சென்னையில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்

Monday, 09 August 2021 10:53 administrator நாளிதழ்௧ள் - ந௧ரம் மற்றும் மாந௧ரம்
Print

தினமணி              08.08.2021  

சென்னையில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்

posters

சென்னையை அழகுபடுத்தும் வகையில், இதுவரை, பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றி உள்ளனா்.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவுகளை அகற்றும் பணிகளும், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக மாநகரில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற மாதம்தோறும் ஒருவார காலத்திற்கு தீவிர தூய்மைப்பணி திட்டம், மாநகரில் அரசு மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அப்புறப்படுத்துதல் மற்றும் சுவர்களில் வரையப்பட்டுள்ள தனியார் விளம்பரங்களை அப்புறப்படுத்தி அவ்விடங்களில் வண்ண ஓவியங்களை வரைவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்கள் குறிப்பாக அரசு சுவர்கள், பாலங்கள், தூண்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த ஒருமாத காலமாக மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு வருகிறது.
 அதன் அடிப்படையில் இதுநாள்வரை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24,384 இடங்களில் 1,00,420 சுவரொட்டிகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டுள்ளது. 

இதில் வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 7,498 இடங்களில் 25,403 சுவரொட்டிகளும், மத்திய வட்டாரத்திற்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 7,883 இடங்களில் 31,263 சுவரொட்டிகளும், தெற்க்கு வட்டாரத்திற்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 9,003 இடங்களில் 43,754 சுவரொட்டிகளும் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.