தினமலர் 24.02.2010
அனுமதிபெறாமல் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடத்திற்கு ‘சீல்‘
கோவை: ஆவராம்பாளையம் பாரதி காலனியில், அனுமதியின்றி கட்டப்பட்ட நான்கு தள அடுக்குமாடி குடியிருப்பிற்கு, மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் “சீல்‘ வைத்தனர். கட்டட கட்டுமான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஆவராம்பாளையம் பாரதி காலனி பகுதியில், சரஸ்வதி என்பவருக்கு சொந்தமான ஐந்து சென்ட் இடத்தில், மாநகராட்சி அனுமதியின்றி, அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதற் கான பணிகள், சில மாதங்களுக்கு முன் துவங் கியது. தரைதளத்திலிருந்து, நான்கு தளத்திற்கும், மேற்புற கான்கிரீட் போடப்பட்டு, பணிகள் வேகமாக நடந்தது. கட்டடம் கட்ட மாநகராட்சி நகரமைப்பு பிரிவிலிருந்து அனுமதி பெறவில்லை. மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர்கள் புவனேஸ்வரி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட குழுவினர், கட்டட உரிமையாளர் சரஸ்வதிக்கு எச்சரிக்கை விடுத்தனர். முறையாக மாநகராட்சியில் விண்ணப்பித்து, கட்டட அனுமதி பெற வேண்டும்; மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை முறையாக செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.கட்டுமான பணி நடக்கும் பகுதியில் இருந்த செங்கற்கள், ஜல்லிகற்கள், மணல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கட்டட கட்டுமான பணிகள் தொடராமல் இருக்க கட்டடத்திற்கு “சீல்‘ வைக்கப்பட்டது. மாநகராட்சி விதிகளை மீறி பணி மேற்கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.