தீபாவளி பட்டாசு கழிவு அதிகரிப்பு மாநகரில் கூடுதலாக 300 டன் குப்பை

Friday, 29 November 2013 10:27 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினகரன்             29.11.2013

தீபாவளி பட்டாசு கழிவு அதிகரிப்பு மாநகரில் கூடுதலாக 300 டன் குப்பை

திருப்பூர், : திருப்பூர் மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் பட்டாசு கழிவுகள் உட்பட 300 டன் அளவுக்கு குப்பைகள் அதிகளவில் சேகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல லட்சம் மக்கள் வசித்து வரும் திருப்பூர் மாநகரில், நாளொன்றுக்கு 28280 டன் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக மாநகராட்சி புள்ளி விவரங்கள்தெரிவிக்கின்றன. 60 வார்டுகளிலும் 831 துப்புரவு ஊழியர்களை கொண்டு குப்பைகள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தீபாவளி பண்டிகையையொட்டி, லட்சக்கணக்கான பொதுமக்கள் வெளியூர் சென்று விட்டநிலையில், கடந்த 3 நாளில் குப்பைகளின் அளவு குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குப்பைகளின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.

 தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் பட்டாசு மற்றும் இதர குப்பை கழிவுகளின் அளவு மிக அதிகமாக இருந்ததாக கூறுகின்றனர்.அவர்கள் கூறுகையில், ‘‘திருப்பூர் மாநகரில் தினமும் 28280 டன்னுக்கு குறையாமல் குப்பை கொட்டப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த 3 நாட்களில் இதன் அளவு கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 3 நாட்களில் நாளொன்றுக்கு சுமார் 6280 டன் குப்பை அள்ளப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பட்டாசு குப்பை என மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை தலா 100 டன் அடிப்படையில் கிட்டத்தட்ட 300 டன் குப்பை அதிகரித்துள்ளதாகவும் கடந்தாண்டை விட தீபாவளி பட்டாசு கழிவுகளின் அளவு இந்தாண்டு அதிகம் எனவும் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே மழை எச்சரிக்கை காரணமாக மாநகரில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை உடனுக்குடன அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சாக்கடை கால்வாய் அடைக்கப்படாத வகையில் பட்டாசு கழிவுகள் உள்ளிட்டவற்றை உடனடியாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டிருந்தனர்.

 அதன்படி மாநகர் முழுவதும் குப்பைகள் அள்ளும் பணி கடந்த இரு தினங்களாக தீவிரமாக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் தீபாவளி விடுமுறை காரணமாக சில பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடந்தது.