தினத்தந்தி 23.12.2013
எண்ணூர் நெடுஞ்சாலை–மணலி சாலையில் போக்குவரத்து நெரிசலை
சமாளிப்பதற்காக ரூ.60 கோடியில் மேம்பாலம் மக்கள் கருத்துக்களை மேயர் சைதை
துரைசாமி கேட்டறிந்தார்

எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில்
போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக ரூ.60 கோடி மதிப்பில் மேம்பாலம்
அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மக்களின் கருத்துக்களை மேயர் சைதை
துரைசாமி கேட்டறிந்தார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
கலந்தாய்வுக்கூட்டம்
முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,
சென்னை மாநகராட்சி பாலங்கள் துறை மூலம் ரூ.60 கோடி மதிப்பிலான பாலங்கள்
கட்டும்பணி குறித்த கலந்தாய்வுக்கூட்டம் சென்னை கொருக்குப்பேட்டை, வேலன்
நகரில் உள்ள வேலன் திருமண மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை
மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை
ஆணையர் டி.ஜி.வினய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எண்ணூர் நெடுஞ்சாலை, மணலி சாலை வடசென்னையில் பிரதான சாலையாகும். இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
60 கோடி மதிப்பில்…
இதை கருத்தில் கொண்டு, எண்ணூர்
நெடுஞ்சாலை, மணலி சாலையில் ரெயில்வே மேம்பாலம் சுமார் 60 கோடி மதிப்பில்
அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரெயில்வே மேம்பாலம் சுற்றுச்சூழல்
பாதிப்பு ஏற்படாத வண்ணம் நவீன தொழில்நுட்பத்துடனும், பொதுமக்களுக்கு
இடையூறு ஏற்படாத வகையிலும் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான திட்ட அறிக்கை 4 மாதங்களுக்குள்
தயாரிக்கப்பட்டு, பின்னர் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்.
இதற்கிடையே இதுகுறித்து, அந்த பகுதிகளில் உள்ள வர்த்தக சங்கங்கள்,
பொதுநலச்சங்கங்கள் ஆகியவைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் சென்னை
மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கருத்துக்களை கேட்டறிந்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.