடவடிக்கை அமைந்திருந்தது.

இந்த அதிரடி ஆக்கிரமிப்பு அகற்றத்தால் மின்சாரம் தாக்கியதுபோன்று அதிர்ச்சிக்குள்ளான கடைக்காரர்கள் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கடைகளின் கதவுகளையே இப்போதுதான் பார்த்ததாக வேதனையுடன் தெரிவித்தனர். ஒதுக்கப்பட்ட கடைக்குள் மட்டுமே பொருள்களை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் எனவும், வெளியே வைத்தால் உரிமையாளர்களுக்கு பொருள்கள் சொந்தமாக இருக்காது எனவும் நகராட்சி அலுவலர்கள் எச்சரித்து சென்றுள்ளனர்.

20 ஆண்டுகால ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர போதுமான இருக்கைகள் ஏற்படுத்துவதோடு, மேற்கூரையில் படிந்துள்ள குப்பைகளை அகற்றி, அனைத்து பகுதிகளுக்கும் வெள்ளையடித்து சுத்தப்படுத்த வேண்டும் என்று பயணிகளும், பேருந்து ஓட்டுநர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

பவானியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினத்தந்தி             28.11.2013

பவானியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பவானி பஸ்நிலையத்தில் உள்ள நடைபாதையில் வியாபாரிகள் கடைகளை அமைத்து ஆக்கிரமித்திருந்தனர். அதனால் பஸ்நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கு இடமில்லாமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும் குடிநீர் தொட்டி மற்றும் கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டன. அதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து கோபி உதவி கலெக்டர் சந்திரசேகரசாகமுரியிடம் புகார் மனு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து உதவிகலெக்டர், பவானி பஸ்நிலையத்தில் நேற்று முன்தினம் திடீர் என்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நகராட்சி ஊழியர்களிடம் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள கடைகளை அகற்றும் படி உத்தரவிட்டார். அதன்பேரில் ஊழியர்கள் நேற்று காலை 11 மணி அளவில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

அதைத்தொடர்ந்து பவானி பஸ்நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கும், நடந்து செல்வதற்கும் இடவசதி உள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறினர்.

 

வேலூர் பழைய புறவழிச் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி           27.11.2013

வேலூர் பழைய புறவழிச் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

வேலூர் பழைய புறவழிச் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் நேற்று அகற்றினார்கள்.

போக்குவரத்து மாற்றம்

வேலூர் நகரில் பாதாள சாக்கடை பணிக்காக தற்போது நேஷனல் தியேட்டர் முதல் மக்கான் வரை பாதை அடைக்கப்பட்டுள்ளது. இதனால் வேலூரில் இருந்து காட்பாடி, சத்துவாச்சாரி, புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் மக்கான், பழைய புறவழிச் சாலை வழியாக தான் செல்ல வேண்டும்.

பழைய புறவழிச் சாலையில் இருபக்கமும் மோட்டார் வாகன பணிமனைகள் உள்ளன. இதனால் சாலையிலேயே லாரி, வேன் போன்ற வாகனங்களை நிறுத்தி பழுதுபார்த்து வருகின்றனர். இதனால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்த நிலையில் கலெக்டர் நந்தகோபால் உத்தரவின்படி மாநகராட்சி பொறியாளர் பாஸ்கரன் தலைமையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் கண்ணன், நகர்நல அலுவலர் வசந்த்திவாகர், சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் புறவழிச் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.

இந்த சாலையில் தேங்கி கிடந்த தண்ணீரை பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை கொட்டி சரிசெய்தனர். மேலும் டயர், குப்பைகள், தேவையில்லாத பொருட்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.

இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் பாஸ்கரன் கூறியதாவது:–

சாலையிலேயே வாகனங்கள்

தற்போது பாதாள சாக்கடை பணிக்காக காட்பாடி சாலை மூடப்பட்டுள்ளது. பழைய புறவழிச் சாலையில் 80 அடி அகலமான சாலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. விரைவில் இந்த சாலையில் நடுவில் தடுப்புகள் (டிவைடர்) வைக்கப்படும். மேலும் இங்கு பழைய டயர்கள், மழை காரணமாக மழைநீர் ஆகியவை தேங்கி உள்ளன. அவை சீரமைக்கப்பட்டு டயர்கள் அகற்றப்படுகிறது. இந்த பணி தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அபராதம்

இந்த சாலையில் தற்போது மீண்டும் வாகனங்கள் நிறுத்தினால் உடனடி அபராதம் (ஸ்பாட் பைன்) வசூலிக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


Page 4 of 204