தினகரன் 09.06.2010
மாநகராட்சி ஊழியர்கள் பிடித்த பிச்சைக்காரர்கள் 22 பேர் மனநல மருத்துவமனைக்கு மாற்றம் மற்றவர்கள் முதியோர் இல்லத்தில் சேர்ப்பு
சென்னை, ஜூன் 9: மாநகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்ட பிச்சைக்காரர்களில் 22 பேரை மனநல மருத்துவமனையில் சேர்க்கவும் மீதமுள்ளவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் சென்னையில் சிக்னல் மற்றும் முக்கிய இடங்களில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்களை பிடிக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. ஒரே நாளில் 8 பெண்கள் உட்பட 38 பிச்சைக்காரர்கள் பிடிபட்டனர். இவர்கள் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு மருத்துவ உதவியாளர்கள் உதவியுடன் முடி திருத்தம் செய்யப்பட்டு, குளிக்க வைத்து, புத்தாடை கொடுக்கப்பட்டது. பின்னர் டாக்டர்கள் அவர்களுக்கு தோல் சிகிச்சை மற்றும் உடல்நலம் பாதிப்பு தொடர்பான சிகிச்சைகள் அளித்தனர்.
பிடிபட்ட 38 பிச்சைக்காரர்களில் 22 பேருக்கு லேசான மனநல பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இவர்களை போலீஸ் உதவியுடன் மாஜிஸ்திரேட் முன் நிறுத்தி, அவரது அனுமதியுடன் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்க்க உள்ளனர்.
மீதமுள்ள 16 பிச்சைக்காரர்கள் மிகவும் வயதானவர்கள். எனவே அவர்களை சென்னையில் உள்ள பல்வேறு முதியோர் இல்லங்களில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்கள் பிடிக்க வருவதை அறிந்து பிச்சைகாரர்கள் ஓட்டம் பிடிப்பதால், கூடுதல் ஊழியர்கள் மற்றும் போலீஸ் உதவியுடன் அவர்களை பிடிக்க மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.