தினத்தந்தி 20.11.2013
குப்பையில்லாத திட்டத்துக்கு உதவிய 30 குடும்பத்தினருக்கு பாராட்டு சான்றிதழ் மேயர் செ.ம.வேலுசாமி வழங்கினார்

கோவை
மாநகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் ‘சூன்யா’ திட்டத்தை
23–வது வார்டில் கடந்த மாதம் 2–ந் தேதி மேயர் செ.ம.வேலுசாமி தொடங்கி
வைத்தார். அந்த வார்டு முழுவதும், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை
தரம்பிரிக்க தனித்தனி பைகள் வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக
பாஷ்யகாரலு மேற்கு, பொன்னுரங்கம் மேற்கு, வெங்கடசாமி மேற்கு, பெரியசாமி
மேற்கு, திருவேங்கடசாமி மேற்கு ஆகிய 5 வீதிகளில் இந்த திட்டம்
தொடங்கப்பட்டது.
அப்போது முதல் குப்பைகள் தரம்பிரிக்கும் பணி பொதுமக்களின் பங்களிப்புடன்
செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் 4 டன் மறுசுழற்சி
குப்பைகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இதற்காக கோவை மாநகராட்சி திட்டத்துக்கு
முழு ஒத்துழைப்பு அளித்து வரும் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு
மேயர் செ.ம.வேலுசாமி மற்றும் மாநகராட்சி கமிஷனர் லதா ஆகியோர் சான்றிதழ்
மற்றும் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
மற்ற பகுதிகளிலும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்களின்
புகைப்படத்துடன் கூடிய தகவல் பலகை அந்தந்த தெருக்களில் அமைக்கவும்
நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஆதிநாராயணன், சாவித்திரி
பார்த்திபன், கே.ஆர்.ஜெயராமன், வார்டு கவுன்சிலர் மணிமேகலை மற்றும்
கவுன்சிலர்கள் ரங்கராஜ், நியமனக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர்
கலந்து கொண்டனர்.
