தினகரன் 04.02.2014
தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
சேலம், : சேலம் மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாநக பகுதியில் 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநகரம் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள், ஹோட்டல், டீக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் விரிவான செய்தி படங்களுடன் வெளியானது.
இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் அசோகன், மாநகர் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள், ஹோட்டல்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு உள்ளதா? என சோதனையிட்டு பறிமுதல் செய்ய சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் நகர் நல அலுவலர் அர்ஜூன்குமார் தலைமையில் சூரமங்கலம்,
கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி ஆகிய 4 மண்டல பகுதிகளிலும் சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், சுரேஷ், ரவிச்சந்திரன், சரவணன், சங்கர் மற்றும் ஊழியர்கள் மைக்ரான் அளவிடும் கருவிகள் மூலம் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் பலசரக்கு கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்களில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை 500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதனை பயன்படுத்தி வந்த கடைக்காரர்களை எச்சரித்த அதிகாரிகள், ‘அடுத்தமுறை சிக்கினால் அபராதம் விதிக்கப்படும்,‘ என்றனர்.