தினத்தந்தி 11.07.2013
கோவை மாநகராட்சி சார்பில் குடிசை பகுதி மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்திற்கான முகாம் 15–ந்தேதி தொடங்குகிறது
கோவை மாநகராட்சி கமிஷனர் லதா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
வீடு கட்டும் திட்ட முகாம்
கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், நகர்ப்புற ஏழை மக்களுக்காக மாநகராட்சி எல்லைக்குட்பட்ட குடிசை மற்றும் நத்தம் பகுதிகளில், குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள் தங்களது வீட்டை கான்கிரீட் வீடுகளாக மாற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை நகரை குடிசைகள் இல்லாத நகரமாக்க, இத்திட்டத்தில் இதுவரை பயன் அடையாதவர்கள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதன்படி முகாம் நடைபெறும் மண்டல அலுவலகங்களுக்கு ஆவணங்களுடன் வந்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மத்திய, மாநில அரசின் மானிய தொகையினை பெறவும், குடிசை வீடுகளை கான்கிரீட் வீடாக மாற்றிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முகாமுக்கு வரும் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள், நிலத்தின் பட்டா, பத்திரம் நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், பட்டாதாரர் இறந்து இருப்பின் அவரின் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
முகாம் நடைபெறும் தேதிகள்
முகாம் நடைபெறும் இடம் மற்றும் தேதிகள் விவரம் வருமாறு:–
1.கிழக்கு மண்டல அலுவலகம்–15–ந் தேதி, 2. வடக்கு மண்டல அலுவலகம்–16–ந் தேதி, 3.தெற்கு மண்டல அலுவலகம்–17–ந் தேதி, 4.மேற்கு மண்டல அலுவலகம்–18–ந் தேதி, 5. மத்திய மண்டல அலுவலகம்–19–ந் தேதி.
இவ்வாறு அந்த அறிக்கையில் மாநகராட்சி கமிஷனர் லதா தெரிவித்துள்ளார்.