தினமலர் 05.05.2010
கலப்பட எண்ணெய் விற்பனை: கடைகளில் சுகாதாரத்துறை ஆய்வு
நாமக்கல்: மளிகை கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு எண்ணெயில் கலப்படம் செய்வதாக வந்த புகாரை அடுத்து, சுகாதார ஆய்வாளர்கள் நாமக்கல் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மளிகை கடைகளில் கடலை எண்ணெய்யில் கலப்படம் செய்து விற்பனை செய்வதாக, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சேகர் மற்றும் நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் ஆகியோருக்கு தகவல் வந்தது. அவர்கள் உத்தரவின்பேரில், சுகாதார அலுவலர் முகமது மூசா, உணவு ஆய்வாளர் சிவசண்முகம், தொழில் நுட்ப நேர்முக உதவியாளர் கல்யாணசுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள் பாலசுவாமிநாதன், ராஜகணபதி ஆகியோர் நகராட்சி பகுதியில் உள்ள மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு எண்ணெய்களை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பினர். மேலும், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாத, பேட்ஜ் எண் குறிப்பிடப்படாத உணவு பொருட்கள், சோப்பு, வாசிங் பவுடர் உள்பட 11 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.ஆய்வுகள் தொடர்ந்து நடக்கும். காலாவதி தேதி அச்சிடப்படாத பொருட்களை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என, அதிகாரிகள் எச்சரித்தனர்.