தினத்தந்தி 23.03.2013
அகதிகள், நரிக்குறவர்கள் குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
சென்னையில் செங்கல் சூளையில் பணிபுரிவோர், கட்டுமான தொழிலில்
ஈடுபட்டுள்ளோர், அகதிகள் தொழில் ரீதியாக இடம் பெயர்ந்தோர், குடிசை
பகுதிகளில் வாழும் தெருவோரக் குழந்தைகள், நரிக்குறவர்கள் மற்றும்
கழைக்கூத்தாடிகள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஒரே இடத்தில் நிலையாக வசிப்பது
இல்லை. இவர்கள் அடிக்கடி இடம் பெயர்வதால், இவர்களின் குழந்தைகளுக்கு
முறையான தடுப்பூசிகள் போடப்படுவதில்லை.
இதனை கருத்தில் கொண்டு இடம் பெயர்ந்தோருக்கு என சிறப்பு போலியோ சொட்டு
மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 22.12.2012 அன்று இடம் பெயர்ந்த 5
வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்ட
குழந்தைகளுக்கும் மீண்டும் தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து தினங்களான
20.01.2013 மற்றும் 24.02.2013 ஆகிய இரண்டு தினங்களிலும் போலியோ சொட்டு
மருந்து அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை (சனிக்கிழமை) சென்னை மாநகரம் முழுவதும் குழுக்கள்
அமைத்து, இடம் பெயர்ந்தோர்கள் வசிக்கும் 844 இடங்கள் கண்டறியப்பட்டு, 5
வயதிற்குட்பட்ட குழந்தைகளை கணக்கிட்டு, ஆயிரத்து 496 குழந்தைகளுக்கு
சிறப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.