தினமலர் 11.06.2010
கட்டட அனுமதி வழங்க உள்ளாட்சிகளுக்கு அனுமதி
போடி: தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் நான்கு குடியிருப்புகள் அல்லது நான்காயிரம் சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு உள்ளாட்சிகளே அப்ரூவல் வழங்கலாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி தவிர நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் வீடுகட்ட, தரை தளம் அமைக்க, வணிக வளாக கட்டடம் கட்ட என ஆயிரம் சதுர அடி வரை உள்ளாட்சி நிர்வாகமே அப்ரூவல் வழங்கி வந்தது. இதற்கு மேல் அளவு உள்ள இடங்களில் கட்டடம் கட்டுவதற்கு நகர ஊரமைப்பு இயக்குனரின் அனுமதி பெற வேண்டியதிருந்தது. இதனால் உரிய அனுமதி வழங்க உள்ளாட்சி நிர்வாகத்திற்கு கால தாமதம் ஏற்பட்டு வந்தது. மேலும் நிர்வாக அனுமதி கிடைக்கும் வரை பொதுமக்கள் பல்வேறு வகையில் சிரமம் அடைந்து வந்தனர். தற்போதைய அரசு உத்தரவுப்படி 2010 ஜூன் 1 முதல், நான்கு குடியிருப்புகள் அல்லது நான்காயிரம் சதுரடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கும், வணிக வளாக தரை தளம் மற்றும் முதல் தளமும், இரண்டாயிரம் சதுர அடிக்குள் கட்டடம் கட்டடம் கட்ட உள்ளாட்சி நிர்வாகமே அனுமதி வழங்கலாம்.மேலும், அப்ரூவல் பெற்ற மனையிடங்களில் சப்–டிவிசன் பெற உள்ளாட்சி நிர்வாகமே அனுமதி வழங்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.