தினமணி 04.10.2013
சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் ஆன்லைனில் செலுத்தும் வசதி
நாகர்கோவில் நகராட்சியில் ஆன்-லைன் மூலம் சொத்துவரி, குடிநீர்க் கட்டணம் செலுத்தும் வசதி வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
நாகர்கோவில் கே.பி சாலையில் உள்ள சைபர்கேட் இன்டெர்நெட் மையத்தில் நடைபெற்ற விழாவில், இந்த வசதியை ஆட்சியர் எஸ். நாகராஜன் தொடக்கிவைத்தார்.
தமிழகத்தில் ஏற்கெனவே மாநகராட்சிகளில் மட்டும் ஆன்-லைன் மூலம் வரி செலுத்தும் வசதி உள்ளது. நகராட்சிகளில் ஆன்-லைன் மூலம் வரி செலுத்தும் வசதி முதன்முறையாக நாகர்கோவில் நகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக மென்பொருள் புதிதாக வடிவமைக்கப்பட்டு நாகர்கோவில் நகராட்சி இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் பொதுமக்கள் எந்த இடத்திலிருந்தும், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் செலுத்தலாம்.
நகர்மன்றத் தலைவர் எம். மீனாதேவ், ஆணையர் கே. ராஜன், துணைத் தலைவர் சைமன் ராஜ், பொறியாளர் ப. ஜார்ஜ், நகரமைப்பு அலுவலர் ஜானகிராமன், நகர்நல அலுவலர் சந்திரன், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.