புதிய மாஸ்டர் பிளானில் பரிந்துரை : போக்குவரத்து பிரச்னை தீர்க்க 2 ரிங் ரோடு, 2 லாரி பேட்டை

Thursday, 03 February 2011 06:39 administrator நாளிதழ்௧ள் - பெ௫ந்திட்டம்
Print

தினகரன்      03.02.2011

புதிய மாஸ்டர் பிளானில் பரிந்துரை : போக்குவரத்து பிரச்னை தீர்க்க 2 ரிங் ரோடு, 2 லாரி பேட்டை

கோவை, பிப் 3:

கோவை யின் வளர்ச்சிக்கான புதிய மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கையில் போக்குவரத்து பிரச்னை தீர்க்க சுற்றுச்சாலைகள், லாரிகள் நிறுத்துவதற்கு இரண்டு இடங்களில் லாரி பேட்டை என பல்வேறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

கோவை மாநகர் மற்றும் கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் 2021ல் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ப தேவையான திட்டங்களுடன் கூடிய 479 பக்கம் கொண்ட புதிய மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டு தேவையான மாற்றங்கள் செய்து இறுதி அறிக்கை பின்னர் வெளியிடப்படும். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு மாஸ்டர் பிளானில் கோவையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில் சில ஏற்கனவே செயலாக்கம் பெற்றுள்ளன. மேலும் புதிய திட்டங்கள் தேவைப்படுகின்றன.

மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

* கோவை மாநகரின் மக்கள் தொகை வரும் 2021ல் 21.46 லட்சமாக இருக்கும்.

குடியிருப்பு பரப்பு 73 சதவீதமாக இருக்கும்

நீலம்பூர்& வாளையார் பைபாஸ்

எக்ஸ்பிரஸ் ரோடாக மாற்ற பரிந்துரை

கோவை மாஸ்டர் பிளானில் சாலை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன. தற்போது கேரளா செல்லும் வாகனங்கள் செல்வதற்கு கொச்சி&சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நீலம்பூரில் இருந்து வாளையார் வரையில் தற்போது நான்கு வழிச்சாலை உள்ளது. இதை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த சாலையை எக்ஸ்பிரஸ் சாலையாக தரம் உயர்த்தவேண்டும். அதேபோல் இந்த சாலையின் இரு புறமும் அருகாமையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதிக்கக்கூடாது என மாஸ்டர் பிளானில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

* குடியிருப்பு பகுதிகளுக்கான பயன்பாடு மொத்த நிலப்பரப்பில் மாநகர பகுதியில் 73.27 சதவீதமாகவும், மாநகரம் அல்லாத உள்ளூர் திட்டக்குழும எல்லைக்குட்பட்ட பகுதியின் மொத்த நிலப்பரப்பில் 71.59 சதவீதமாகவும் இருக்கவேண்டும். 2002ம் ஆண்டில் குடியிருப்பு விகிதம் 57.37 சதவீதமாக இருந்தது.

* மாநகரில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு முக்கிய சாலைகளை இணைக்க இணைப்பு சாலைகள், வெளி வட்ட புறவழிச்சாலை, உள்வட்ட புறவழிச்சாலைகள் தேவை. நவ இந்தியா ரோட்டை அவிநாசி ரோட்டுடன் இணைக்கும் இணைப்பு சாலை 60 அடி அகலத்தில் அமைக்கவேண்டும்.

* கோவை மாநகரின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து வடக்கு பகுதியான தடாகம் ரோட்டுக்கு செல்ல உக்கடம்&செல்வபுரம் புறவழிச்சாலையில் இருந்து குமாரபாளையம், தெலுங்குபாளையம் வழியாக வேலாண்டிபாளையத்தில் தடாகம் ரோட்டில் இணைக்கும் வகையில் ஒரு இணைப்பு சாலை ஏற்படுத்தவேண்டும். சத்தியமங்கலம் ரோட்டையும்& அவிநாசி ரோட்டையும் இணைக்க விளாங்குறிச்சி வழியாக இணைப்பு சாலை ஏற்படுத்தவேண்டும். அதேபோல் வாலாங்குளம் புறவழிச்சாலையில் இருந்து நஞ்சுண்டாபுரம் ரோட்டை இணைக்கும் இணைப்பு சாலை அமைக்கவேண்டும்.

* அவிநாசி ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ரோட்டை இணைப்பதற்கு நிலம்பூர், மைலம்பட்டி, வெள்ளானைப்பட்டி, காளப்பட்டி, சர்க்கார் சாமக்குளம், கொண்டையம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் வழியாக வெளிவட்ட புறவழிச்சாலை அமைக்கவேண்டும். இந்த வெளிவட்ட சாலை 100 அடி அகலத்தில் அமைக்கவேண்டும். அதேபோல் மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து பன்னிமடை, பேரூர், கோவைப்புதூர் வழியாக குனியமுத்தூரில் பாலக்காடு ரோட்டை இணைக் கும் உள்வட்ட புறவழிச்சாலை 100 அடி அகலத்தில் அமைக்கவேண்டும். அவிநாசி ரோட்டில் இருந்து மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு இடிகரை, கீரணத்தம், வெள்ளக்கிணறு வழியாக 80 அடி அகலம் கொண்ட இணைப்பு சாலை தேவை.

* கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிக்க முக்கிய சாலை சந்திப்புகளான உக்கடம் ஒப்பணக்கார வீதி(சோபா கார்னர்), காந்திபுரம் பஸ்ஸ்டாண்ட் , அவிநாசி ரோட்டில் கிருஷ்ணம்மாள் கல்லூரி ஆகிய இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கவேண்டும்.
* ரயில் பாதை கடக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு ஆவரம்பாளையம், விளாங்குறிச்சி, ரத்தினபுரி ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் ஏற்படுத்தவேண்டும்.

* சரக்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக கருமத்தம்பட்டி, போளூவாம்பட்டி ஆகிய இடங்களில் லாரி பேட்டை(டிரக் டெர்மினல்) அமைக்கவேண்டும்.
* பெரியநாயக்கன்பாளையம், பேரூர், வடவள்ளி, மதுக்கரை ஆகிய இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கவேண்டும்.

இவ்வாறு பல்வேறு பரிந்துரைகள் புதிய மாஸ்டர் பிளானில் இடம் பெற்றுள்ளன.