தினமணி 18.05.2010
ஒட்டன்சத்திரம் பேரூராட்சியில் பொதுக் குழாய், தெரு விளக்கு, தார்ச் சாலை, வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அர.சக்கரபாணி வேண்டுகோள்ஒட்டன்சத்திரம், மே 18: ஒட்டன்சத்திரம் சிறப்புநிலை பேரூராட்சியில் பொதுக் குழாய்கள், தார் சாலைகள், தெரு விளக்குகள், வடிகால் அமைக்க பேரூராட்சி மன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்தப் பணிகளை விரைந்து முடிக்க அரசு தலைமைக் கொறடா அர.சக்கரபாணி கேட்டுக்கொண்டார்.
ஒட்டன்சத்திரம் சிறப்புநிலை பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம், மன்ற வளாகத்தில் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி கண்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வனிதா ஆறுமுகம்,செயல் அலுவலர் ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், அரசு தலைமைக் கொறடாவுமான அர.சக்கரபாணி கலந்து கொண்டார்.
பேரூராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைகளை தீர்க்கவும், குடிநீர் வழங்குதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து போர்க்கால அடிப்படையில் புதிய தெருக்குழாய்கள் அமைக்கவும் அவர் ஆலோசனை வழங்கினார்.
மேலும் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுக்கும் புதிதாக தெருவிளக்கு அமைக்கவும், பராமரிப்புப் பணிகள் செய்யவும், புதிதாக வடிகால் அமைக்கவும், பராமரிப்பு செய்யவும் ஆலோசனை வழங்கினார். முடிவில் பேரூராட்சி எல்லைக்குள்பட்ட 15 பேருக்கு இலவசமாக பிறப்பு–இறப்பு சான்றிதழ்களை வழங்கினார்.