தினமணி 06.01.2011

மருத்துவ அலுவலர் ஆகியோருக்கு புதிய வாகனங்களை வழங்குகிறார் மாநகராட்சி
மேயர் மா. சுப்பிரமணியன். உடன் மாநகர
சென்னை, ஜன. 5: அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் நலப் பணி குறித்து கருத்துக்களை சொல்லலாம் என்று மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், கால்நடை மருத்துவ அலுவலர் ஆகியோருக்கு புதிய வாகனங்களை வழங்கி மேயர் பேசியது:
சென்னை மாநகராட்சி சார்பில் 10 மண்டல சுகாதார அலுவலர்களுக்கும், ஒரு கால்நடை மருத்துவ அலுவலருக்கும் 11 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் சுமார் ரூ. 71.90 லட்சம் செலவில் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 356 வாகனங்கள் ரூ.43 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் சென்னை நகரத்தில் உள்ள 1320 சாலைகளை ரூ.117 கோடியில் சீரமைக்கும் பணியினை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆனால் அதிமுகவினர், அரசியல் செய்வதற்காக சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்கள்.
கடந்த 4 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை உயர்த்தாமல் மக்கள் நலப்பணிகள் ஏராளமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. சொத்து வரி சரியாக மதிப்பீடு செய்யப்படுகிறது.
அதேபோல 4 ஆண்டுகளில் மட்டும் ரூ. 3,500 கோடி மதிப்பிலான சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காகப் பூங்காக்கள் கட்டப்பட்டுள்ளன.
பிரதான சாலைகள் சீரமைக்கப்பட்டு, தமிழர் பண்பாட்டை விளக்கும் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. சென்னையில் அதிமுகவைச் சேர்ந்த 7 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் தமிழக அரசு மூலமும், சென்னை மாநகராட்சி மூலமும் நடைபெறும் பணிகளை அறிந்து கொண்டு, உண்மைகளை பேச வேண்டும்.
மேலும் அவர்கள் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும். ஜனவரி 31-ம் தேதி நடைபெறும் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு, மக்கள் பணி குறித்து கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும். உண்மைகளை மறைத்து தவறான பிரசாரம் செய்ய வேண்டாம் என்றார் மா.சுப்பிரமணியன்.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன், துணை ஆணையர் (சுகாதாரம்) ஆஷிஷ்குமார், ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ப.ரவி, நிலைக்குழுத் தலைவர் (சுகாதாரம்) மணிவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.