Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

அனுமதி பெறாமல் ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் கட்டிய கட்டடம்: அகற்ற மாநகராட்சி பிறப்பித்த நோட்டீஸ் செல்லும்

Print PDF
தினமணி         14.04.2017          

அனுமதி பெறாமல் ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் கட்டிய கட்டடம்: அகற்ற மாநகராட்சி பிறப்பித்த நோட்டீஸ் செல்லும்

ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் திட்ட அனுமதி பெறாமல்  கட்டடப்பட்ட மூன்று மாடி கட்டடத்தை அகற்றுவதற்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ் செல்லும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பொன் விழா நகரைச் சேர்ந்தவர் ஷபிதா பானு. இவர், கடந்த 2010-ஆம் ஆண்டு முருகேசன் என்பவரிடம் இருந்து 1,040 சதுர அடி நிலத்தை வாங்கி, மூன்று மாடி கொண்ட கட்டடம் கட்டியுள்ளார்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட நிலம் ஐசிஎஃப்.க்குச் சொந்தமானது எனக்கூறி, அதன் தலைமை பொறியாளர், கட்டடத்தை காலி செய்யும்படி கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷபிதா பானு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே நிலுவையில் இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, கடந்த 2015-ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட கட்டடத்தின் வரைபட அனுமதியை சமர்பிக்குமாறு, மனுதாரருக்கு சென்னை மாநகராட்சி -நோட்டீஸ்- அனுப்பியது.

ஆனால், கட்டடத்தை வரன்முறைப்படுத்தக்கோரி மாநகராட்சிக்கு அவர் விண்ணப்பித்தார். இதையடுத்து, அந்த கட்டடத்தை அகற்றும்படி மாநகராட்சி -நோட்டீஸ்- அனுப்பியது. இதை எதிர்த்து ஷபிதா பானு தாக்கல் செய்த மனுவை விசாரித்தத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, சம்பந்தப்பட்ட நிலமானது,

இந்திய ரயில்பெட்டி தொழிற்சாலைக்குச் சொந்தமானது என்பதும், திட்ட அனுமதி இல்லாமல் மூன்று மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்பதற்கு ஆவண ஆதாரங்கள் தெளிவாக உள்ளன. ஆகையால், மனுதாரருக்கு எந்தவித சலுகையும் வழங்க முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

கோடையின் ஆதிக்கம் தொடங்கியது: வறட்சியை எதிர்கொள்ள குடிநீர் வாரியம் யோசனை

Print PDF

தினமணி           12.04.2017

கோடையின் ஆதிக்கம் தொடங்கியது: வறட்சியை எதிர்கொள்ள குடிநீர் வாரியம் யோசனை

metro-water

சென்னை, சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள தண்ணீர் வறட்சியை எதிர்கொள்வது குறித்தும், எஞ்சியுள்ள குடிநீர் ஆதாரங்களை தக்க வைத்துக்கொள்வது தொடர்பாகவும் பொதுமக்களுக்கு சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

சென்னையின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட 4 ஏரிகளில் மொத்த கொள்ளளவில் (11 டிஎம்சி) தற்போது 10 சதவீத தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது. அதேபோன்று நிலத்தடி நீரின் அளவு இதுவரை இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளது. குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூர் பகுதியில் 0.70 மீட்டரும், அதிகபட்சமாக திரு.வி.க.நகர் பகுதியில் 2.88 மீட்டரும் குறைந்துள்ளது.

இருப்பினும் பிற குடிநீர் ஆதாரங்கள் மூலம் மொத்த தண்ணீர் தேவையில் 70 சதவீதம் வரை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் சென்னையின் குடிநீர் தேவையைச் சமாளிக்க மாதத்துக்கு 1 டிஎம்சி (1,000 மில்லியன் கன அடி) தண்ணீர் தேவைப்படும். வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தால் ஆவியாதல் முறையில் அதிகளவு தண்ணீர் வீணாவதோடு, குடிநீர் தேவை அதிகரிக்கும்.

எனினும் எஞ்சியுள்ள குடிநீர் ஆதாரங்களை பாதுகாத்தல், ஆழ்துளை கிணறுகளை முறையாக பயன்படுத்துதல், மழை நீர் கட்டமைப்புகளைச் சீரமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலமாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க முடியும் என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது:

சென்னையில் கடந்த 2000, 2002-ஆம் ஆண்டுகளில் தற்போது உள்ள குடிநீர் வறட்சியைக் காட்டிலும் 2 மடங்கு மோசமான நிலை இருந்தது. அந்த கால கட்டங்களில் 4 ஏரிகளிலும் தண்ணீர் முற்றிலும் வறண்டது. அந்த நிலையிலும் குடிநீர் லாரிகள், வீராணம் தண்ணீர் மூலமாக பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடிந்தது. இதனால் நிகழாண்டிலும் குடிநீர்த் தட்டுப்பாட்டை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

70 லிட்டர் தண்ணீர் வரை...:சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு நபருக்கு சராசரியாக 125 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது பற்றாக்குறை காரணமாக 70 லிட்டர் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அளவு மேலும் குறைந்து விடக்கூடாது என்பதில் அதிக அக்கறை செலுத்தி வருகிறோம்.

வீட்டில் குடிநீர் குழாயில் ஒரு சொட்டு நீர் கசிந்தாலும் கூட 10 மணி நேரத்தில் 20 லிட்டர் தண்ணீர் வீணாகும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். குளிப்பது, துணிகளைத் துவைப்பது போன்றவற்றுக்கு மொத்த தேவையில் 40 சதவீதம் தண்ணீர் தேவைப்படுகிறது.

இந்த தண்ணீரை கல்வாழையைப் பயன்படுத்தி எளிமையான கட்டமைப்புகள் மூலம் மறுசுழற்சி செய்தால் அந்த நீரை செடிகள், கழிவறைகளுக்கு மீண்டும் பயன்படுத்த முடியும். இதற்கான திட்டத்தை பொதுமக்கள் குடிநீர் வாரியத் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பலன் பெறலாம். ஒரு வீட்டில் 10 லிட்டர் தண்ணீர் வீணாவதைத் தடுத்தால் 15 லட்சம் வீடுகளில் தினமும் 1.50 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம்.

வீடுகளில் மின் மோட்டார்களை பயன்படுத்தும் பொதுமக்கள் காலையில் 1 மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதாவது ஒரு முறை பயன்படுத்துவதற்கும் அடுத்த முறை பயன்படுத்துவதற்கும் குறைந்தபட்சம் 9 மணி நேரம் இடைவெளி தேவை. அப்போதுதான் நீருட்டல் சீராக இருக்கும். மின் மோட்டாரை தொடர்ச்சியாக இயக்குவதால் மின்சாரம் வீணாவதோடு, நீருட்டலில் பெரும் தடை ஏற்படும்.

இந்தாண்டு கோடை மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள மழைநீர் கட்டமைப்புகளைச் சீரமைக்க வேண்டும். மழை நீரை எளிதில் உட்கிரகிக்கும் வகையில் அதில் உள்ள குப்பை, கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு குடியிருப்பிலும், அது தனி வீடாக இருந்தாலும் அல்லது அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும், ஒரு கிணறு இருந்தால், அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கிணறுகளை வாஸ்து போன்ற காரணங்களுக்காகவோ அல்லது அது சில ஆண்டுகளாக வற்றிக் கிடக்கிறது என்பதற்காகவோ, மூடிவிட நினைப்பது முற்றிலும் தவறான செயலாகும்.

கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றுதான். இருப்பினும் சவால்களை எதிர்கொண்டு பொதுமக்களின் குடிநீர்த்தேவைகளை கட்டாயம் பூர்த்தி செய்வோம். அதே நேரத்தில் குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்கும் பொறுப்பு தங்களுக்கும் இருக்கிறது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

 

கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ திட்டத்துக்கு விரைவில் டெண்டர்: மாநகராட்சி ஆணையாளர் தகவல்

Print PDF

தி இந்து          12.04.2017

கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ திட்டத்துக்கு விரைவில் டெண்டர்: மாநகராட்சி ஆணையாளர் தகவல்

மல்டிவெவல் பார்க்கிங்’ திட்டம். (கோப்பு படம்)
மல்டிவெவல் பார்க்கிங்’ திட்டம். (கோப்பு படம்)

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கோவை மாநகராட்சியில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ (பலமுனை வாகன நிறுத்துமிடங்கள்) திட்டத்தை தொடங்க, 15 நாட்களில் டெண்டர் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிப் பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கை அதி கரித்துக்கொண்டே செல்கிறது. ஏற்கெனவே 20 லட்சம் வாகனங்களுக்கு மேல் இயங்கும் நிலையில், ஆண்டுதோறும் புதிதாக 1.5 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதுதவிர, கல்வி, தொழில், வியாபாரம், மருத்துவம் உள்ளிட்டவற்றுக்காக தினமும் ஏராளமான வாகனங்களில் சுமார் 2 லட்சம் பேர் கோவைக்கு வருகின்றனர்.

அவிநாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, நஞ்சப்பா சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை பகுதிகளில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வர்த்தக மையங்கள் அதிகம் நிறைந்துள்ள கிராஸ் கட் சாலை, டவுன் ஹால், ஆர்.எஸ்.புரம், டி.பி.சாலை, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பண்டிகை, திருவிழாக்களின்போதும், வார இறுதி நாட்களிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்த போதுமான இட வசதி இல்லை.

சில இடங்களில், தனியார் நிறுவனங்கள் வாகன நிறுத்தும் இடங்களை ஏற்படுத்தி இருந தாலும், வர்த்தக நிறுவனங்கள் வாகன நிறுத்தும் இடங்களை அமைக்காததால், சாலையோரங் களிலேயே வாகனங்கள் நிறுத்தப் படுகின்றன. இதனால், கோவை மாநகராட்சியில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ வசதி ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதையடுத்து, 2014-ல் தனியார் பங்களிப்புடன் ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், டவுன்ஹால் பகுதி களில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ வசதி ஏற்படுத்தப்படும் என்று, அப் போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தினர், ‘மல்டிலெவல் பார்க்கிங்’ அமைய உள்ள இடங்களை ஆய்வு செய்தனர்.

ரூ.80 கோடி மதிப்பில்

இதற்கிடையே, காந்திபுரம் கிராஸ் கட் சாலை, ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலை, டவுன்ஹால் ஆகிய பகு திகளில் ரூ.80 கோடி மதிப்பில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ அமைக் கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று, சமீபத்தில் மாநகராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு பல்வேறு திட்டங்கள் தொடர்பாக, மாநகராட்சி ஆணையர்களுடன் நகராட்சி நிர்வாக ஆணையர் ஆலோசனை நடத்தி உள்ளார்.

30 ஆண்டுகளுக்கு உரிமம்

இத்திட்டத்துக்கு உடனடியாக டெண்டர் விட்டு, பணிகளைத் தொடங்குமாறு நகராட்சி நிர்வாக ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ரூ.80 கோடி மதிப்பில் 3 இடங் களில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ திட்டத்தைச் செயல்படுத்த, இன்னும் 15 நாட்களில் டெண்டர் விடப்படும். இத்திட்டத்துக்கு மாநகராட்சி இடம் ஒதுக்கி ஒப்புதல் அளிக்கும்.

தனியார் மூலமாக கட்டுமானப் பணிகள் நடைபெறும். அவர்களே அதை பராமரித்து, வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வர். 30 ஆண்டுகளுக்குப் பின்னர், மாநகராட்சிவசம் ஒப்படைப்பர். இதில், அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படும்.

வாகனங்களை நிறுத்துவது, அதற்கான ரசீது அளிப்பது உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படும். ஒப்பந்ததாரருக்கு வரும் வருவா யில், குறிப்பிட்ட பகுதியை மாநக ராட்சிக்குச் செலுத்த வேண்டும். இத்திட்டம் மூலமாக, கோவை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 14 of 3988