Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

பம்மல் நகராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமணி               18.06.2013

பம்மல் நகராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

பம்மல் நகராட்சியில் பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்தும், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவதின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இப்பேரணிக்கு பம்மல் நகர்மன்றத் தலைவர் சி.வி.இளங்கோவன் தலைமை வகித்தார். இந்தப் பேரணியில் பள்ளி மாணவர்கள் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த பல்வேறு வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் முக்கியச் சாலைகளில் ஊர்வலமாகச் சென்றனர்.

பின்னர் பம்மல் நகர்மன்றத் தலைவர் சி.வி.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியது: மழைநீர் சேகரிப்பின் மூலம் கிடைக்கும் பயன்களைக் கருத்தில் கொண்டு, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைத் தமிழகத்தில் முதன் முதலாக செயல்படுத்தியவர் ஜெயலலிதா ஆவார்.

தமிழக முதல்வரின் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தவும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கவும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.

புதிதாக கட்டட அனுமதி பெற, மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு அமைப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

வீடுகள்,வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்கெனவே உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு சரியாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதை மறு ஆய்வு செய்த பிறகு, சொத்து வரி விதிப்பு, குடிநீர் இணைப்புக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விரைவில் பம்மல் நகராட்சியில் வீடுவீடாகச் சென்று இவற்றை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

பம்மல் நகராட்சி ஆணையர் பி.வி.ரவிச்சந்திரன், துணைத் தலைவர் பி.அப்பு வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

மணப்பாறை நகரில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்திட வேண்டும் நகரசபை ஆணையர் அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி             17.06.2013

மணப்பாறை நகரில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்திட வேண்டும் நகரசபை ஆணையர் அறிவிப்பு

மணப்பாறை நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க வேண்டும் என்று மணப்பாறை நகரசபை ஆணையர் சுப்பிரமணியன் அறிவித்து உள்ளார்.

மழை நீர் சேமிப்பு

மணப்பாறை நகரசபை ஆணையர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:&

மணப்பாறை நகராட்சிப்பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் போன்ற கட்டிடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளில் பழுதுகள் ஏற்பட்டிருந்தால் அதனை சரி செய்யவும், மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்கப்படாத கட்டிடங்களுக்கு புதிதாக மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு அமைத்து அதற்கான விபரத்தினை நகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கவேண்டும்.

மழைநீர் சேமிப்பு தொடர்பான விபரங்களை பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ள நகராட்சி அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மழைநீர் சேகரிப்பு தகவல் மையத்தில் பொதுமக்கள் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு விபரம் தெரிந்து கொள்ளலாம். மேலும் இவ் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி மழைநீர் சேமிப்பு கட்டமைப்பினை பார்த்து விபரம் தெரிந்துகொண்டு பொதுமக்கள் தங்களது கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தி விபரம் தெரிவிக்க வேண்டும்.

நீர் ஆதாரம் கிடைக்க...

வருகிற பருவமழை காலத்தில் நமக்கு கிடைக்கும் மழைநீரை வீணாக்காமல் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தி பூமிக்குள் செலுத்தலாம். மழைநீர் சேமிப்பு அமைப்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும், நீரின் தன்மை மாறுபடும். மழைநீர் சேமிப்பு அமைப்பினால் கடும் வறட்சி காலத்திலும் நீர் ஆதாரம் கிடைக்க வழிவகை உள்ளதால் பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பேணி பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு ஆணையர் சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

 

ஈரோடு மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினத்தந்தி               15.06.2013

ஈரோடு மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு பேரூராட்சிகளில் மழை நீர் சேகரிப்பு ஊர்வலம் நடைபெற்றது.

சிவகிரி

சிவகிரி பேரூராட்சியின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் பரமு என்கிற ஆறுமுகம் தொடங்கிவைத்தார். சிவகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ–மாணவிகள் ஊ£ர்வலத்தில் கலந்துகொண்டு மழைநீர் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

ஊர்வலத்தில் செயல் அதிகாரி தங்கவேல், கவுன்சிலர் சண்முகசுந்தரம், முன்னாள் கவுன்சிலர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.

சென்னசமுத்திரம்

சென்னசமுத்திரம் பேரூராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு பேரூராட்சி தலைவி சுசீலா சண்முகம் தலைமை தாங்கினார். சாலைப்புதூர் தொடக்கப்பள்ளி மாணவ–மாணவிகள் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கோஷங்கள் முழங்கியவாறு ஊர்வலத்தில் சென்றார்கள்.

ஊர்வலத்தில், பேரூராட்சி செயல் அதிகாரி மகேந்திரன், கவுன்சிலர்கள் வெற்றிவேல், சண்முகம், தலைமை ஆசிரியர் சண்முகம் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்.

கொடுமுடி

கொடுமுடி பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கொடுமுடி எஸ்.எஸ்.வி. தொடக்கப்பள்ளி மாணவ–மாணவிகள் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கோஷங்கள் முழங்கியபடி சென்றார்கள். பேரூராட்சி செயல் அதிகாரி பழனிச்சாமி, துணை தலைவர் மனோகரன், கவுன்சிலர்கள் வெண்ணிலா பாலு, பழனியப்பன், பாஸ்கரன், தலைமை ஆசிரியர் திலகம் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே உள்ள கே.என்.பாளையம் பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு பேரூராட்சி தலைவர் கே.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் செயல் அதிகாரி மா.சம்பத்துநாயுடு மற்றும் அதிகாரிகள், ஊர்ப்பெதுமக்கள், பள்ளிக்கூட மாணவர்கள் இதில் கலந்த கொண்டனர்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்து தொடங்கி ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பெருமாள் கோவில் அருகே முடிவடைந்தது.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை பேரூராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை அம்மாபேட்டை பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் தொடங்கிவைத்தார். பெரியசாமி நடுநிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

ஊர்வலத்தில் பேரூராட்சி துணைத்தலைவர் சுந்தரராசன், இளநிலை உதவியாளர் ராஜமூர்த்தி, கவுன்சிலர்கள் ராஜேந்திரன், கருப்பணன், ஜெயக்குமார், முருகேசன், சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.

நெரிஞ்சிப்பேட்டை

நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி சார்பில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை செயல் அதிகாரி ஹேமலதா தொடங்கி வைத்தார். நெரிஞ்சிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஊர்வலத்தில் கலந்துகொண்டு, மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

ஊர்வலத்தில், பேரூராட்சி கவுன்சிலர்கள் என்.ஆர்.ராசு, சங்கீதா உள்பட பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலக உதவியாளர்கள் கலந்துகொண்டார்கள்.

ஆப்பக்கூடல்

ஆப்பக்கூடல் பேரூராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். ஆப்பக்கூடல் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூட மாணவ–மாணவிகள் ஊர்வலத்தில் கலந்துகொண்டு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினார்கள்.

ஊர்வலத்தில் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டார்கள். முடிவில் செயல் அதிகாரி கருப்பண்ணன் நன்றி கூறினார்.

 


Page 8 of 96