தினமணி 18.09.2009
திருப்பத்தூர் நகராட்சியில் குப்பைகளை எடுத்துச்செல்ல 14 டம்பர் பின்கள்
திருப்பத்தூர், செப்.17: திருப்பத்தூர் நகராட்சியில் குப்பைகளை எடுத்துச்செல்ல 14 டம்பர் பின்கள் வாங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி கூறியது:
திருப்பத்தூர் நகராட்சியில் இதுநாள் வரை 250 வீடுகளுக்கு 3 துப்புரவு பணியாளர்கள் கொண்ட குழு அமைத்து, 44 தள்ளுவண்டிகள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, குப்பை தொட்டிகளில் கொட்டப்பட்டு வந்தது. மேலும் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டன.
குப்பைகளை எடுத்துச் செல்லும்போது குப்பைகள் பறக்கிறது. இதை தவிர்க்க நகராட்சி சார்பில் ரூ.7 லட்சம் செலவில் குப்பைகளை எடுத்துச் செல்லும் 14 டம்பர் பின்கள் வாங்கப்பட்டன.
இதை நகரத்தின் எந்தெந்த பகுதிகளில் வைக்கலாம் என்று ஆலோசித்து வருகிறோம். இதில் குப்பைகளைக் கொட்டி மூடிவிடுவார்கள். குப்பை நிறைந்தவுடன் டம்பர் பின் தூக்கி லாரியில் வைக்கப்பட்டு கொட்டப்படுகிறது.
இக்குப்பைகள் நகர எல்லைப் பகுதியான ப.உ.ச. நகரில் 8.6 ஏக்கரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில் கொட்டப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படும்.
நகராட்சி சேகரிக்கும் குப்பைகளை இலவசமாக, இயற்கை உரம் தயாரிக்கும் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் சந்தன நகர் ஆண்கள் சுய உதவிக் குழு நகராட்சியில் கிடைக்கும் குப்பைகளை தங்களுக்கு வழங்கும்படி கேட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் அவர்களுக்கு வழங்கப்படும். இக்குழுவினர் இந்த குப்பைகளைப் பெற்று கோவை வேளாண் பல்கலைக் கழகம் அளித்த பயிற்சியின்படி இயற்கை உரமாக மாற்றி விற்பனை செய்வார்கள் என்றார்.