தினமலர் 13.12.2013
இளநிலை உதவியாளர் தட்டச்சுப் பணியாளர்களுக்கு நடந்த நேர்முகத்தேர்வு
மதுரை:மதுரை மாநகராட்சியில், இளநிலை உதவியாளர் தட்டச்சுப் பணியாளர்களுக்கு நடந்த நேர்முகத்தேர்வு, இதுவரை இல்லாத அளவிற்கு, நேர்மையுடன் நடத்தி முடித்தார் கமிஷனர் கிரண்குராலா. சிபாரிசு கடிதங்கள், குப்பைக்குச் சென்றன. மாநகராட்சியில், கண்கூடாக நடக்கும் அபத்தங்களில் ஒன்று, பணி நியமனம்.
விரும்பியவர்களுக்கு, விரும்பிய இடத்தில், விரும்பியதை பெற்று பணியமர்த்தும் கலாசாரம், காலம் தொட்டே நடந்து வருகிறது. முந்தைய கமிஷனர் நந்தகோபால் இருந்த போது, காலியாக இருந்த 40 இளநிலை உதவியாளர் தட்டச்சுப்பணியாளர் பணிக்கு, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், அறிவிப்பு வெளியாகி; 175 பேர் நேர்முகத்தேர்வில் பங்கேற்க, அழைப்புவிடுக்கப்பட்டது. 32 வயதிற்குட்பட்டவர்களை மாநகராட்சி கேட்டது; அவர்கள் அனுப்பியதோ, 40 வயதிற்கு மேற்பட்டவர்கள். அதிலும், சிலர் 50ஐ கடந்தவர்கள். நேர்முகத்தேர்வுக்கு ஏற்பாடு செய்யும் நேரத்தில், வேலூர் கலெக்டராக நந்தகோபால் மாறுதலானார். புதிய கமிஷனராக கிரண் குராலா பொறுப்பேற்றதும், நேர்முகத்தேர்விற்கு ஏற்பாடு நடந்தது.
நேற்று காலை நேர்முகத்தேர்வு தொடங்கியது. அழைத்ததில், 50 பேர் “ஆப்சென்ட்’; 125 பேர் வந்திருந்தனர்.”அவருக்கு கொடுத்தாச்சு… அங்கே பார்த்தாச்சு… நமக்கு முடிஞ்சு போச்சு… அடிக்கிற இடத்துல அடிச்சாச்சு…’ என, “மனக்கோட்டை’ கட்டி வந்தவர்களுக்கு, “ஆப்பு’ அடித்தார், கமிஷனர். இதுவரை இப்படியொரு நேர்முகத் தேர்வு நடந்திருக்க வாய்ப்பில்லை. முதலில், சான்றிதழ் சரிபார்ப்பு, அதன் பின், “டைப் ரைட்டிங் மிஷினில்’ தமிழில் 10 நிமிடம், ஆங்கிலத்தில் 10 நிமிடம், “டைப்’ செய்ய வேண்டும். பின், கம்ப்யூட்டரில், தமிழில் 10 நிமிடம், ஆங்கிலத்தில் 10 நிமிடம் “டைப்’ செய்ய வேண்டும்.
அதன் பிறகு தான், மற்றவை. கமிஷனரின் இந்த உத்தரவைக் கேட்டு ஆடிப்போன மாநகராட்சி பணியாளர்கள், “சார்… நம்மிடம் ஒரு “டைப் மிஷின்’ கூட இல்லை; அதுவும் இல்லாமல், நமக்கு “டைப் ரைட்டிங்’கில் வேலை இல்லை,’ என்றனர். “தகுதியான பணியாளர்கள்தான், நமக்கு வேண்டும்; நம்மிடம் இல்லையென்றால், வெளியில் வாடகைக்கு வாங்குங்க…’ என, கமிஷனர் உத்தரவிட, அவசரம் அவசரமாக “மிஷின்கள்’ தேடி கொண்டுவரப்பட்டன. தேர்வை, கமிஷனர், தன் அறையில் இருந்தபடி, வீடியோ மூலம், தேர்வை பார்வையிட்டார். சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த கருத்தரங்கு கூடம், கம்யூட்டர்கள் வைத்திருந்த மேயர் கலந்துரையாடல் அரங்கில், “கேமரா’ வசதியில்லை என, அதிகாரிகள் கூறியபோது, “கேமரா வைத்த பின், நேர்முகத் தேர்வை தொடங்குங்கள்,’ என கூறிவிட்டார்.
அதனால், அவசரமாக கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவற்றையும், அறையிலிருந்தபடி கமிஷனர் பார்வையிட்டார். முதல் நாள் இரவிலிருந்தே, கமிஷனர் அறை நோக்கி, நிறைய சிபாரிசு கடிதங்கள் வந்தன; அவை அனைத்தும், “குப்பைத் தொட்டிக்கு’ சென்றதுடன், நேற்று முன்தினம் முதலே, பிறரை சந்திப்பதையும் கமிஷனர் தவிர்த்தார். இதனால், “திறமைக்கு வாய்ப்புக்கு கிடைக்கும்,’ என, தேர்வுக்கு வந்தவர்கள், மகிழ்ச்சியடைந்தனர்.