தினமணி 15.11.2010
கொசு உற்பத்திக்கு காரணமான 32 டன் உபயோகமற்ற பொருள்கள் அகற்றம்: மேயர் தகவல்
சென்னை தியாகராய நகர் பகுதியில் கொசு உற்பத்திக்கு காரணமாக வீடுகளில் இருந்த உபயோகமற்ற பொருள்களை மாநகராட்சி களப்பணியாளர்கள் அகற்றுவதை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு
சென்னை, நவ.14: மாநகராட்சி சார்பில் கடந்த 15 நாள்களில் மட்டும் கொசு உற்பத்திக்கு காரணமாக வீடுகளில் இருந்த 32 டன் உபயோகமற்ற பொருள்கள் அகற்றப்பட்டுள்ளன என்று மேயர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார்.
வீடுகளில் தேவையற்ற பொருள்களை தேக்கி வைப்பதாலும், சுற்றுப்புறத்தில் நீர் தேக்கி வைப்பதனாலும், கொசுக்கள் உற்பத்தியாகிறது என்பதை வலியுறுத்தி மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய இப்பேரணி காமராஜர் காலனி குடிசைப்பகுதி, கார்ப்பரேஷன் காலனி போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் தெருத்தெருவாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேவையற்ற பொருள்களை வீடுகளில் தேக்கி வைக்க வேண்டாம், வீட்டின் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கி வைக்க விடாமல் பார்த்துக் கொள்வோம் என்று பிரசாரம் செய்தனர்.
இது குறித்து, மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் கூறியது: கொசுக்களினால் பரவும் மலேரியா, டெங்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் 10 மண்டலங்களிலும் 30 குழுக்கள் அமைத்து மேல்நிலைத்தொட்டி, கிணறு, கீழ்நிலைத் தொட்டிகளுக்கு கொசுப்புழுக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் உபயோகமற்ற பொருள்கள், தண்ணீரை தேக்கி வைப்பதனால் கொசுப் புழுக்களும், கொசுவும் உற்பத்தியாகின்றன.
கடந்த 15 நாள்களில் மாநகராட்சியின் 10 மண்டலங்களில் வீடுகளில் இருந்த 32 டன் உபயோகமற்ற பொருள்கள் அகற்றப்பட்டுள்ளன.
தினந்தோறும் 236 புதிய புகை பரப்பும் இயந்திரங்கள் உள்ளிட்டவை மூலம் காலை, மாலை நேரங்களில் கொசுப்புகை பரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
விழிப்புணர்வு பேரணியில் மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் பெ.குகானந்தம், மண்டலக்குழு தலைவர் கே.ஏழுமலை மற்றும் உதவி சுகாதார அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.