தினமணி 23.09.2009
கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு
உத்தரமேரூர், செப். 22: உத்தரமேரூர் பேரூராட்சி, வேடபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 9.75 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காமராசர், பாரதியார், திருவள்ளுவர் பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைக் கட்டடங்களை சட்டப்பேரவை உறுப்பினர் க. சுந்தர் திறந்துவைத்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள 15 கிராம ஊராட்சிகளில் குடும்ப அட்டை வைத்துள்ளோருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும்; மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு 10 தினங்களில் மின்இணைப்பு கொடுத்து, இலவச டிவி வழங்கப்படும் என்றார்.
விழாக்கு 16-வது வார்டு உறுப்பினர் எ. பெருமாள் தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவி வி. பிரமிளா முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியை எம். வசந்தகுமாரி வரவேற்றார்.
பட்டதாரி ஆசிரியர் தெ. தனசேகரன் நன்றி கூறினார்.