தினத்தந்தி 28.11.2013
பவானியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பவானி பஸ்நிலையத்தில் உள்ள நடைபாதையில் வியாபாரிகள் கடைகளை அமைத்து ஆக்கிரமித்திருந்தனர். அதனால் பஸ்நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கு இடமில்லாமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும் குடிநீர் தொட்டி மற்றும் கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டன. அதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து கோபி உதவி கலெக்டர் சந்திரசேகரசாகமுரியிடம் புகார் மனு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து உதவிகலெக்டர், பவானி பஸ்நிலையத்தில் நேற்று முன்தினம் திடீர் என்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நகராட்சி ஊழியர்களிடம் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள கடைகளை அகற்றும் படி உத்தரவிட்டார். அதன்பேரில் ஊழியர்கள் நேற்று காலை 11 மணி அளவில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.
அதைத்தொடர்ந்து பவானி பஸ்நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கும், நடந்து செல்வதற்கும் இடவசதி உள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறினர்.