Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 111 கோடியில் புதிய திட்டங்கள்

Print PDF

 தினமணி      24.09.2014

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 111 கோடியில் புதிய திட்டங்கள்

சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.111 கோடி செலவில் தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டடத்தையும், கம்பம் நகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகளையும் காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் ஜெயலலிதா.

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், ரூ. 111 கோடியில் பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சியில் ரூ. 3 கோடியில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம், கம்பம் நகராட்சியில் ரூ. 2.25 கோடியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகளை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இந்தக் குடிநீர் திட்டத்தின் மூலம் கம்பம் பகுதியைச் சேர்ந்த 69,183 மக்கள் பயனடைவார்கள்.

கோவையில்...கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ. 3.24 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன மொத்த மீன் விற்பனை அங்காடிக் கட்டடம், உக்கடம் பேரூர் புறவழிச்சாலை பிரிவு சந்திப்பு முதல் கோவை புதூர் வரையில் ரூ.12.75 கோடியில் 9.7 கிலோ மீட்டர் நீளமுள்ள புறவழிச்சாலை, கோவைபுதூர் சுண்டக்காமுத்தூர், நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ. 2.25 கோடியில் கட்டப்பட்டுள்ள உயர்நிலைப் பாலம், மதுரை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் ரூ. 3 கோடியே 3 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மண்டல அலுவலகக் கட்டடங்கள், நீலகிரி மாவட்டம் - உதகமண்டலம், ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம் மற்றும் திருவாரூர் மாவட்டம் - திருத்துறைப்பூண்டி ஆகிய நகராட்சிகளில் ரூ. 3.40 கோடியில் அலுவலகக் கட்டடங்கள், சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம், அய்யாசாமி தெருவில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மருத்துவமனை கட்டடம், சூரமங்கலத்தில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ. 35 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

தருமபுரி, திருப்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 16 பேரூராட்சிகளில் ரூ. 3.78 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடங்கள், நவீன சுகாதார வளாகங்கள், குடிநீர் அபிவிருத்திப் பணிகள், வணிக வளாகம் நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் ரூ. 2.50 கோடியில் பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடங்கள் என மொத்தம் ரூ. 31.60 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள்: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கோயம்புத்தூர் மாவட்டம் - ஒடையகுளம் பேரூராட்சி, திருப்பூர் மாவட்டம் - குன்னத்தூர் பேரூராட்சி, நாமக்கல் மாவட்டம் - பாண்டமங்கலம் பேரூராட்சி, கன்னியாகுமரி மாவட்டம் - மண்டைக்காடு பேரூராட்சி, தூத்துக்குடி மாவட்டம் - திருச்செந்தூர் பேரூராட்சி ஆகிய 5 பேரூராட்சிகளில் வசிக்கும் 54,592 மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 14.41 கோடியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டங்களை முதல்வர் தொடங்கிவைத்தார்.

திடக் கழிவிலிருந்து மின்சாரம்: திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ. 55 கோடியில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ள திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்ககத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த 250 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்கு ரூ. 5.11 கோடி சுழல் நிதியினை வழங்கும் அடையாளமாக 7 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு காசோலைகளை முதல்வர் வழங்கினார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் ரூ.33.50 லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட்ட பெரு வலைதளத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

வல்லமை செய்தி இதழ்: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள உதவும் வகையிலும் "வல்லமை' என்ற பெயரில் புதிதாக வெளிவரும் காலாண்டு செய்தி இதழை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திறந்தும், துவக்கியும், அடிக்கல் நாட்டியும் வைக்கப்பட்ட பணிகளின் மொத்த மதிப்பு ரூ. 111 கோடியே 70 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

Last Updated on Wednesday, 24 September 2014 05:39
 

மாநகராட்சியில் 3 ஆண்டுகளில் ரூ.310 கோடியில் அடிப்படை வசதிகள்

Print PDF
தினமணி      16.09.2014

மாநகராட்சியில் 3 ஆண்டுகளில் ரூ.310 கோடியில் அடிப்படை வசதிகள்

கோவை மாநகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.309.22 கோடிக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ப.ராஜ்குமாரை ஆதரித்து திங்கள்கிழமை நடந்த பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியது:

கோவை மாநகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் சேதமடைந்த 483 கி.மீ. சாலைகளில் 320 கி.மீ. சாலைகள் ரூ.120.32 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 96 கி.மீ. சாலைகள் ரூ.60 கோடியில் மேம்படுத்தப்படும்.

பில்லூர் இரண்டாவது குடிநீர்த் திட்டப் பணிகள் முடிவடைந்ததில் 11 லட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் ரூ.108.76 கோடி செலவில் 109 கி.மீ. சாலைகள் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.21.60 கோடி செலவில் இரண்டு பாலப் பணிகள் முடிவடைந்துள்ளன. ரூ.20 கோடி மதிப்பில் கணபதி-டெக்ஸ்டூல் அருகில் ரயில்வே மேம்பாலப் பணி நடக்கிறது. இதுதவிர, நடப்பாண்டில் ரூ.18.76 கோடி மதிப்பில் 23.67 கி.மீ. சாலை மேம்பாட்டுப் பணியும், ரூ.1.95 கோடியில் ஒரு பாலப் பணியும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

ஆத்துப்பாலம் முதல்-உக்கடம் சந்திப்பு-ஒப்பணக்கார வீதி வரை மேம்பாலம் அமைக்கும் பணியும், கோவை மேற்கு வட்டச் சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடுக்குமாடிக் கட்டடம், புற்றுநோய் சிகிச்சை மையம், அறுவை அரங்கிற்கு கட்டடம், நூலகத்திற்கு கட்டடம் ஆகியவற்றிற்காக ரூ.88.49 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியில் உள்ள 12 நகர்ப்புற சுகாதார மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டவும், 20 நகர்ப்புற சுகாதார மையங்களை மேம்படுத்தவும் ரூ.7.04 லட்சத்தில் பணிகள் நடந்து வருகின்றன. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் கோவை மாநகராட்சியைச் சேர்ந்த 13,179 கர்ப்பிணிகளுக்கு ரூ.13.17 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. 84,866 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.218.75 கோடி மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாநகராட்சியில் 2 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், 2 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ரூ.2 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விலையில்லா மடிக்கணினி, நான்கு இணை சீருடைகள், புத்தகப் பை, பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள், காலணி, மிதிவண்டி மற்றும் சிறப்பு ஊக்கத் தொகை என ரூ.122.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கோவை நகராட்சிக்கு உள்பட்ட பள்ளிகளில் பயிலும் 1.82 லட்சம் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளன.

கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பொறியியல் கல்லூரி மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சி மையம் நிறுவப்பட உள்ளது.

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் சூரிய மின்சக்தி சாதனங்கள் ரூ.10 லட்சம் செலவில் நிறுவப்பட உள்ளன. இக் கல்லூரியில் உள்ள தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்த ரூ.16.16 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளில், ரூ.309.22 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளான குடிநீர்த் திட்டப் பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், தெரு விளக்குகள், கட்டடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட 1,490 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

கோவை மாநகரில் மட்டும் பழைய பேருந்துகளுக்கு பதிலாகவும், 41 புதிய வழித் தடங்களிலும், 73 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நடப்பு ஆண்டில் கோயம்புத்தூர் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 414 புதிய பேருந்துகளை வழங்க இருக்கிறோம்.

ஒண்டிப்புதூரில் ரூ.98 லட்சத்தில் புதிய கூடுதல் பணிமனை விரைவில் தொடங்கப்பட உள்ளது. கோவையில் பாதுகாக்கப்பட்ட குடிநீரை 24 மணி நேரமும் பெறும் வகையில், ரூ.451.66 கோடி மதிப்பிலான குடிநீர் விநியோகத் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதி மக்களுக்கு பில்லூர் மற்றும் ஆழியார் குடிநீர்த் திட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க, ரூ.42.55 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. டாக்டர் நஞ்சப்பா சாலை மற்றும் சின்னசாமி சாலை ஆகியவற்றில் மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் ரூ.162 கோடியில் நடந்து வருகின்றன.

வெள்ளலூரில் ரூ.125 கோடியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ரூ.80 கோடியில் காந்திபுரம், ஆர்.எஸ்.புரம்-டி.பி.சாலை மற்றும் டவுன்ஹால் ஆகிய இடங்களில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ.122.20 கோடி மதிப்பில் 2,632 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் ரூ.10.97 கோடியில் 224 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதுதவிர 2,912 வீடுகள் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் உப்பிலிபாளையத்தில் 272 வீடுகள் மற்றும் பொன்னையராஜபுரத்தில் 112 வீடுகள் என மொத்தம் 284 வீடுகள் ரூ.58.52 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் 1,745 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் வசதி ரூ.1,550 கோடி செலவில் படிப்படியாக ஏற்படுத்தித் தரப்படும். மாநகராட்சியில் உள்ள 4.93 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் 2.8 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மற்றும் மின் விசிறிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்றார்.
 

மாநகராட்சிப் பள்ளிகள், சுகாதார மையங்கள் தரம் உயர்த்தப்படும்

Print PDF
தினமணி         15.09.2014

மாநகராட்சிப் பள்ளிகள், சுகாதார மையங்கள் தரம் உயர்த்தப்படும்

கோவை மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் என, தேர்தல் பிரசாரத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சி.பத்மநாபன் வாக்குறுதியளித்தார்.

கோவை மாநகராட்சி இடைத்தேர்தலில் மேயர் பதவிக்குப் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி.பத்மநாபன், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகில் இருந்து துவங்கிய பிரசாரப் பயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர் ஜீவா துவக்கி வைத்தார்.

அரவன் திடல் மைதானத்தில் வேட்பாளர் பத்மநாபன் பேசியதாவது:

கோவை மாநகராட்சி மன்றம் கடந்த மூன்று ஆண்டு காலமாக மக்கள் பிரச்னைகளைப் பேசாத மன்றமாகச் செயல்பட்டு வந்துள்ளது. மாநகராட்சிப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலை காணப்படுகிறது. மேலும், மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலை உள்ளது.

எனவே, மாநகராட்சி சுகாதார மையங்களை நவீனப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும். அதனால், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, செயற்குழு உறுப்பினர் வி.பெருமாள், ஒன்றியச் செயலாளர் கேசவமணி, மதச்சார்பற்ற ஜனதா தளம் மாவட்டச் செயலாளர் கே.என்.அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 


Page 3 of 238