Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

காய்கறிக் கழிவுகளில் மின்சார உற்பத்தி: பொள்ளாச்சி நகராட்சியில் துவக்கம்

Print PDF

தினமணி             13.02.2014

காய்கறிக் கழிவுகளில் மின்சார உற்பத்தி: பொள்ளாச்சி நகராட்சியில் துவக்கம்

பொள்ளாச்சி நகராட்சியில் ரூ. 90 லட்சம் மதிப்பில் காய்கறிக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நகர்மன்றத் தலைவர் கிருஷ்ணகுமார் பூமி பூஜையை துவக்கி வைத்தார். ஆணையர் சுந்தராம்பாள் முன்னிலை வகித்தார்.

  பொள்ளாச்சி நகராட்சி 13.87 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் 90 ஆயிரம் பேர் வசித்துவருகின்றனர். நகராட்சி பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் 60 டன் குப்பைகள் உரக்கிடங்கில் சேர்க்கப்படுகின்றன. இதில், 42 டன் குப்பைகள் மக்கும் குப்பைகளாகவும், 12 டன் குப்பைகள் மக்காத குப்பைகளாகவும் பிரிக்கப்படுகின்றன.

 இது தவிர காந்தி சந்தை, திரு.வி.க. சந்தை, தேர்நிலை சந்தை, உழவர் சந்தை, பூ மார்க்கெட், உணவு விடுதிகள் மற்றும் பழக்கடைகள் ஆகியவற்றில் இருந்து தினமும் 10 டன் காய்கறிக்கழிவுகள், பழக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கப்படும் 10 டன் காய்கறிக்கழிவுகள், பழக்கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கப்படுகிறது. இந்த இயற்கை எரிவாயுவில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது.

 தயாரிக்கப்படும் மின்சாரம் நகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2013-14 ஆண்டில் ரூ. 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்து நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், நகராட்சியில் பல டன் காய்கறி, பழக்கழிவுகள் கிடைப்பதால், அதை வீணாக்காமல் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டோம். தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. இந்த திட்டம் பல்வேறு நகராட்சி, பேரூராட்சிகளுக்கு முன்மாதிரியாக அமையும் என்றார்.

நகராட்சிபொறியாளர் ராஜா, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ்ராஜா, வசந்த் உள்பட பலர்  பங்கேற்றனர்.

 

திடக்கழிவு சேவை கட்டணத்தை தவணை முறையில் செலுத்தலாம் வணிகர்கள் கூட்டத்தில் ஆணையர் தண்டபாணி அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி                13.02.2014

திடக்கழிவு சேவை கட்டணத்தை தவணை முறையில் செலுத்தலாம் வணிகர்கள் கூட்டத்தில் ஆணையர் தண்டபாணி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சியில் விதிக்கப்பட்டுள்ள திடக்கழிவு சேவை கட்டணத்தை வியாபாரிகள் தவணை முறையில் செலுத்தலாம் என ஆணையர் தண்டபாணி கூறினார்.

சேவை கட்டணம் விதிப்பு

திருச்சி மாநகராட்சியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு திடக்கழிவை அகற்றுவது தொடர்பாக சேவை கட்டணம் விதித்துள்ளது. இந்த தொகை ஒவ்வொரு கடைக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண தொகை கடந்த ஏப்ரல் 1–ந் தேதி முதல் முன் தேதியிட்டு வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண தொகை அதிகமாக இருப்பதாகவும், இந்த தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் அச்ச, அருவருக்கத்தக்க தொழில்களுக்காக வழங்கப்படும் உரிமம், பெறுவதற்கு வருகிற 14–ந்தேதி கடைசி நாள் எனவும், இந்த உரிமம் பெறவோ? அல்லது புதுப்பிக்கவோ? வேண்டுமானால் அதற்கு முன்னதாக மாநகராட்சி நிர்ணயித்துள்ள திடக்கழிவு சேவை கட்டணத்தை முழுவதுமாக செலுத்துபவர்களுக்கு உரிமம் வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

வியாபாரிகள் கோரிக்கை

இந்த அறிவிப்பு வணிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்க கூட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சியில் நடந்தது. பேரமைப்பின் மாநில பொருளாளர் கோவிந்தராஜூலு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பேசிய வணிகர்கள் பலர், திடக்கழிவு சேவை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என்றனர். மேலும் அச்ச, அருவருக்கத்தக்க தொழில்களுக்காக உரிமம் பெறும் போது திடக்கழிவு கட்டணத்தை செலுத்த வலியுறுத்தக்கூடாது, உரிமம் பெற 14–ந்தேதி கடைசி என்பதை நீட்டிக்க வேண்டும். நடைபாதை வியாபாரிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்து மாநகராட்சி ஆணையர் தண்டபாணி பேசியதாவது:–

தவணை முறையில்...

திருச்சி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திடக்கழிவு சேவை கட்டணம் மூலம் மாநகராட்சிக்கு ரூ.72 லட்சம் முதல் ரூ.73 லட்சம் வரை கிடைக்கும். இந்த கட்டணத்தை நிறுத்தி வைக்க அதிகாரம் கிடையாது. ஒரு ஆண்டு கட்டணத்தை செலுத்தி விட்டு மீதித்தொகையை தவணை முறையில் செலுத்துங்கள்.

திடக்கழிவு சேவை கட்டணம் அதிகமாக இருக்கிறது என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை மாநகராட்சி மாமன்ற பட்ஜெட் கூட்டத்தில் பொருளாக வைக்கப்பட்டு கட்டணத்தை குறைக்கவேண்டுமானால் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதற்கு 6 மாத கால அவகாசம் ஆகும். எனவே தற்போது திடக்கழிவு சேவை கட்டணத்தை வியாபாரிகள் தவணை முறையில் செலுத்தலாம்.

14–ந்தேதி கடைசி நாள்

அச்ச, அருவருக்கத்தக்க தொழில்களுக்கான உரிமம் பெறவோ? புதுப்பிக்கவோ? 14–ந்தேதி கடைசி நாளாகும். இந்த தேதியை நீட்டிக்க முடியாது. எனவே இதற்கான உரிமம் பெறுபவர்கள், திடக்கழிவு சேவைக்கட்டணத்தை செலுத்த வேண்டும். நடைபாதை வியாபாரிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கி தரப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் தமிழ்செல்வன், நிர்வாகி உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

குப்பை சேகரிக்கும் பணி தனியார் வசம் நடைமுறைக்கு வந்தாச்சு! முதல் கட்டமாக 2 மண்டலங்களில் அமல்

Print PDF

தினமலர்             04.02.2014

குப்பை சேகரிக்கும் பணி தனியார் வசம் நடைமுறைக்கு வந்தாச்சு! முதல் கட்டமாக 2 மண்டலங்களில் அமல்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில், முதல்கட்டமாக, இரண்டு மண்டலங்களுக்கு உட்பட்ட, 30 வார்டுகளில், தனியார் மூலமாக குப்பை அள்ளும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது. இத்திட்டத்தில், 250 டன் குப்பை சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணியில், 600 தள்ளுவண்டிகள், 800 குப்பை பெட்டிகள், 10 டிப்பர் ஆட்டோக்கள், 12 காம்பாக்டர் வாகனங்கள், வாகன ஓட்டுனர்கள் 32 பேர், உதவியாளர்கள் 28 பேர், துப்புரவு பணியாளர்கள் 781 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில், இரண்டு மற்றும் மூன்றாவது மண்டலங்களுக்கு உட்பட்ட, 16 முதல் 45வது வார்டு வரையிலான 30 வார்டு பகுதிகளில், தனியார் நிறுவனம் மூலமாக குப்பை அள்ளும் பணி நேற்று துவங்கியது. தனியார் நிறுவன ஊழியர்கள், தள்ளுவண்டிகளுடன் வீடு வீடாக வந்து தினமும் குப்பை சேகரிப்பர். காலை 6.00 மணிக்கு முன்பாக வந்து, விசில் அடித்து குப்பை சேகரிக்கப்படும். சேகரிக்கப்படும் குப்பை, பாறைக்குழிகளில் கொட்டப்படும்.

திருநீலகண்டபுரத்தில் நேற்று நடந்த விழாவில், வனத்துறை அமைச்சர் ஆனந்தன் துவக்கி வைத்தார். மேயர் விசாலாட்சி தலைமை வகித்தார். துணை மேயர் குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், சுகாதார நிலைக்குழு தலைவர் பாலு முன்னிலை வகித்தனர்.மாநகராட்சி கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:

மாநகராட்சியில் போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், பொது சுகாதார பணியை மேற்கொள்வது சவாலாக இருக்கிறது. மகளிர் குழுக்கள் மூலமாக சுகாதார பணிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சியில் இருந்த குழு பெண்கள், தனியார் நிறுவனத்தில் விண்ணப்பித்து, வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

இரண்டு மற்றும் மூன்றாவது மண்டலங்களில் உள்ள துப்புரவு பணியாளர்கள் 839 பேர், மற்ற இரண்டு வார்டுகளுக்கு பிரித்து அனுப்பப்படுவர். தனியார் நிறுவனம் குப்பையை அகற்ற ஒப்பந்தம் செய்திருந்தாலும், தொழிலாளர்கள் வருகை பதிவேடு, இ.எஸ்.ஐ., - பி.எப்., உள்ளிட்ட சலுகை வழங்குவது, வாகனங்கள், குப்பை தொட்டி இயக்கம் குறித்து கண்காணிக்கப்படும்.

திருப்பூர் மாநகராட்சியில் உருவாகும் 500 டன் குப்பையில், 250 டன் குப்பை தனியாரால் அகற்றப்படும். ஒப்பந்தம் செய்துள்ளபடி, ஒரு டன் குப்பைக்கு 1,449 ரூபாய் என்ற அடிப்படையில், தனியார் நிறுவனத்துக்கு கட்டணம் வழங்கப்படும்.

வாகன இயக்கம், தொழிலாளர் கூலி உள்ளிட்ட அனைத்து செலவுகளும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தது. குப்பை லாரிகளை எடை போட, சில எடை நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கும் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்படும். லாரிகளில் பொருத்தப்படும் தொழில்நுட்ப கருவியால், எடை மேடையில் உள்ள லாரி விவரம், எடை விவரம் உடனுக்குடன் மாநகராட்சிக்கு, "ஆன்-லைன்' மூலமாக தெரியவரும். பணி சரிவர நடைபெறா விட்டால், கட்டணம் குறைத்து வழங்கப்படும்.

நாளை (இன்று) முதல் அந்தந்த வாகனங்கள், ஒப்படைக்கப்பட்ட இடங்களில் இயங்கத் துவங்கும். மொத்தம் 600 தள்ளுவண்டிகள், 800 குப்பை பெட்டிகள், 10 டிப்பர் ஆட்டோக்கள், 12 காம்பாக்டர் வாகனங்களும், வாகன ஓட்டுனர்கள் 32 பேர், உதவியாளர்கள் 28 பேர், துப்புரவு பணியாளர்கள் 781 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதனால், குப்பை அள்ளும் பணி வேகமாக நடக்கும். கட்டணமில்லா தொலைபேசி வசதி ஏற்படுத்த இருப்பதால், குப்பை அள்ளும் பணியில் பிரச்னை இருந்தால், பொதுமக்கள் புகார் செய்யலாம். இவ்வாறு, கமிஷனர் செல்வராஜ் கூறினார்.

கண்காணிப்பு

குப்பை சேகரிக்கும் பெட்டிகளில்,"ரேடியோ பிரீகுவன்ஸி' ஐ.டி., பொருத்தப்பட்டுள்ளதால், குப்பை தொட்டியை கையாளும் நடவடிக்கைகளை, ஆன்-லைனில் கண்காணிக்க முடியும். குப்பை தொட்டி உள்ள பகுதிகள் சிவப்பு விளக்குகளாக மானிட்டரில் தெரியும்.

குப்பை நிரம்பி பெட்டி எடுத்துச்செல்லும்போது, அப்பகுதி பச்சை நிறமாக மாறும். பச்சை நிறமாக மாறாத பகுதிகளில் குப்பை அகற்றப்படவில்லை என்பது எளிதில் தெரியவரும். வாகனங்களிலும் ஜி.பி.ஆர்.எஸ்., தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதால், வாகனங்கள் எந்த பகுதியில் இயங்குகின்றன என்பதை கமிஷனர் அறையில் இருந்து கண்காணிக்க முடியும்.

 


Page 3 of 66