Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

2 விதிமீறல் கட்டடங்களுக்கு சீல்: சி.எம்.டி.ஏ. நடவடிக்கை

Print PDF
தினமணி                    08.03.2013

2 விதிமீறல் கட்டடங்களுக்கு சீல்: சி.எம்.டி.ஏ. நடவடிக்கை

சென்னை, புரசைவாக்கம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்டு வந்த இரு வேறு கட்டடங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் வியாழக்கிழமை (மார்ச் 7) சீல் வைத்தனர்.

இது குறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கூறியது: புரசைவாக்கம், மூகாத்தம்மாள் தெரு, எண்.39 என்ற முகவரியில் தரைத்தளம் மற்றும் 4 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ தரப்பில் திட்ட அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் திட்ட அனுமதிக்கு முரணாக 4 தளங்களும் கட்டப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. அது குறித்து கட்டட உரிமையாளருக்கு கடந்த பிப்.8-ம் தேதி அறிவிக்கை அனுப்பப்பட்டது. அறிவிக்கை கிடைத்த பின்னரும் கட்டடத்தை விதிகளின்படி மாற்றியமைக்காததால் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் அக்கட்டடத்துக்கு சீல் வைத்துள்ளனர். அதே போல், பெரும்பாக்கம் பிரதான சாலை, வி.ஜி.பி.நகர், எண்-3, என்ற முகவரியில் தரைத்தளம் மற்றும் 2 தளங்களைக் கொண்ட வணிகக் கட்டடம் கட்ட திட்ட அனுமதி வழங்கப்பட்டது. திட்ட அனுமதிக்கு முரணாக 3 தளங்கள் கட்டப்பட்டு வந்ததால், அதை மாற்றியமைக்குமாறு கட்டடத்தின் உரிமையாளருக்கு கடந்த பிப்.6-ம் தேதி அறிவிக்கை அனுப்பட்டது. அறிவிக்கை கிடைத்த பின்னரும் விதிகளின்படி கட்டடம் மாற்றி அமைக்கப்படாததால் அக்கட்டடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றனர் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள்.
Last Updated on Friday, 08 March 2013 10:12
 

இம்மாதம் முதல் மழைநீர் சேகரிப்பு திட்டம் கட்டாயமாக்கப்படும்: மாநகராட்சி மேயர் அறிவிப்பு

Print PDF
தினமணி           01.03.2013

இம்மாதம் முதல் மழைநீர் சேகரிப்பு திட்டம் கட்டாயமாக்கப்படும்:  மாநகராட்சி மேயர் அறிவிப்பு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் மழைநீர் சேகரிப்பு திட்டம் இம் மாதம் முதல் கட்டாயமாக்கப்படும் என மேயர் விஜிலா சத்தியானந்த் வியாழக்கிழமை அறிவித்தார்.

மேலும் கட்டடங்களுக்கு ஒரு வாரத்தில் திட்ட அனுமதி அளிக்க கிரீன் சேனல் திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் மேயர் விஜிலா சத்தியானந்த் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பூ. ஜகநாதன், ஆணையர் மு. சீனி அஜ்மல்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய மேலப்பாளையம் மண்டலத் தலைவர் ஹைதர் அலி, உறுப்பினர்கள் தவுலத், குறிச்சி சேகர் உள்ளிட்டோர் மாநகராட்சி அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினர். மாமன்ற உறுப்பினர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை. எந்த குறைகளை கூறினாலும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த மேயர், மாமன்ற உறுப்பினர்களை அதிகாரிகள் மதிக்க வேண்டும். உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்.

கட்டுப்பாடு இல்லாத அதிகாரிகள் இந்த மாநகராட்சிக்கு தேவையில்லை என்றார்.

மேலும் உறுப்பினர்களின் புகார்களுக்கு ஆணையர் சீனி அஜ்மல்கான் பதிலளித்து பேசுகையில், அதிகாரிகள் மீது ஏதேனும் புகார் இருந்தால் எழுத்துப் பூர்வமாக உரிய ஆதரங்களுடன் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

கீரின் சேனல் திட்டம்: துணை மேயர் பூ. ஜகநாதன் பேசுகையில், கட்டடங்களுக்கு திட்ட அனுமதி (பிளான் அப்ரூவல்) விரைவாக வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட கிரீன் சேனல் திட்டம் குறித்து பிரச்னை கிளப்பினார். அனைத்து ஆவணங்களும் முறையாக இருக்கும் பட்சத்தில் திட்ட அனுமதியை ஒரு வாரத்திற்குள் வழங்கும் வகையில் கிரீன் சேனல் திட்டத்தை மார்ச் மாதம் முதல் அமல்படுத்த இயலுமா என அதிகாரிகளிடம் அவர் வினவினார்.

இதற்கு பதிலளித்த செயற்பொறியாளர் (திட்டம்) செüந்திரராஜன், இந்த திட்டத்தை வரும் திங்கள்கிழமை முதல் அமல்படுத்த முடியும் என தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய மேயர் விஜிலா சத்தியானந்த், கிரீன் சேனல் திட்டம் வரும் திங்கள்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும். அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்து செவ்வாய்க்கிழமை மனு கொடுத்தால், அடுத்த செவ்வாய்க்கிழமை பிளான் அப்ரூவல் வழங்கப்படும் என்றார் மேயர்.

மழைநீர் சேகரிப்பு திட்டம்: தொடர்ந்து பேசிóய துணை மேயர் ஜெகநாதன் தமிழக முதல்வரின் சிறந்த திட்டமான மழைநீர் சேகரிப்பு திட்டத்தை திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் கட்டாயமாக்கி செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து மேயர் விஜிலா சத்தியானந்த் கூறியதாவது:

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் மழைநீர் சேகரிப்பு திட்டம் மார்ச் மாதம் முதல் கட்டாயமாக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும். மழைநீர் வசதி ஏற்படுத்தாத கட்டடங்களுக்கு பிளான் அப்ரூவல் வழங்கப்படமாட்டாது.

அனைத்து கட்டடங்களிலும் குறிப்பிட்ட காலத்திற்குள் மழைநீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்படும். அந்த காலத்திற்குள் மழைநீர் வசதி செய்யாவிட்டால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றார் மேயர்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் உமாபதி சிவன், திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் விளம்பர பலகைகளை வைத்ததில் ரூ. 5 கோடி வரி பாக்கி இருப்பதாக கூறப்படுகிறதே என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஆணையர் சீனி அஜ்மல்கான், விளம்பர பலகைகளைப் பொருத்தவரை மாவட்ட ஆட்சியர் தான் முழு பொறுப்பு. மாநகராட்சி பகுதியில் விளம்பர பலகைகளை வரைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

தி.மு.க. உறுப்பினர் வி. பொன்னையாபாண்டியன் பேசுகையில், திருநெல்வேலி - தென்காசி பிரதான சாலையில் பழைய பேட்டை மின்வாரிய அலுவலகம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ. 21 கோடி ஆகும். இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே, அந்த நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

இதற்கு பதிலளித்த மேயர், அந்த நிலத்தை சுற்றி முள்வேலி அமைத்து, மாநகராட்சி சார்பில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Last Updated on Friday, 01 March 2013 10:32
 

பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு அதிகாரிகள்.. திட்டத்தை நிறைவேற்ற காலக்கெடு நீட்டிப்பு

Print PDF
தினமலர்                   28.02.2013

பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு அதிகாரிகள்.. திட்டத்தை நிறைவேற்ற காலக்கெடு நீட்டிப்பு

கடலூர்:கடலூர் நகரில் அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணி வரும் ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும் என குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் கூறினார்.

கடலூர் நகரில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நகரப் பகுதியில் உள்ள 157 கி.மீ., தொலைவிற்கு அமைக்கப்பட வேண்டிய பைப் லைன் பணிகள் முடிக்கப்பட்டு முதுநகர், கே.கே. நகர் உட்பட ஒரு சில இடங்களில் மட்டுமே பாக்கி உள்ளது.

கடலூர் முதுநகரில் பாதாள சாக்கடைத் திட்டக் குழாய்கள் தேசிய நெடுஞ்சாலையில் மங்கை மகால் முதல் மோகினிப் பாலம் வரை சாலையின் இரு பக்கங்களிலும் பெரிய சைஸ் குழாய்கள் புதைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டன.

இதனால் முதுநகர் மற்றும் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். சாலையில் தோண்டிப் போட்ட மண் மேடுகளின் மீது வாகனங்கள் செல்வதால் புழுதி பறந்து அப்பகுதியே புகை மண்டலமானது. இதனால் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரின் தார்சாலை புதுப்பிக்கும் பணி மற்ற இடங்களில் போடப்பட்டும் கூட கடலூர் முதுநகரில் சாலை போடாமல் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், ஆமை வேகத்தில் நடந்து வந்த பாதாள சாக்கடைப் பணி நேற்றுடன் முடிவடைந்தது.

அதைத் தொடர்ந்து சிமென்ட் பேக்கிங் செய்யும் பணி நடந்து வருகிறது. ஒரு வழியாக பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் முதுநகர் பகுதியில் நிறைவடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது நகரம் முழுவதும் சேகரிக்கப்படும் கழிவு நீர், நேரு நகரில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு, ராட்சத குழாய் வழியாக சுத்திகரிப்பு செய்வதற்கான குழாய் புதைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் உப்பனாறு வழியாக கெடிலம் ஆற்றில் கலக்கும் படி திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணி துவங்குவதற்கான உத்தரவு வழங்கியும் பணிகள் துவக்கவில்லை.

இதற்கிடையே பாதாள சாக்கடைத் திட்டப் பணி துவங்கி 6 ஆண்டுகளைக் கடந்து விட்டதால் அதிகாரிகள் அமைச்சரிடம் இதோ, அதோ என வாய்தா வாங்கி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் இத்திட்டம் பிப்ரவரி மாதம் முடிக்கப்பட்டு விடும் என அமைச்சரிடம் அதிகாரிகள் வாக்குறுதியளித்தனர். ஆனால் இது வரை நிறைவேற்றப்படவில்லை.

இது குறித்து குடிநீர் வடிகால்வாரிய செயற்பொறியாளர் தங்கவேல் கூறுகையில், "முதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பணிகள் முழுவதும் நிறைவடைந்து விட்டது. பீச் ரோடில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் வரும் ஏப்ரல் மாதம் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்' என மீண்டுமொருமுறை பாதாள சாக்கடைத் திட்டப் பணிக்காக வாய்தா வாங்கியுள்ளார்.

Last Updated on Friday, 01 March 2013 10:32
 


Page 20 of 96