தினமலர் 21.06.2010
கட்டிடங்களுக்கு திட்ட அனுமதிவழங்கஉள்ளாட்சிகளுக்கு அதிகாரம்: கலெக்டர்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி உள்ளாட்சிகள் வழங்கிட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.கலெக்டர் அமுதா வெளியிட்ட அறிக்கை:வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறையின் நடப்பாண்டுக்கு மானிய கோரிக்கை மீதான அறிவிப்புகளில், “சென்னை பெருநகர் பகுதி நீங்கலாக தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் நான்கு குடியிருப்புகள் அல்லது 4,000 சதுர அடிக்கள் கட்டப்படும் கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகார ஒப்படைப்பு வழங்கப்படும்‘ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நகர் ஊரமைப்பு இயக்குனர் செயலாணைப்படி உள்ளூர் திட்ட குழுமம், புதுநகர் வளர்ச்சி குழுமத்தின் கீழ் உள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கும் நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 49ன் கீழ் திட்ட அனுமதியும், பிற முழுமைத் திட்ட அறிவிக்கப்படாத பகுதிகளில் அமையும் உள்ளாட்சிகளின் தொழில் நுட்ப அனுமதியும், அனைத்து விதிகளுக்கு உட்பட்டு (தமிழ்நாடு மாவட்ட நகராட்சி சட்டம் 1971, ஊராட்சி சட்டம் 1997, முழுமை திட்ட விதி, விரிவு அபிவிருத்தி திட்ட விதி மனைப்பிரிவு நிபந்தனைகள்) உள்ளாட்சிகளுக்கு ஜூலை முதல் தேதி முதல் மனை ஒப்புதலுடன் கூடிய கட்டிட அனுமதி வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.நான்கு குடியிருப்புகள் மற்றும் 4,000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட கட்டிடங்கள், 2,000 சதுர அடிக்குள் கட்டப்படும் வாகன நிறுத்துமிடத்துக்கான தரை தளம் மற்றும் முதல் தளம் கொண்ட வணிக வளாகம் மற்றும் மனை ஒப்புதல் வழங்கலாம்.