திருச்சி மாநகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க 11 பல்நோக்கு சேவை மையங்கள் மாநகராட்சி ஆணையர் தகவல்

Monday, 10 February 2014 06:33 administrator நாளிதழ்௧ள் - பொது சுகாதாரம் / துப்புரவு
Print

தினத்தந்தி             10.02.2014

திருச்சி மாநகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க 11 பல்நோக்கு சேவை மையங்கள் மாநகராட்சி ஆணையர் தகவல்

திருச்சி மாநகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க 11 பல்நோக்கு சேவை மையங்கள் அமைக்கப்பபடும் என்று மாநகராட்சி ஆணையர் தண்டபாணி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்கள் மற்றும் கழிவறைகள் போன்ற பொது சொத்துக்களை பராமரிக்க பயனாளிகள் குடும்பங்களை சேர்ந்த 400 சமுதாயம் சார்ந்த குழுக்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தலைமை தாங்கி பேசியதாவது:–

திருச்சி மாநகராட்சியில் நான்கு கோட்டங்களில் 65 வார்டுகள் உள்ளன. இதில் 6 வார்டு ஒன்றுக்கு 1 மையம் என 11 பல்நோக்கு சேவை மையங்கள் அமைக்கப்படும். மேற்படி மையங்கள் மூலம் மாநகராட்சியில் அமைக்கப்படவுள்ள 395 பொது கழிப்பிடங்கள் சமுதாயம் சார்ந்த குழுக்கள் மூலம் தொண்டு நிறுவனங்கள் வழிகாட்டுதலுடன் பராமரிக்கப்பட உள்ளது. 1.2.2014–ந் தேதி முதல் இந்த மாநகராட்சி அனைத்து கழிப்பிடங்களுக்கான மின் கட்டணத்தினை பொதுநிதியிலிருந்து செலுத்த தீர்மானிக்கப்பட்டது.

நடவடிக்கை

மேலும் கழிப்பிடங்கள் பராமரிக்க கிருமிநாசினி மற்றும் உபகரணங்கள் மாநகராட்சி மூலம் வழங்கப்படும். இதன் மூலம் சமுதாயம் சார்ந்த குழுக்கள் பராமரித்து வரும் 75 கழிப்பிடங்கள் பயன்பெறும். இந்த கழிப்பிடங்கள் அமைந்துள்ள 250 மீட்டர் சுற்றளவு வரை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை ஏற்படும். இதனை மீறி திறந்தவெளியில் மலம் கழிப்போர்கள் மீது அபராதம் விதிப்பது மற்றும் சட்டபடியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நகர் நல அலுவலர் மாரியப்பன், உதவி ஆணையர் தனபாலன், உதவி செயற்பொறியாளர் சிவபாதம், சுகாதார அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.