தினத்தந்தி 24.10.2013
சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் தீபாவளி பட்டாசு சிறப்பு விற்பனை மேயர் மல்லிகா பரமசிவம் தொடங்கி வைத்தார்

சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் தீபாவளி பட்டாசு சிறப்பு விற்பனையை ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் தொடங்கி வைத்தார்.
சிறப்பு விற்பனை
சிந்தாமணி கூட்டுறவு அங்காடிகளில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை
முன்னிட்டு பட்டாசுகள் சிறப்பு விற்பனை செய்யப்படும். ஈரோடு பஸ்நிலையத்தில்
உள்ள சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் பட்டாசுகள் சிறப்பு விற்பனை
நடைபெற்று வருகிறது. இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு
சிந்தாமணியின் தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். துணை மேயர்
கே.சி.பழனிசாமி முன்னிலை வகித்தார். விழாவில் ஈரோடு மாநகராட்சி மேயர்
மல்லிகா பரமசிவம் கலந்துகொண்டு பட்டாசு சிறப்பு விற்பனையை தொடங்கி
வைத்தார்.
இதுகுறித்து சிந்தாமணி தலைவர் ஜெகதீசன் கூறியதாவது:–
ரூ.1½ கோடிக்கு இலக்கு
ஈரோடு மாவட்டத்தில் 13 சிந்தாமணி கிளைகள் உள்ளன. இதில் ஈரோடு
பஸ்நிலையத்தில் உள்ள கிளையில் இன்று (நேற்று) தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு
சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. இதேபோல் ஈரோடு சம்பத்நகர்,
மூலப்பாளையம், சூரம்பட்டி நால்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் வருகிற
25–ந் தேதியும் (நாளை),
மற்ற கடைகளில் வருகிற 28–ந் தேதியும் பட்டாசு சிறப்பு விற்பனைகள் தொடங்கப்பட உள்ளது.
இங்கு 500 வகையான பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப ரூ.185–ல் இருந்து ரூ.1,795 வரை உள்ள
கிப்ட் பாக்ஸ்கள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.1 கோடியே 20
லட்சத்துக்கு பட்டாசுகள் விற்பனை ஆனது. இந்த ஆண்டு ரூ.1 கோடியே 50
லட்சத்துக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்படும் என்று இலக்கு
நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு சிந்தாமணி தலைவர் ஜெகதீசன் கூறினார்.
விழாவில் சிந்தாமணி மேலாண்மை இயக்குனர் யசோதாதேவி, ஈரோடு மாநகராட்சி
மண்டல தலைவர்கள் மனோகரன், காஞ்சனாபழனிசாமி, கேசவமூர்த்தி உள்பட பலர்
கலந்துகொண்டனர்.