தினமணி 10.02.2010
அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகை அகற்றப்படும்
மதுரை, பிப்.9: மதுரை மாநகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாநகராட்சி பகுதிகளில், மாநகராட்சி அனுமதியின்றி பல்வேறு இடங்களிலும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சாலைகளின் ஓரங்களில் இரும்புக் கம்பிகள் மூலமும், பஸ் நிறுத்தங்களின் அருகில் எனப் பல்வேறு இடங்களிலும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதை உடனடியாக அகற்றிக்கொள்ளும்படி தனியார் நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற விளம்பரதாரர்கள் அனுமதி எண் மற்றும் உரிமையாளர் பெயர் விவரத்தை விளம்பரப் பலகையில் குறிப்பிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, மதுரை மாநகராட்சிக்குப் பாத்தியப்பட்ட கடைகள், கழிப்பறை, மார்க்கெட்டுகள், சந்தைகள் போன்ற இடங்களில் மாநகராட்சி வழங்கிய அனுமதி உத்தரவு எண் மற்றும் உரிமையாளர் பெயர் பலகை கடையின் முன் கண்டிப்பாக வைக்கப்பட வேண்டும்.
இன்னும் பெயர்ப்பலகை வைக்கப்படாத கடையின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடையைப் பூட்டி மாநகராட்சி பொறுப்பு எடுத்துக் கொள்ளப்படும். மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் அனுமதியின்றி கடை வைக்கப்பட்டுள்ள கடைகள் உடனடியாக அகற்றப்படும்.