தினமலர் 19.06.2013
அம்மா’ உணவகங்களில் தயிர் சாதத்திற்கு ஊறுகாய் : செப்.15ம் தேதி முதல் மாலையில் சப்பாத்தி, குருமா
திருநெல்வேலி
: நெல்லையில் “அம்மா’ உணவகங்களில் தயிர் சாதத்திற்கு ஊறுகாய் வழங்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், செப்.15ம் தேதி முதல் மாலையில்
சப்பாத்தி, குருமா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மேயர் விஜிலா
சத்தியானந்த் கூறினார்.இதுகுறித்து மேயர் விஜிலா சத்தியானந்த் கூறியதாவது:
நெல்லை மாநகராட்சி பகுதியில் ஜூன் 2ம் தேதி முதல் 10 இடங்களில் “அம்மா’
உணவகங்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக நடந்துவருகின்றன.
பாளை., மனகாவலம்பிள்ளை
நகர் (மார்க்கெட் பகுதி), மேலப்பாளையம், நெல்லை டவுன் தொண்டர் சன்னதி,
பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் பொதுமக்களின் கூட்டம்
மிக அதிகமாக உள்ளது. தயிர் சாதத்திற்கு “ஊறுகாய்’ வழங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. நெல்லையில் நடந்துவரும் 10 உணவகங்களில் இதுவரை 58
லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.
முதல்வர் உத்தரவுப்படி
செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் மாலையில் சப்பாத்தி, குருமா வழங்க
நடவடிக்கை எடுக்கப்படும். அம்மா உணவகத்திற்கு ஆகும் செலவுகள் யாவும்
மாநகராட்சி பொது நிதியில் இருந்து செலவழிக்கப்படுகிறது. விரைவில் இதற்கான
தொகையை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்வார். நெல்லை மாநகராட்சியில்
விரைவில் கூடுதலாக அம்மா உணவகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மேயர் விஜிலா சத்தியானந்த் கூறினார்.