Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

அனுமதி பெறாமல் ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் கட்டிய கட்டடம்: அகற்ற மாநகராட்சி பிறப்பித்த நோட்டீஸ் செல்லும்

Print PDF
தினமணி         14.04.2017          

அனுமதி பெறாமல் ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் கட்டிய கட்டடம்: அகற்ற மாநகராட்சி பிறப்பித்த நோட்டீஸ் செல்லும்

ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் திட்ட அனுமதி பெறாமல்  கட்டடப்பட்ட மூன்று மாடி கட்டடத்தை அகற்றுவதற்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ் செல்லும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பொன் விழா நகரைச் சேர்ந்தவர் ஷபிதா பானு. இவர், கடந்த 2010-ஆம் ஆண்டு முருகேசன் என்பவரிடம் இருந்து 1,040 சதுர அடி நிலத்தை வாங்கி, மூன்று மாடி கொண்ட கட்டடம் கட்டியுள்ளார்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட நிலம் ஐசிஎஃப்.க்குச் சொந்தமானது எனக்கூறி, அதன் தலைமை பொறியாளர், கட்டடத்தை காலி செய்யும்படி கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷபிதா பானு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே நிலுவையில் இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, கடந்த 2015-ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட கட்டடத்தின் வரைபட அனுமதியை சமர்பிக்குமாறு, மனுதாரருக்கு சென்னை மாநகராட்சி -நோட்டீஸ்- அனுப்பியது.

ஆனால், கட்டடத்தை வரன்முறைப்படுத்தக்கோரி மாநகராட்சிக்கு அவர் விண்ணப்பித்தார். இதையடுத்து, அந்த கட்டடத்தை அகற்றும்படி மாநகராட்சி -நோட்டீஸ்- அனுப்பியது. இதை எதிர்த்து ஷபிதா பானு தாக்கல் செய்த மனுவை விசாரித்தத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, சம்பந்தப்பட்ட நிலமானது,

இந்திய ரயில்பெட்டி தொழிற்சாலைக்குச் சொந்தமானது என்பதும், திட்ட அனுமதி இல்லாமல் மூன்று மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்பதற்கு ஆவண ஆதாரங்கள் தெளிவாக உள்ளன. ஆகையால், மனுதாரருக்கு எந்தவித சலுகையும் வழங்க முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

1989க்கு பின் உருவான மனைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல்! வீடு கட்ட திட்டமிட்டவர்கள் அதிர்ச்சி

Print PDF

தினமலர்          05.01.2015

1989க்கு பின் உருவான மனைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல்! வீடு கட்ட திட்டமிட்டவர்கள் அதிர்ச்சி


சென்னை பெருநகர் பகுதிகளில், கடந்த, 1989ம் ஆண்டுக்கு பின், பிரிக்கப்பட்ட மனைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில் எழுந்துள்ள சிக்கலால், விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு கட்ட நினைப்பவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

சென்னை பெருநகர் பகுதியில், கடந்த, 1989, டிச., 31ம் தேதிக்கு முன், உருவான அங்கீகாரமற்ற மனைகள், மனை உட்பிரிவுகளை வரன்முறை செய்யும் திட்டத்தை, 1992ம் ஆண்டு சி.எம்.டி.ஏ., அறிவித்தது. அதன்படி, ஆயிரக்கணக்கான மனைகள் வரன்முறை செய்யப்பட்டன. முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு, பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு, புதிய மனைப்பிரிவுகளுக்கான அங்கீகாரங்களை, சி.எம்.டி.ஏ., வழங்கி வருகிறது.

குழப்பம் : ஆனால், பெரிய அளவில் அதிக பரப்பளவை கொண்ட புதிய மனைப்பிரிவு திட்டங்களுக்கு மட்டுமே, இத்தகைய அங்கீகாரம் கிடைக்கிறது. அதில், ஒரு குடும்பத்தில் தலைவருக்கு சொந்தமாக, இரண்டு அல்லது மூன்று கிரவுண்ட் நிலங்கள் இருந்து, அது அவர் காலத்துக்கு பின் வாரிசுகளால் பிரிக்கப்பட்டால், இத்தகைய பிரிப்புகள், முறையான மனைப்பிரிவாக அங்கீகாரம் பெற வேண்டும். ஒரு கிரவுண்ட் அளவுக்கான நிலத்துக்கு, அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இத்தகைய மனைகள் அங்கீகாரம் கோரி வந்தால், அதற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான, முறையான வழிகாட்டுதல்கள் இல்லாததால், குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக, இத்தகைய சிறிய மனைகளுக்கு, தனியாக அங்கீகாரம் கேட்டு விண்ணப்பங்கள் வந்தால், அந்த நிலம் தொடர்பாக, கடந்த, 1989ம் ஆண்டுக்கு முந்தைய, ஆவண பதிவை கணக்கில் எடுத்துக் கொண்டு, வரன்முறை திட்டத்தில் சேர்த்து விடுகின்றனர்.இதனால், தனிப்பட்ட மனைகளில் வீடு கட்டுவோருக்கு, கூடுதல் செலவு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

காரணம் என்ன?
பெயர் குறிப்பிட விரும்பாத, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: கடந்த, 1989ம் ஆண்டுக்கு பின், உருவான புதிய மனைகளை முறைப்படுத்துவதில் குழப்பம் நிலவுகிறது. அதற்கான முறையான விதிகள் இருப்பதாக, நகரமைப்பு துறையினர் கூறினாலும், உள்ளாட்சி அமைப்புகள் மத்தியில், நிலையில் இது விஷயத்தில் குழப்பம் நிலவுகிறது.எனவே, 1989ம் ஆண்டுக்கு பின் உருவான அனைத்து மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான திட்டத்தை, அரசு செயல்படுத்த வேண்டியது அவசியமாகி உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
 

13,600 கட்டட திட்டம்: ஆன்லைன் மூலம் தெற்கு தில்லி மாநகராட்சி அனுமதி

Print PDF
தினமணி       26.09.2014

13,600 கட்டட திட்டம்: ஆன்லைன் மூலம் தெற்கு தில்லி மாநகராட்சி அனுமதி

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை 13,600 கட்டட திட்ட வரைபடங்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு தில்லி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கட்டடங்களின் வரைபடங்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதியளிக்கும் வசதியை, கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெற்கு தில்லி மாநகராட்சி அறிமுகப்படுத்தியது.

ஒவ்வொரு கட்டடங்களின் வரைபடங்களுக்கும் அதிகபட்சமாக 7 நாள்களுக்குள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 24 மணி நேரத்துக்குள்ளேயும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைபடங்களில் தேவையான மாற்றங்கள் செய்வதும் ஆன்லைன் மூலமே மேற்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

கட்டட வரைபடங்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி அளிக்கும் வசதியை நாட்டிலேயே முதல் முறையாக தெற்கு தில்லி மாநகராட்சி அறிமுகப்படுத்தியது.

இந்த ஆன்லைன் வசதிக்காக, சமீபத்தில் "ஸ்காச்' குழுமத்தின் விருதையும் பெற்றது.

தற்போது, கட்டட வரைபடங்களுக்கு தெற்கு தில்லி, வடக்கு தில்லி, புது தில்லி மாநகராட்சிகள் ஆன்லைன் மூலம் அனுமதி அளித்து வருகின்றன.
 


Page 2 of 96