Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

தர்மபுரி நகராட்சிக்கு ரூ2 கோடியில் புதிய அலுவலகம் கட்டுமானப்பணிகள் தீவிரம்

Print PDF

தினகரன்             06.01.2014

தர்மபுரி நகராட்சிக்கு ரூ2 கோடியில் புதிய அலுவலகம் கட்டுமானப்பணிகள் தீவிரம்

தர்மபுரி, : தர்மபுரி நகராட்சிக்கு ரூ. 2 கோடி மதிப்பில் புதிய அலுவலக கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.

தர்மபுரி 1964ம் ஆண்டு முதல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 1971ம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987ம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும், 2008ம் ஆண்டில் இருந்து தேர்வுநிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. நகராட்சியின் மொத்த பரப்பளவு 11.65 ச.கி.மீட்டர் ஆகும். நகரின் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 68 ஆயிரத்து 595 ஆகும். நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.

நகராட்சியின் கட்டிடங்கள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டவை. மேலும், நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது உள்ள கட்டிடங்களில் அலுவலகம் செயல்படுத்தவும், பணியாளர்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் தமிழக முதல் அமைச்சரின் இயக்கமும்- பராமரிப்பு மற்றும் இடைவெளி நிரப்புதல் திட்டத்தின் கீழ் புதியதாக நகராட்சிக்கு கட்டிடம் கட்ட ரூ140 லட்சம் மற்றும் நகராட்சி பொது நிதியில் ரூ60 லட்சம் சேர்த்து மொத்தம் ரூ2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த நவம்பர் 9ம் தேதி நடந்தது. புதிய அலுவலக கட்டப்படும் இடத்தின் மொத்த பரப்பளவு 17ஆயிரத்து 760.45 ச.அடி ஆகும். இதில் தரைதளம் 5,968.55 சதுர அடி, முதல் தளம் 5,868.61 சதுர அடியில் மற்றும் இரண்டாம் தளம் 5,868.61 சதுர அடியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எளிதில் தெரியும் வகையில் தரைதளத்தில் காத்திருப்போர் அறை, தகவல் மையம், நகர்மன்றத் தலைவர் அறை, ஆணையர் அறை, பொதுப்பிரிவு, கணினி அறை, சமுதாய அமைப்பாளர்கள் அறையும், முதல் தளத்தில் சுகாதார அலுவலர், பொது சுகாதாரப்பிரிவு, வருவாய்ப்பிரிவு, நகரமைப்பு பிரிவு, நகராட்சி பொறியாளர் மற்றும் பொறியியல் பிரிவும், இரண்டாம் தளத்தில் நகர்மன்றக்கூடம், பதிவேடுகள் பாதுகாப்பு அறையும் திட்டமிடப்பட்டது.

மேலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதியும் செய்யப்பட உள்ளது. கட்டிடத்தில் லிப்ட் வசதியும், நவீன கழிப்பறை வசதிகள் கட்டப்பட உள்ளது. தற்போது கட்டுமானப்பணிகளில் பில்லர் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. பேஸ்மெண்ட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

நகராட்சியில் நாய்களை பிடிக்க ரூ.6 லட்சத்தில் புதிய வாகனம்

Print PDF

தினமலர்               06.01.2014

நகராட்சியில் நாய்களை பிடிக்க ரூ.6 லட்சத்தில் புதிய வாகனம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சுற்றித்திரியும் நாய்களை பிடிப்பதற்காக, ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய வாகனம் வாங்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில், அதிகளவு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால், பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்திற்குள்ளாகும் சம்பவங்களும் அதிகளவு நடக்கின்றன. நாய் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, நகராட்சி சார்பில், நாய்கள் பிடிக்கும் வாகனம் வாங்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, அரசு மானியம் 3 லட்சம் ரூபாயும்; நகராட்சி பொது நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் என மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நாய்கள் பிடிக்கும் வாகனம் வாங்கப்பட்டது.

இதனை பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், கமிஷனர் சுந்தராம்பாள் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

நகராட்சி பகுதிகளில், சுற்றித்திரியும் நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வாங்கப்பட்ட வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனத்தில், ஆறு நாய்களை பிடித்து எடுத்துச் செல்ல முடியும்.

முதற்கட்டமாக, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட், பெருமாள் செட்டி வீதியில் சுற்றித்திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டன. தொடர்ந்து, நாய்கள் பிடிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

பிடிக்கப்படும் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக, குப்பை கிடங்கு பகுதியில், தனியாக அறை 9 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கட்டப்படுகிறது. பணிகள் முடிந்ததும் இந்த கட்டடம் பயன்படுத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

 

நகராட்சிப் பள்ளிக்கு ரூ.21.25 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணித் தொடக்கம்

Print PDF

தினமணி               06.01.2014

நகராட்சிப் பள்ளிக்கு ரூ.21.25 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணித் தொடக்கம்

ராணிப்பேட்டை நகராட்சி பள்ளிக்கு ரூ.21.25 லட்சம் செலவில் கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணியை நகர்மன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை சீனிவாசன்பேட்டையில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம், சுற்றுச்சுவர் மற்றும் அங்கன்வாடி மைய சமையலறை ஆகியவற்றுக்கான புதிய கட்டடங்கள் கட்ட நகராட்சி கல்வி நிதியில் இருந்து ரூ.21.25 லட்சம் நிதி அண்மையில் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் நகரமன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம் கலந்துகொண்டு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கானப் பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணைத் தலைவர் ஜே.பி.சேகர், ஆணையாளர் (பொறுப்பு) எஸ்.மணி, நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் கே.பி.சந்தோஷம், நகராட்சிப் பணி ஆய்வாளர் தமிழரசன், பள்ளித் தலைமை ஆசிரியர் மலர்கொடி, நகரமன்ற முன்னாள் உறுப்பினர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 19 of 238