40 சதவீத சொத்து வரி வசூல்: இந்தாண்டு ரூ. 700 கோடி வசூலிக்க இலக்கு

Tuesday, 06 August 2013 06:32 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print

தினமணி               06.08.2013

40 சதவீத சொத்து வரி வசூல்: இந்தாண்டு ரூ. 700 கோடி வசூலிக்க இலக்கு

சென்னை மாநகராட்சியில் 2013-14-ஆம் நிதியாண்டில் இதுவரை 40 சதவீத சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் சொத்து வைத்திருப்போரிடம் இருந்து சொத்து வரியை மாநகராட்சி வசூலிக்கிறது. இப்போது சென்னையில் சுமார் 15 லட்சம் பேர் சொத்து வரி செலுத்துகிறார்கள். மேலும் ஒவ்வொரு மாதமும் சுமார் 3,000 புதிய சொத்து வரி மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 40 சதவீத சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 40 சதவீதம் வரை சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு முடிவடைவதற்குள் 80 சதவீதம் வரை சொத்து வரி வசூல் செய்யப்பட்டுவிடும். இந்தாண்டு மட்டும் ரூ. 510 கோடியை சொத்து வரியாக வசூலிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பழைய வரி பாக்கிகளையும் சேர்த்து ரூ. 700 கோடி வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் ரூ. 500 கோடி வசூலிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் சுமார் ரூ. 461 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்தாவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதன் மூலம் வரி செலுத்துவது அதிகரித்துள்ளது. இந்தாண்டும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முயற்சி செய்யப்படும்.

இப்போது பழைய மாநகராட்சிப் பகுதிகளை விட விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் சொத்து வரி அதிகம் என்று புகார்கள் வருகின்றன. மேலும் இவற்றை சீராக்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் வருகின்றன. இதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பழைய சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்ட வரியே வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் அவ்வப்போது வரி உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடிய விரைவில் சொத்து வரி மதிப்பீடு திருத்தியமைக்கப்படும். அப்போது இந்த வித்தியாசம் குறைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.