தினமணி 17.08.2013
தினமணி 17.08.2013
சென்னைக்கு தினமும் வீராணம் குடிநீர்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
சென்னை நகருக்கு தினமும் வீராணம் குடிநீர் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
வீராணம் ஏரியில் இருந்து சனிக்கிழமை முதல் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் திறந்து விடப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு சென்னைக்கு
நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கு வகை செய்ய புதிய
வீராணம் திட்டம் எனது தலைமையிலான அரசால் கடந்த 2004-ஆம் ஆண்டில்
தொடங்கப்பட்டது.
மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது அந்தத் தண்ணீர் வீராணம்
ஏரியில் பெறப்பட்டு அந்தப் பகுதியின் பாசனத்துக்கு பயன்படுவதோடு
மட்டுமல்லாமல், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும்
வகையில் வழங்கப்பட்டு வருகிறது.
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 2-ஆம் தேதி
முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டிருந்தேன். இப்போது மேட்டூரில்
இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதன் காரணமாக வீராணம் ஏரியில் 935.20
மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. எனவே, வீராணம் ஏரியில் இருந்து சனிக்கிழமை
(ஆகஸ்ட் 17) முதல் சென்னை மாநகர குடிநீருக்காக நாளொன்றுக்கு 180 மில்லியன்
லிட்டர் (1.8 கோடி லிட்டர்) தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.
தேவை எவ்வளவு? சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு 84 முதல் 87 கோடி லிட்டர்
குடிநீர் தேவைப்படுகிறது. இப்போது சுமார் 55 கோடி லிட்டர் குடிநீர்
விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியில் இருந்து சென்னை நகரின்
குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கும் போது
தண்ணீர் பற்றாக்குறையின் அளவு வெகுவாகக் குறையும் என்று சென்னை குடிநீர்
வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.