Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Master Plan

குடந்தை நகரின் "மாஸ்டர் பிளானை' மறுசீராய்வு செய்ய உத்தரவு

Print PDF

தினமணி              08.12.2010

குடந்தை நகரின் "மாஸ்டர் பிளானை' மறுசீராய்வு செய்ய உத்தரவு

கும்பகோணம், டிச. 8: கும்பகோணத்தில் தற்போதுள்ள மாற்றங்கள் உள்ளிட்டவற்றையும் சேர்த்து முழுமைத் திட்டத்தின் கீழ் "மாஸ்டர் பிளானை' மறுசீராய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் நகர் ஊரமைப்பு திட்டத்தின் மாநில இயக்குநர் பங்கஜ்குமார் பன்சல்.

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:

நிலப் பயன் மாற்றம், கட்டடம், பலமாடி கட்டடம், மனைப் பிரிவு, தொழில்சாலை கட்டடம் ஆகியவற்றில் அனுமதி பெறுவதில் உள்ள இடர்பாடுகளை களைவதற்கான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கும்பகோணம், தஞ்சையில் நடைபெறவுள்ளது.

கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள், 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடங்கள் கட்டக் கூடாது என்பது அரசு விதியாகும். இந்த விதியை மீறி கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தையும் இடிப்பதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

நஞ்சை தரிசு நிலத்தில் மனைப்பிரிவு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலை பெற வேண்டும். மீறினால் சட்டப்பிரிவு 56, 57-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூர் திட்ட குழுமத்தின் விதிகளை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதற்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

4 ஆயிரம் சதுர அடி வரை கட்டடம் கட்டுவதற்கு உள்ளாட்சி அமைப்பிடமும், 15 ஆயிரம் சதுர அடி வரை கட்ட உள்ளுர் திட்ட குழுமத்திலும், அதற்கு மேல் உள்ளவர்கள் மாநிலத் தலைமை அலுவலகத்திலும் அனுமதி பெற வேண்டும்.

அனுமதியோ அல்லது மறுப்போ உள்ளூர் திட்டக் குழுமத்தில் 30 நாள்களுக்குள்ளும், தலைமை அலுவலகத்தில் 45 நாள்களுக்குள்ளும் பரிசீலித்து தெரிவிக்க ஆணையிடப்பட்டுள்ளது. அனுமதி அளிக்கும்போது வடிகால் வசதி வெளியேறும் வகையில் மனைப் பிரிவுகள் அமைக்கப்படுகின்றன. எனவே, வடிகால் வசதி உள்ளதா என்பதை பார்த்து மனைகளை வாங்க வேண்டும்.

2005-ல் கும்பகோணம் நகரத்திற்கான (மாஸ்டர் பிளான்) முழுமைத் திட்டம் வெளியிடப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் முழுமைத் திட்டத்தின் கீழ் மாஸ்டர் பிளானை மறுசீராய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் சாலை மேம்பாட்டுக்காக அரசு ஒதுக்கியுள்ள ரூ.ஆயிரம் கோடியில், ரூ.350 கோடி திட்ட குழுமம் சார்பில், சாலை மேம்பாட்டிற்காக அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

முன்னதாக, குடந்தை உள்ளூர் திட்ட குழும அலுவலகத்தில் பங்கஜ்குமார் பன்சல் தலைமையில், இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலப்பயன் மாற்றம், சிறப்பு கட்டடம், பலமாடி கட்டடம், மனைப்பிரிவு, தொழில்சாலை கட்டடம் ஆகியவற்றில் அனுமதி பெறுவதில் உள்ள இடர்பாடுகளைக் களைவதற்கான பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள், பொறியாளர்கள் இதில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக அளித்தனர்.

உதவி இயக்குநர்கள் சிவப்பிரகாசம், வசந்தி, திட்ட உதவியாளர் மாரியப்பன், மூத்த ஆராய்ச்சி உதவியாளர் சீனிபாண்டியன், கண்காணிப்பாளர் அப்துல்சலாம்சாகிப், வரைவாளர் குணசீலன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

மதுரை நகர் மேம்பாட்டுக்கான "மாஸ்டர் பிளான்' விரைவில் அமல்

Print PDF

தினமணி                25.11.2010

மதுரை நகர் மேம்பாட்டுக்கான "மாஸ்டர் பிளான்' விரைவில் அமல்

மதுரை, நவ.24: மதுரை மாநகர் மேம்பாட்டுக்குத் தேவையான மாஸ்டர் பிளான் மறுசீரமைக்கப்பட்டுள்ளது; அரசு அனுமதித்தால் இந்த பிளான் 3 மாதங்களில் அமல்படுத்தப்படும் என, நகர ஊரமைப்புத் துறை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்தார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களுக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டி:

மதுரை உள்ளூர் திட்டக் குழுமத்தில் மாநகராட்சி, திருமங்கலம், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் ஆகிய நகராட்சிகள், விளாங்குடி, பரவை, ஹார்விபட்டி ஆகிய பேரூராட்சிகள், 171 ஊராட்சிகள் உள்ளன. இதுதவிர மாவட்டத்தின் மற்ற பகுதிகள், தேனி, திண்டுக்கல், விருதுநகர் பகுதிகளும் இத்திட்டக் குழுமத்தின்கீழ் வரும்.

நகர் மேம்பாட்டுக்காக 1993-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மாஸ்டர் பிளான் அடிப்படையிலேயே தற்போது விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது உள்ள நிலையில் ஏராளமான மாற்றங்களை நிலங்கள் சந்தித்துள்ளன. வயல் காடுகளாக இருந்த நிலங்கள் வீட்டடி மனைகளாகவும், வீட்டடி மனைகளாக இருந்த நிலம் தொழிற்சாலைக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, மதுரைக்கான மாஸ்டர் பிளான் தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பிளான் அரசின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்படும். அரசு அனுமதித்தால் 3 மாதங்களில் இந்த பிளான் அமல்படுத்தப்படும். மேலும், கட்டட வரைபட மற்றும் அனுமதியை மதுரையிலேயே பெறலாம். இந்த பிளானில் தற்போது நிலுவையில் உள்ள நெடுஞ்சாலைத் துறைப் பணிகள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பகுதியில் 4,000 சதுர அடி வரையான கட்டடங்களுக்கு வரைபடம் மற்றும் கட்டட அனுமதியை மாநகராட்சியே அளிக்கலாம். 15 ஆயிரம் சதுர அடி வரை ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்ட உள்ளூர் திட்டக் குழுமம் அனுமதி அளிக்கலாம். அதற்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு சென்னையில்தான் அனுமதி பெறவேண்டும்.

மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் 9 மீட்டர் உயரம் வரை கட்டடங்கள் கட்டிக்கொள்ளலாம். ஆனால் சில நிபந்தனைகள் இதற்கு விதிக்கப்பட்டுள்ளன. அதாவது சாலையின் அகலத்தைப் பொருத்து கட்டட உயரம் இருக்க வேண்டும். சாலை அகலம் 12 மீட்டர் இருந்தால் அச்சாலையில் 24 மீட்டர் உயரம் வரை கட்டடங்கள் கட்டலாம். 15 மீட்டர் அகலம் உள்ள சாலையில் 30 மீட்டர் உயரம் வரையும், 18 மீட்டர் முதல் 30.5 அடி அகலம் வரை சாலை இருந்தால் 60 மீட்டர் உயரம் வரை கட்டடங்கள் கட்டலாம். இந்த விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

மீனாட்சி கோவிலைச் சுற்றி உயரமான கட்டடம் கட்டலாம் : புதிய மாஸ்டர் பிளானின் அரசு அனுமதி

Print PDF

தினமலர்                 25.11.2010

மீனாட்சி கோவிலைச் சுற்றி உயரமான கட்டடம் கட்டலாம் : புதிய மாஸ்டர் பிளானின் அரசு அனுமதி

மதுரை : ""மதுரை நகரின் வளர்ச்சிக்கு புதிய "மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டுள்ளது,'' என நகர ஊரமைப்புத் துறை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கூறினார். மதுரையில் இத்துறை சார்பில், அதன் இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால், நேற்று மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களின் குறைகளை கேட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 1993ல் கொண்டு வரப்பட்ட மாஸ்டர் பிளான் தான், மதுரையில் இன்னமும் அமலில் உள்ளது. இந்த ஆண்டு புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்பு விவசாய பகுதியாக இருந்து, குடியிருப்பாக மாறிய பகுதிகள், குடியிருப்பாக இருந்து வணிக இடமாக மாறிய பகுதிகள் புதிய பிளானில் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்திடம் இருந்து பதில் வராததால், இரண்டாவது ரிங் ரோடு திட்டம், புதிய பிளானில் சேர்க்கப்படவில்லை. புதிய பிளான்படி, கட்டட அனுமதியை மதுரையிலேயே பெறலாம்.

இந்த ஜூன் முதல், கட்டடம் கட்டுவதில் (புளோர் ஸ்பேஸ் இன்டெக்ஸ் - எப்.எஸ்..,) சில மாறுதல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முன்பு 100 சதுர மீட்டர் இடம் இருந்தால், குடியிருப்பாக இருந்தால், 50 சதுர மீட்டருக்கும், வணிக கட்டடமாக இருந்தால் 40 சதவீதத்திற்கும் கட்டடம் கட்டிக்கொள்ளலாம். தற்போது இது குடியிருப்புக்கு 60 சதவீதமாகவும், வணிக கட்டடத்திற்கு 50 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு, அடுக்குமாடி கட்டடத்திற்கு தனி உத்தரவு பெற வேண்டி இருந்தது. இனிமேல் அதுவும் தேவையில்லை. மீனாட்சி கோவிலைச் சுற்றி வெளி வீதிகள் வரை, ஒன்பது மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடங்கள் கட்ட முடியாது. தற்போது அக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு விட்டது.

சாலை அகலத்தைப் பொறுத்து, கட்டடத்தின் உயரத்தை முடிவு செய்யலாம். உதாரணமாக, 12 மீட்டர் அகல சாலையாக இருந்தால், 24 மீட்டருக்கும், 15 மீட்டர் அகல சாலையாக இருந்தால், 30 மீட்டருக்கும், 18 மீட்டர் அகல சாலையாக இருந்தால் 60 மீட்டருக்கும் 30.5 மீட்டர் அகல சாலையாக இருந்தால், 60 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடம் கட்டலாம். நான்காயிரம் சதுர அடி அளவுள்ள கட்டடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளும், 15 ஆயிரம் சதுர அடி அளவுக்கு உள்ளூர் திட்டக் குழுமமும் அனுமதி தரலாம். அதற்கு மேல் அளவுள்ள கட்டட அனுமதியை சென்னை இயக்குனர் அலுவலகத்தில் பெற வேண்டும். இவ்வாறு பங்கஜ்குமார் பன்சால் கூறினார்.


 


Page 2 of 6