மாலை மலர் 15.07.2009
மு.க.ஸ்டாலின் பரிந்துரைப்படி 5 மாநகராட்சி பள்ளி தரம் உயர்வு; மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜூலை. 15-
சென்னை மாநகராட்சி கல்வித்துறை சார்பில் பெருந் தலைவர் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் விழாவாக சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் இன்று நடந்தது. நிகழ்ச்சியில் மாநகராட்சி பள்ளிகளிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 43 பேருக்கு பரிசு வழங்கி மேயர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:-
முதல்–அமைச்சர் கருணாநிதியின் உத்தரவுப்படி பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 83 சதவீதம் தேர்ச்சி பெற்று மிகப்பெரிய புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1 லட்சத்து 37 ஆயிரம் மாணவ– மாணவியர்கள் பயின்று வருகிறார்கள்.
இன்றைய நன்னாளில் சென்னை மாநகராட்சியில் தமிழக துணை முதல்வரிடம் நேற்று வழங்கப்பட்ட ஒரு கோரிக்கை இன்றே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபபட்டுள்ளது.
மண்டலம்-9ல் வார்டு -153ல் வேளச்சேரி, புதுப்பாக்கம் மாநகராட்சி உயர் நிலைப்பள்ளி, வார்டு-131ல் எம்.ஜி.ஆர்.நகர், மாநகராட்சி உயர் நிலைப்பள்ளி, மண்ட லம்-3ல் வார்டு-32ல் கல்யாணபுரம் மாநகராட்சி உயர் நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளும் மேல்நிலைப்பள்ளிகளாகவும், மண்டலம்-3, வார்டு-41ல் திருவேங்கடசாமி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மண்டலம்-8, வார்டு-127ல் கண்ணம்மாபேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளும் உயர்நிலைப்பள்ளிகளாகவும் என புயல் வேகத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுவதாக பரிந்துரைக்கப்பட்டு, இன்று அறிவிக்கப்படுவது சென்னை மாநகராட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய சாதனையாகும் என்று தெரிவித்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.