கோவை மாநகராட்சியில் மூலிகை உணவகம் திறக்க முடிவு நான்கு பேர் குழுவுக்கு சென்னையில் இரண்டு நாள் பயிற்சி
சென்னை:கோவை மாநகராட்சி அலுவலகத்தில், மூலிகை உணவகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால், நான்கு பேர் கொண்ட குழுவினருக்கு, சென்னை மாநகராட்சி மூலிகை உணவகத்தில், இரண்டு நாள் பயிற்சி நேற்று துவங்கியது. ரூ.15க்கு அளவு சாப்பாடு: சென்னை மாநகராட்சியில், மூலிகை உணவகம் இயங்கி வருகிறது.
இங்கு காலை முதல் மாலை வரை, 2 ரூபாய்க்கு மூலிகை டீ, மூலிகை இட்லி, தோசை, பச்சை பயிறு பொங்கல், கேழ்வரகு புட்டு, மூலிகை அல்வா ஆகியவையும், ஆவாரம்பூ சாம்பார், வேப்பம்பூ ரசம், கீரை கூட்டு, பிரண்டை துவையலுடன், 15 ரூபாய்க்கு அளவு சாப்பாடும் வழங்கப்படுகின்றன.இங்கு தினமும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உணவருந்தி செல்கின்றனர்.
கோவையில் திறக்க முடிவு: இந்த மூலிகை உணவகம் குறித்து அறிந்த கோவை மாநகராட்சி கமிஷனர், கோவை மாநகராட்சி அலுவலகத்திலும் மூலிகை உணவகத்தை திறக்க முடிவு செய்துள்ளார்.இதற்காக சித்த மருத்துவர் பூமிகா, ஆயுர்வேத மருத்துவர் செண்பகம், சமுதாய அமைப்பாளர்கள் சாவித்ரி, சந்திரா ஆகியோர் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழுவினரை, சென் னையில் உள்ள மூலிகை உணவகத்தில் சிறப்பு பயிற்சி பெற, கோவை மாநகராட்சி கமிஷனர் அனுப்பி வைத்துள்ளார்.அறிக்கை தாக்கல்இந்த குழுவினர், நேற்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் சைதை துரைசாமியை சந்தித்தனர்.
மாநகராட்சி மூலிகை உணவகத்தின் செயல்பாடுகள், உணவுகள் தயாரிக்கும் முறை, செலவினம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மூலிகை உணவக அமைப்பாளரும், சித்த மருத்துவருமான வீரபாபுவிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.இன்று பயிற்சியை நிறைவு செய்யும் இந்த குழுவினர், ஒரு வாரகாலத்தில் கமிஷனருக்கு அறிக்கை தாக்கல் செய்வர். வெகு விரைவில், கோவை மாநகராட்சியில், மூலிகை உணவகம் திறக்கப்பட உள்ளது.