Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - General

காவிரியின் குறுக்கே புதிய நீர்மின் திட்டங்கள்: தொடரும் சிக்கல்

Print PDF

தினமணி 18.08.2009

காவிரியின் குறுக்கே புதிய நீர்மின் திட்டங்கள்: தொடரும் சிக்கல்
சென்னை, ஆக. 17: காவிரியின் குறுக்கே நான்கு நீர் மின் திட்டங்கள் தொடங்குவது குறித்த கர்நாடகத்தின் பிடிவாதம் தொடர்கிறது.

இதனால், சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நான்கு மாநில அதிகாரிகளின் கூட்டத்தில் எந்த முடிவு எட்டப்படவில்லை.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் விசாரணை நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகு மீண்டும் கூடுவது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் சிவசமுத்திரம், மேகதாது ஆகிய இரண்டு இடத்திலும், தமிழகத்தில் ஒகேனக்கல், ராசிமணல் ஆகிய இடங்களிலும் நீர்மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க தேசிய நீர்மின் உற்பத்தி கழகம் திட்டமிட்டது.

அதில், சிவசமுத்திரத்துக்கு மட்டும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட மத்திய அரசு துறைகள் ஒப்புதல் அளித்துள்ளன. மற்ற மூன்று இடங்களில் வனவளம், அங்கு வாழும் மக்களை இடமாற்றுவது உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன.

இந்த நிலையில், தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் பொதுப்பணி மற்றும் எரிசக்தித் துறைகளின் உயரதிகாரிகள் கூட்டம், மத்திய எரிசக்தித் துறை செயலாளர் எச்.எஸ்.பிரம்மா தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ""நான்கு தென் மாநிலங்களிலும் கடுமையான மின்சார பற்றாக்குறை நிலவுகிறது. இதைச் சமாளிக்க மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுவது அவசியம். நான்கு நீர்மின் நிலையங்களை அமைப்பதன் மூலம், 1,200 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் கிடைக்கும். காவிரி நடுவர்மன்றம் தீர்ப்புக் கூறினாலும், தமிழகமும் கர்நாடகமும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன. இந்த நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளோம். அடுத்த கட்ட கூட்டம், பெங்களூரில் நடைபெறும்'' என்றார்.

கூட்டத்தில் தங்கள் தரப்பு கருத்துகளை எடுத்துக் கூறிய, கர்நாடக எரிசக்தித் துறை செயலாளர் கே. ஜெய்ராஜ், ""சிவசமுத்திரம் பகுதி கர்நாடக மாநிலத்தின் எல்லைக்குள் வருகிறது. அங்கு, 375 மெகா வாட் திறனுடைய மின் நிலையத்தை கர்நாடக அரசுக்குச் சொந்தமான பவர் கார்ப்பரேஷன் மூலம் அமைக்கப்படும்'' என்றார்.

தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பொதுப்பணித் துறை செயலாளர் ராமசுந்தரம், ""20 டி.எம்.சி. தண்ணீரை முதலில் காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும். நான்கு நீர் மின் திட்டங்களும் தேசிய நீர்மின் உற்பத்தி கழகம் மூலம் தொடங்க வேண்டும்'' என்று வற்புறுத்தினார்.

தில்லியில் கடந்த மாதமும், சென்னையில் திங்கள்கிழமையும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், காவிரியின் குறுக்கே நீர் மின் திட்டங்கள் தொடங்குவதில் உள்ள பிரச்னைகள் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணையின் தீர்ப்பு நவம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தத் தீர்ப்புக்குப் பிறகு, நீர் மின் திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்க நான்கு மாநில அதிகாரிகளும் முடிவு செய்துள்ளனர்.

 

பன்றிக் காய்ச்சல்: புரிதல் - அணுகுமுறை

Print PDF

தினமணி 18.08.2009

பன்றிக் காய்ச்சல்: புரிதல் - அணுகுமுறை

 


 

பன்றிக் காய்ச்சல், உலக சுகாதார மையத்தால் கண்டங்களைத் தாண்டிப் பரவும் கொள்ளை நோயாக (டஹய்க்ங்ம்ண்ஸ்ரீ) ஜூன் 11-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆயினும், ஆகஸ்ட் 3-ம் தேதி புனேயில் பன்றிக் காய்ச்சலால் விளைந்த முதல் மரணம் பதிவு செய்யப்பட்ட பின்புதான் இந்தியா பெரும் பரபரப்போடு விழித்துக் கொண்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த இருபத்தாறுக்கும் மேற்பட்ட பன்றிக் காய்ச்சல் மரணங்கள் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன.

ஓரிரு ஆண்டுகளில் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்களைப் பாதிக்கச் சாத்தியமுள்ள கொள்ளை நோயாக பன்றிக் காய்ச்சல் உருவெடுத்துள்ளது என உலக சுகாதார மைய நிபுணர்கள் கருதுகின்றனர்.

கடந்த நூறு ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் இத்தகைய கொள்ளை நோயாகப் பரிமாணம் கொள்வது இது நான்காவது முறையாகும். ஆயினும், இந்தத் தடவை பன்றிக் காய்ச்சலின் வீரியம், இதுவரை "மிதமானதாக' இருக்கிறது என ஒப்புக்கொள்ளும் நிபுணர்கள், அதன் வீரியமும் வேகமும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் எடுத்துரைக்கின்றனர்.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளுக்கே பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் பெரும் சவாலாகத் திகழும்போது, இந்தியா போன்ற ஒருங்கிணைந்த வளர்ச்சியடையாத நாடுகளுக்கு பன்றிக் காய்ச்சல் இன்னும் பெரிய சவாலாக விளங்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.

இக்கொள்ளை நோய் குறித்த ஆழமான புரிதலும், அரசும் குடிமக்களும் சேர்ந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுமே இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தும் என்பதை நாம் அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

1918-ம் ஆண்டு விஷக்காய்ச்சல் முதன்முதலாக கொள்ளை நோயாக உருவெடுத்தபோது, அதற்குக் காரணமான ஏ1ச1 இன்ஃபுளுயன்சா வைரஸôல் பன்றிகளும் பெருவாரியாகப் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு மற்ற விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி, உடல்வலி மற்றும் காய்ச்சல் ஆகிய நோய்க்குறிகள் காணப்படும். இவ்வகை பன்றிக் காய்ச்சல், "மூச்சுத் திணறலோடு கூடிய விஷக்காய்ச்சல்' எனப் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், முந்தைய வகைகளிலிருந்து சில அடிப்படையான அம்சங்களில் மாறுபடுகிறது. காய்ச்சல் ஒரு நோய்க்குறியாக பலரிடம் காணப்படுவதில்லை.

அதேவேளை, பேதி ஒரு முக்கிய நோய்க்குறியாகப் பலரிடம் காணப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளானவர்களில் பெரும்பாலோர், சாதாரண விஷக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களைப் போன்றே இரண்டு அல்லது மூன்று நாள்களில் குணமடைந்து விடுகின்றனர். ஆனால், குறிப்பிட்ட ஒருசிலர், சில மணித்துளிகளிலிருந்து சில நாள்களுக்குள் நோயின் தீவிரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

நோய் தீவிரமடையும்போது, சுவாச உறுப்புகளுக்குள் நீர்கோர்த்துக் கொள்வதால், மூச்சுத்திணறல் உண்டாவதைத் தொடர்ந்து சிறுநீரகம், இதயம், மூளை முதலிய முக்கிய அவயங்கள் செயலிழப்பதால் மரணம் உண்டாகிறது. இத்தகைய தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடியவர் இரண்டு வயதிற்குட்பட்ட சிறார்களாகவோ அல்லது அறுபது வயதைக் கடந்த முதியவர்களாகவோ இருக்கின்றனர்.

இது மட்டுமன்றி ஆஸ்த்மா முதலான சுவாச மண்டல நோய்கள், ஹெச்ஐவி மற்றும் நீரிழிவு நோய் முதலான நோய் எதிர்ப்பைக் குறைக்கும் நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், உடல் பருமன் கொண்டவர்களும், கருவுற்றிருக்கும் பெண்களும் பன்றிக் காய்ச்சலின் தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாக சாத்தியமுள்ளவர்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோயைப் பரவாமல் தடுக்கவும் அதன் தாக்கத்தைத் தணிக்கவும் நோய் குறித்த நடைமுறை ரீதியிலான புரிதலும், ஒருங்கிணைந்த அணுகுமுறையும் அவசியம்.

அமெரிக்க அனுபவத்தையும் உலக சுகாதார மைய அறிக்கைகளையும் அலசிப் பார்க்கும்போது பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் ஒருசில நாள்களிலோ அல்லது ஓரிரு வாரங்களிலோ தீர்ந்துவிடக்கூடிய பிரச்னையில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்நோய் தட்பவெப்ப சூழலுக்கேற்ப அலை அலையாக ஓரிரு ஆண்டுகளாகத் தொடர்ந்து தாக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அமெரிக்க அனுபவம் சுட்டிக்காட்டுகிறது. நியூயார்க் மாநகரத்தில் இரண்டாம் அலை பன்றிக் காய்ச்சல் தொடங்கியிருப்பதாக மாநகர அதிகாரிகள் கருதுகின்றனர்.

தனி மனிதர்கள் மற்றும் குடும்பங்களைப் பொருத்தவரை, வெறுமனே பீதியடைவதும் வதந்திகளைப் பரப்புவதும், அன்றாடப் பணிகளைத் தவிர்த்துக்கொள்ள விளைவதும் நடைமுறை ரீதியான பலன் எதனையும் தரப்போவதில்லை.

தனிமனிதர்களும் குடும்பங்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். நோயின் இயல்பையும், அதன் தாக்கத்தின் தீவிரத்தையும் மக்கள் அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ள முன்வருவதோடு, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கைக்கொள்ளவும் முன்வர வேண்டும்.

கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுவது நோயின் தாக்கத்தைப் பெருமளவு தணிக்க உதவும். வீடுகளைக் காற்றோட்டமும் வெளிச்சமும் புகக்கூடிய விதத்தில் வைத்துக் கொள்வது; சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வது; ஆரோக்கியமான உணவை உட்கொள்வது; நிறைய நீர் பருகுவது; காய்ச்சல் மற்றும் சளி ஏற்பட்டால் சளியைத் துடைக்கும் கைக்குட்டைகள் போன்றவற்றைத் தனியாக, கவனமாக அப்புறப்படுத்துவது; மூன்றடுக்குப் பாதுகாப்பு முகமூடியை நோயுற்றவரும், தேவைப்பட்டால் வீட்டிலுள்ள மற்றவர்களும் அணிந்து கொள்வது; கைகளை சோப் அல்லது ஆல்கஹால் கலந்த கலவையால் அடிக்கடி கழுவிக் கொள்வது; நோய்க்குறி உள்ளவர்களிடமிருந்து முடிந்தவரை விலகியிருந்து அவருக்குப் பணிவிடை செய்வது. நோய்க்குறி உள்ளவர்கள் பன்றிக் காய்ச்சல் வந்தவருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தாலோ அல்லது பன்றிக் காய்ச்சல் உள்ள பகுதிக்குச் சென்று வந்திருந்தாலோ அல்லது நோயின் தீவிரத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ள குறிப்பிட்ட வயது, நோய் அல்லது உடலியல்பு இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டவராக இருந்தாலோ கட்டாயமாக ஏ1ச1 வைரஸ் இருக்கிறதா என மருத்துவரின் ஆலோசனையோடு பரிசோதனை செய்து கொண்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

""மக்கள் அதிகமாக கூடக்கூடிய மருத்துவமனை, பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் பணிபுரிவோர் நிறுவனங்களில் பணியாற்றுவோரில் யாருக்கேனும் நோய்க்குறிகள் இருந்தால் அவர்களும் பாதுகாப்பு முகமூடி அணிந்து கொள்ள வேண்டும்.

மற்றபடி வீதிகளில் வருவோர் போவோர் எல்லாம் முகமூடி அணிந்து கொள்வது பொதுவான அச்சத்தையும், குழப்பத்தையும் உண்டாக்குவதைத் தவிர வேறெந்தப் பலனையும் தராது''.

மற்றொன்று, பள்ளிக்கூடங்கள். பள்ளிக்கூடங்களை மூடுவது எந்தப் பிரச்னைக்கும் தீர்வு ஆகாது. அதுமட்டுமன்றி, காலவரையின்றி பள்ளிக்கூடங்களை மூடுவதும் நடைமுறை சாத்தியமில்லாதது. ஒருசில பாதுகாப்பு முன்னேற்பாடுகளோடு தடையேதுமின்றி பள்ளிக்கூடங்களை நடத்தலாம். நோய்க்குறி உள்ளவர்கள் நோய் தீரும் வரை பள்ளிக்கூடத்துக்கு வரக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.

பள்ளியில் யாருக்கேனும் நோய்க்குறிகள் தோன்றினால் அவர்களுக்குப் பாதுகாப்பு முகமூடி அணிவித்து, தனித்த அறையில் தங்கச் செய்து வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும். இதுகுறித்த தெளிவான வழிகாட்டுதலை அரசாங்கம் வழங்க வேண்டும்.

பன்றிக் காய்ச்சல் நோயைக் கண்டறிவதில் தாமதம் காட்டிய மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்போம் என்ற ரீதியிலான குறுகிய மேலோட்டமான அணுகுமுறை நோயின் தன்மைகளையும், பிரச்னையின் பரிமாணத்தையும் மத்திய அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை முதல்வர் தலைமையிலான பன்றிக் காய்ச்சல் குறித்த ஆய்வுக் கூட்டம் நல்ல தொடக்கம் என்பதில் சந்தேகமில்லை.

நோய் இருப்பதாகச் சந்தேகப்படுபவர்களை பரிசீலனை செய்வதற்கான மருத்துவ மையங்களையும், தரமான பரிசோதனைக் கூடங்களையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்போடு பரவலாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனெனில் ஓரிரு மையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினால், அதுவே நோய் பரவுவதற்கு வழிவகை செய்ததாகிவிடும்.

பன்றிக் காய்ச்சல் நோயில் பாதிக்கப்பட்டவர்கள் என பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டவர்களை தக்க முன்னேற்பாடுகளுடன் வீடுகளிலேயே சிகிச்சை செய்யவும், தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்கள் ஆகியோரை சிறப்பு மையங்களில் சேர்த்து சிகிச்சை செய்யத் தேவையான வழிகாட்டுதலையும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தகுந்த ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.

நோயின் தீவிரத்தை மட்டுப்படுத்த உதவுவதாகக் கருதப்படும் டாமிஃபுளூ வைரஸ் கொல்லி மருந்தை மாவட்ட அளவில் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்வதோடு, அதைப் பயன்படுத்துவதற்கான சரியான வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும்.

பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் வைரஸôன புதியவகை ஏ1ச1 வைரஸýக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் முயற்சிக்கு இந்திய அரசாங்கம் தீவிரமான பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதும் முக்கியமானதாகும்.

கடைசியாக, எல்லா தரப்பினருக்கும் இத்தகைய கொள்ளை நோய்கள் எடுத்துவைக்கும் தெளிவான செய்தி ஒன்று உண்டு. ஒருவர் கழுத்தில் ஒருவர் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் போட்டி உலகில், பணம் மனிதனை வழிநடத்திச் செல்லும் பரபரப்பான வாழ்வில், வாசலில் மரணம் வந்து தட்டக்கூடும் என்ற உணர்வு, நின்று நிதானமாக தன் வாழ்வின் நோக்கையும், போக்கையும் மறு பரிசீலனை செய்ய மனிதனுக்கு தரப்பட்ட ஒரு வாய்ப்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

Last Updated on Thursday, 20 August 2009 06:51
 

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வீழ்ச்சி!

Print PDF

தினமணி 17.08.2009

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வீழ்ச்சி!

சென்னை, ஆக. 16: தமிழகத்தில் 25 மாவட்டங்களில் போதிய அளவு மழைப் பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வட இந்திய மாநிலங்களில் நிலத்தடி நீரைக் கட்டுப்பாடு இல்லாமல் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இம்மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறதென அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாசா' தனது ஆய்வறிக்கையில் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் தேசிய அளவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 177 மாவட்டங்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த மாவட்டமும் இடம்பெறவில்லை. ஆனால், தற்போது போதிய மழையில்லாததால் தமிழகமும் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
மழை குறைவு... தென்மேற்கு பருவமழையின் மறைவுப் பிரதேசமாக தமிழகம் உள்ளது. இதனால், நடப்பு பருவத்தில் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை தமிழகத்தில் மழைப் பொழிவு இயல்பான அளவை விட குறைவாகவே இருந்தது.

பெரும்பாலான மாவட்டங்களில் கோடையைப் போல இன்னமும் வெயில் வாட்டுகிறது. இதனால் வறண்ட காலநிலை நிலவுகிறது.

கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், சிவகங்கை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் இயல்பான அளவை விட மிகக் குறைவாகவே மழை பெய்துள்ளது.

இவை தவிர, சென்னை, அரியலூர், நாமக்கல், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, வேலூர், விருதுநகர் ஆகிய 13 மாவட்டங்களில் சராசரிக்கும் குறைவான அளவே மழை பெய்துள்ளது.

இதனால், இம் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில், வறட்சி தலைதூக்கியுள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் வீழ்ச்சி... மழைப் பொழிவு குறைந்ததால் ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தருமபுரி, வேலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டமும் மிக வேகமாகக் குறைந்து வருகிறது.

கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வறட்சி நீடித்தால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறையும் அபாயம் உள்ளது. இதனால் கடல் நீர், நிலத்தடியில் புகுந்து உப்பு நீராகும்.

வடகிழக்கு பருவமழை வலுத்தால் மட்டுமே இந்த அபாயத்தைத் தவிர்க்க இயலும்.

வீணடிக்கப்படும் நிலத்தடி நீர்... பொதுமக்களுக்கு "ஃபுளோரைடு' பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க, ஆற்றுப் படுகைகளில் இருந்து குடிநீர் எடுத்து விநியோகிக்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு வலியுறுத்துகிறது.

ஆனால், குளிர்பானங்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், குடிநீர் பாட்டில்கள், கேன்கள் விநியோகிக்கும் வர்த்தக நிறுவனங்கள் பரவலாக நிலத்தடி நீரைக் கட்டுப்பாடு ஏதும் இல்லாமல் தனது இஷ்டம் போல பயன்படுத்தி வருகின்றன. எனவே இந்நிறுவனங்கள் நிலத்தடி நீரைச் சுரண்டுவதைத் தடுக்க விதிகளைப் கடைபிடிக்கிறதா என்பதைக் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டும்.

சென்னையில் குடிநீர், சமையல் தேவைக்காக மட்டும் நபருக்கு தினமும் 10 முதல் 20 லிட்டர் தண்ணீர் தான் செலவிடப்படுகிறது.

ஆனால் நீராடுதல், கழிப்பறைகளின் பயன்பாட்டுக்குத் தான், தினமும் நபருக்கு 60 முதல் 210 லிட்டர் தண்ணீர் செலவு செய்யப்படுகிறது.

தேவை விழிப்புணர்வு: எனவே, நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாக்க மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என நீர்வள வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Last Updated on Monday, 17 August 2009 10:45
 


Page 32 of 42