தினமணி 25.01.2014
உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம்
வேலூர் மாநகராட்சி பகுதியில் தரம் வாய்ந்த மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு இடம் தேர்வு செய்து அமைக்கவேண்டும் என்று மாநகராட்சி கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு கல்விக் குழுத் தலைவர் கே.சூரியாச்சாரி தலைமை தாங்கினார். ஆணையர் ஜானகி ரவீந்திரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
வேலூர் மாநகராட்சி பள்ளிகளில் பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டுவது, வேலூர் சத்துவாச்சாரி மனமகிழ் மன்றத்தைத் திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது, மாநகராட்சி அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
வேலூர் மாநகராட்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு வேலூர் அரசினர் முத்துரங்கம் கலைக் கல்லூரி, சத்துவாச்சாரி உள்ளிட்ட இடங்களில் இடம் தேர்வு செய்ய விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆணையம் மூலம் நடவடிக்கை எடுப்பது, பலவன்சாத்து பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளிக் கட்டடம் மிகவும் சீர்கெட்டுள்ளதை அடுத்து அதை முழுமையாக அகற்றி ரூ.15 லட்சத்தில் புதியக் கட்டடம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.