தினமணி 19.09.2009
பாதாளச் சாக்கடை இணைப்புகளை உடனடியாகப் பெறவேண்டும்: ஆணையர்
மதுரை, செப். 18: மதுரை நகரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், பொதுமக்கள் பாதாளச் சாக்கடை இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் முடிவுற்று, பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.
எனவே, பாதாளச் சாக்கடை இணைப்புக்குரிய கட்டணம் மற்றும் வைப்புத் தொகையை செலுத்தி இணைப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.
புதிய இணைப்பு பெறுவதற்கு, இணைப்புக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். ரூ. 500 வரை வீட்டு வரி செலுத்துபவர்கள் குடியிருப்பு உபயோகத்துக்கு ரூ. 2,500, குடியிருப்புடன்கூடிய வணிக உபயோகத்திற்கு ரூ. 5 ஆயிரம், வணிகம், தொழிற்சாலை மற்றும் இதர இனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் வைப்புத் தொகையாக செலுத்தவேண்டும்.
ரூ. 501 முதல் ரூ. 1,500 வரை வீட்டு வரி செலுத்துபவர்கள் குடியிருப்பு உபயோகத்துக்கு ரூ. 3,500, குடியிருப்புடன்கூடிய வணிக உபயோகத்துக்கு ரூ. 7,500, வணிகம், தொழிற்சாலை மற்றும் இதர இனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் வைப்புத் தொகையாக செலுத்தவேண்டும்.
ரூ. 1,501-க்கு மேல் வீட்டு வரி செலுத்துபவர்கள் குடியிருப்புக்கு ரூ. 5 ஆயிரம், குடியிருப்புடன்கூடிய வணிக உபயோகத்துக்கு ரூ. 10 ஆயிரம், வணிகம், தொழிற்சாலை மற்றும் இதர இனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் வைப்புத் தொகையாக செலுத்தவேண்டும்.
மேலும், மதிப்பீட்டுடன் சாலை சீரமைப்புக் கட்டணம் மற்றும் மேற்பார்வை கட்டணம், அந்தந்த இடத்திற்கு தகுந்தாற்போல் அலுவலகத்தில் தெரிவிக்கும் தொகையை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தவேண்டும்.
பாதாளச் சாக்கடை இணைப்புக்குத் தேவையான அனைத்து பைப் மற்றும் தளவாட சாமான்கள், இணைப்பு கோரும் விண்ணப்பதாரரின் சொந்த செலவில் வாங்கி உபயோகித்துக் கொள்ளவேண்டும்.
மதிப்பீட்டுத் தொகையை (சாலை சீரமைப்புக் கட்டணம் மற்றும் மேற்பார்வைக் கட்டணம்) செலுத்திய 7 தினங்களுக்குள் புதிய இணைப்பு வழங்கப்படும். சாலை சீரமைப்புப் பணிகள் முடிந்த பின்னர் பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்கப்படமாட்டாது.